அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கம் போல் அல்லாடிக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனால் தனிக்கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.
பழனிசாமிக்கும் பாஜகவுக்கும் இடையே மாட்டிக்கொண்டு, ஒரு கட்டத்தில் இரு தரப்புமே கைவிட்ட நிலையில் நடுவில் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார் பன்னீர்செல்வம்.
அமமுக என்று தனிக்கட்சி கைவசம் இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் அல்லது தவெகவில் இணையலாம் என்ற வாய்ப்புகள் டிடிவி தினகரனுக்கு இருக்கின்றன. அப்படி ஒரு வாய்ப்பு தனக்கில்லாததால் தனிக்கட்சி தொடங்கியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தார் பன்னீர்செல்வம்.

இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி அன்று மதுரையில் மாநாடு நடத்துவது என்று முடிவெடுத்தார். முன்னதாக சென்னையில் 14.7.2025ல் நடந்த ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் மாநாடு நடத்துவது என்று முடிவானது.
கழக ரீதியாக உள்ள 89 மாவட்ட செயலாளர்கள் மூலம் தமிழ்நாடெங்கிலும் செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்துவது, வைத்திலிங்கம் தலைமையிலான குழு கழக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது, இந்த கூட்டங்கள் நிறைவான பின்னர் இறுதியாக மதுரையில் 4.9.2025 வியாழக்கிழமை மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவது என்று அந்த கூட்டத்தில் முடிவானது.
’’எதிர்காலத்தில் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது அங்கே நிறைவேற்றப்படும்’’ என்று பன்னீர்செல்வம் அப்போது சொன்னபோது, ‘தனிக்கட்சி’முடிவைத்தான் அவர் சூசகமாகச் சொல்கிறார் என்ற பேச்சு எழுந்தது. ‘’கூடி கலைகின்ற மாநாடாக இருக்காது. லட்சியம் குறித்து அறிவிக்கும் மாநாடாக இருக்கும்’’என்று பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னதால் நிச்சயம் தனிக்கட்சிதான் என்ற பேச்சு உறுதியானது.

இதற்கிடையில் செங்கோட்டையன் முன்வந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் சென்றதால் மாநாடு முடிவை கைவிட்டார் பன்னீர்செல்வம். செங்கோட்டையனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து அவரும் தவெக பக்கம் சென்றுவிட்டதால் திரிசங்கு சொர்க்கத்திலேயே அல்லாடிக் கொண்டிருந்தார் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் செங்கோட்டையன் மூலமாக தவெகவில் இணைய பன்னீர்செல்வத்திற்கு அழுத்தம் தரப்பட்டு வந்தது. இதை அறிந்த அமித்ஷா, பன்னீர்செல்வமும் தவெக சென்றுவிட்டால் அதிமுக ரொம்பவே பலவீனமாகிவிடும். அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதகமாக போய்விடும் என்பதை உணர்ந்து பன்னீர்செல்வத்தை டெல்லியில் அனுப்பி பேசி இருக்கிறார்.
அமித்ஷாவை பன்னீர்செல்வம் சந்தித்தது, தனிக்கட்சி தொடங்கி தேசிய ஜனநாயக கட்சியில் இணைவதற்காகத்தான் என்ற பேச்சு எழுந்தது. இதை அறவே மறுக்கிறார் பன்னீர்செல்வம். அவர், ’’நான் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை’’ என்கிறார் அழுத்தமாக.
’’பிரிந்தவர்கள் இணைவதற்காகவே அமித்ஷாவை சந்தித்தேன். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன்’’என்று பன்னீர்செல்வம் சொல்வதன் மூலமே, அவர் தனிக்கட்சி தொடங்கும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாகிறது.

தவெக பக்கம் வரச்சொல்லி செங்கோட்டையன் அழுத்தம் கொடுப்பதாக வந்த செய்திகளையும் அவர் மறுக்கிறார். ‘’செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த பிறகு நான் அவரிடம் பேசவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை’’என்கிறார்.
’’தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை எடுத்துச்சொன்னேன். அமித்ஷா கேட்டுக்கொண்டார்’’என்று பன்னீர்செல்வம் சொல்வதன் மூலமே அதிமுகவில் அமித்ஷா மூலம் ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது என்பது தெரிகிறது. பன்னீர்செல்வத்தின் பேச்சிலும் அந்த நம்பிக்கை தெரிகிறது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்ற சாவியை அமித்ஷா தந்ததால் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுபட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.
