
பாமகவில் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே விரிசல் அதிகரிக்கும் நிலையில், இத்தனைக்கும் காரணம் முகுந்தன் தானே? என்று கட்சியினரிடையே சலசலப்பு எழுந்திருக்கிறது.
தன்னால் கட்சிக்குள் இத்தனை பெரிய களேபரம் நடக்கும் என்றும் எதிர்பார்த்திராத முகுந்தன், இத்தனை பிரச்சனைக்கும் காரணமாக இருக்கும் தனது பாமக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும் போதெல்லாம் ராமதாசின் மகள்கள்தான் பஞ்சாயத்து பேசி சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்போது ராமதாசின் மூத்த மகளின் மகன் முகுந்தன் பரசுராமன் மூலமாகவே பிரச்சனை வர, அது காட்டுத்தியாக பரவ, விலகல் கடிதம் மூலம் அந்த தீயை அணைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

பொதுக்குழுவில் முகுந்தனின் நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்பினை அன்புமணி காட்டியும் கூட விடாப்பிடியாக நியமன கடிதத்தைக் கொடுத்தார் ராமதாஸ். இளைஞரணி தலைவர் என்றாலும் அதற்குரிய பொறுப்பினை ஏற்று கட்சியில் முகுந்தன் செயல்பட முடியாதபடி அன்புமணி முட்டுக்கட்டை போட்டு வந்ததால், வன்னியர் சங்க மாநாட்டு மேடையிலும் முகுந்தனுக்கு நாற்காலி ஒதுக்க அன்புமணி சம்மதிக்காததால் இளைரணி தலைவருக்கு உரிய பொறுப்பினை ஏற்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள் என்று ராமதாஸ் உத்தரவிட, பதிலுக்கு அன்புமணி எதிர்வினை காட்ட, பாமகவில் ராமதாஸ் – அன்புமணி மோதல் உச்சகட்டத்தை எட்ட, தன்னால் இத்தனை பிரச்சனை வேண்டாம் என்று, இத்தனை பிரச்சனைக்கும் காரணமாக இருக்கும் அன்புமணிக்கே விலகல் கடித்தத்தை அனுப்பி வைத்திருக்கிறார் முகுந்தன்.

‘’பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.’’என்று அந்த விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ராமதாஸ் அளவில் மட்டுமே செயல் தலைவராக இருந்தாலும், கட்சியில் தலைவராகவே இருக்கும் அன்புமணி, முகுந்தனின் விலகல் கடிதத்தின் மீது என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதுதான் சரியானது என்று ராஜினாமாவை அவர் ஏற்றுக்கொள்ளவே வாய்ப்பிருக்கிறது என்கிறது தைலாபுரம் வட்டாரம்.