
ஒரு மூத்த அரசியல்வாதியே இப்படி புலம்பும் அளவிற்கு பாமகவில் பிரச்சனை சமாளிக்க முடியாத அளவிற்கு உள்ளது.
தந்தை – மகன் மோதலின் இக்கட்டான சூழலில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள் பாமக மூத்த நிர்வாகிகள். இதில் நெருக்கடியால் மன உளைச்சல் ஏற்பட்டதால், யாருக்கும் தெரியாமல் எங்காவது ஓடப்போகிறேன் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார் முத்த அரசியல்வாதி ஜி.கே.மணி.
நீயா? நானா? என்கிற தந்தை மகன் போட்டியில் பல மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார் ராமதாஸ். இன்று கூட கடலூரின் 4 மாவட்டச் செயலாளர்களை மாற்றி அறிவித்துள்ளார் ராமதாஸ். யாரை மாற்றினாலும் அவர்களை மீண்டும் உடனடியாக நியமனம் செய்வேன் என்று சொல்கிறார் அன்புமணி. யாருக்கு அதிகாரம்? என்ற போட்டியில் கட்சியின் நிலைமை பதைபதைப்பில் உள்ளது.

தந்தை – மகன் விரிசலுக்கு காரணம் பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணிதான் என்ற பேச்சு பரவி வருகிறது. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை பாமகவில் முக்கிய பொறுப்பில் நியமனம் செய்தபோது அன்புமணி அதை தடுத்துள்ளார். பொதுக்குழுவுக்கு குடும்பத்துடன் வந்த தமிழ்க்குமரனை அரங்கத்திற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கிறார் அன்புமணி. ஜி.கே.மணியிடன் இருந்த தலைவர் பதவியை தானே பிடுங்கி வைத்திருக்கிறார் அன்புமணி. இதனால் பாமகவின் தற்போதைய பிரச்சனைக்கு காரணம் ஜி.கே.மணிதான் என்ற பேச்சு பரவுகிறது.
இதுகுறித்து தைலாபுரத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, ராமதாஸ் – அன்புமணியின் விரிசலுக்குக் காரணம் ஜி.கே.மணிதான் என்று வரும் செய்தியை மறுக்கிறார் மணி.
இப்படிப்பட்ட செய்தியை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார். ’’நான் அப்படிப்பட்ட மனுசன் இல்ல. நான் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வாழ்ந்துதான் இந்த பொறுப்புக்கு வந்தேன். பதவி, பணத்திற்காக ஆசைப்பட்டிருந்தால் நான் இருக்க வேண்டிய இடம் எங்கேயோ இருந்திருக்கும். நான் கட்சியை விட்டு போகப்போகிறேன் என்று சொல்கிறார்கள். அதைக்கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.

பாமகவுக்கு இது சோதனைக்காலம். 35 வருசமா கட்சியில் உழைத்துக் கொண்டிருக்கும் நான் கட்சிக்கு எதிராக செயல்படுவேனா?’’என்று கேட்கிறார்.
‘’மருத்துவர் அய்யா 45 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளவர். அன்புமணி அய்யா மத்திய அமைச்சராக இருந்தவர். இருவருக்குமே நல்ல அனுபவம் இருக்குது. என்னால மட்டுமல்ல வேறு யாராலயும் இந்த பிரச்சனை வரல. காலச்சூழல் இப்படி நடக்குது’’ என்று சொல்லும் ஜி.கே.மணி,
’’மூத்த அரசியல்வாதிகள் சிலர் எனக்கு போன் செய்து, உங்க மேல் நிறைய கல்லடி படுகிறது என்று சொல்கிறார்கள். காய்ச்ச மரம் கல்லடி படத்தானே செய்யும்.
நான் ரெண்டு முடிவு எடுத்திருக்கிறேன். ஒண்ணு…கட்சிக்கு தெரியாம, யாருக்கும் தெரியாம, குடும்பத்துக்கும் தெரியாம நாட்டை விட்டு தலைமறைவாகிடணும். அப்படி இல்லேன்னு சொன்னா நான் உயிரோடு இருக்கக்கூடாது. இது ரெண்டுதான் என்னோட முடிவு. எவ்வளவு மனசு கஷ்டம் இருந்தா இதை பொதுவெளியில் சொல்லுவேன். இத புரிஞ்சுக்குங்க’’ என்று கண்ணீர் விடுகிறார்.

பாமகவில் தற்போது ஒவ்வொரு நாளும் நடக்கின்ற நிகழ்வுகள் தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்த ஜி.கே.மணியிடம், மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பாமக பொதுக்குழு கூட வேண்டும். பாமக சட்ட விதிகளின் படி அன்புமணியை தலைவராக பொதுக்குழு தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் தலைவரா? இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார் ஜி.கே.மணி.
அதே நேரம், ‘’பொருளாளர் திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஒரு பொறுப்பாளரைக் கூட மாற்ற வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று அய்யாவிடம் சொன்னால், அவ்வளவு மனவேதனை இருக்கிறது. மன உளைச்சலில் இருக்கிறேன். எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்று அய்யா வேதனைப்படுகிறார். இருந்தாலும் கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்’’ என்கிறார்.
மன உளைச்சலில் இருப்பதாக பாமகவின் தலைவர் ராமதாசும், செயல் தலைவர் அன்புமணியும், கவுரவ தலைவர் ஜி.கே.மணியும் சொல்வது அதிர்ச்சி என்றால், தலைமறைவாகப்போகிறேன் என்று ஒரு மூத்த அரசியல்வாதி சொல்கிறார் என்றால் சமாளிக்க முடியாத அளவிற்கு கட்சியில் அவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது.
v8tzym