
அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்றதும் அரசின் செலவினங்களைக் குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ‘Department of Government Efficiency’ என்னும் துறை உருவாக்கப்பட்டது. இத்துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை டிரம்ப் அரசு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், வரிகள் தொடர்பாக ’One Big Beautiful Bill’ என்ற மசோதாவை டிரம்ப் கொண்டு வந்தார். இதில், எலான் மஸ்க் தலைமையிலான செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக, மக்களுக்கு ஏராளமான வரிச் சலுகைகள், இராணுவ செலவினங்கள் அதிகரித்தல் போன்ற அம்சங்கள் இருந்ததினால் மஸ்க் இதனை எதிர்க்கத் தொடங்கினார். மேலும், இது நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், மின்சார வாகனங்கள் விற்பனையில் அரசு கடன் உதவி தொடர்பான திருத்தமே எலான் மஸ்கின் இந்த எதிர் மனநிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நண்பர்களாக இருந்த எலானும் டிரம்பும் இப்படி முட்டிக் கொள்வது ஒருபுறம் இருக்க. இந்த One Big Beautiful Bill அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கும் பொருளாதார ரீதியில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தவுள்ளது.
இந்தியர்களுக்கு என்ன பிரச்சனை:
அமெரிக்கக் குடிமக்களாக இல்லாமல், விசா, கிரீன் கார்டு மூலம் தங்கி இருப்பவர்கள் பிற நாடுகளுக்குச் செய்யும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்க இம்மசோதா வழிவகை செய்கிறது. இதனால், அமெரிக்காவில் வசிக்கும் 45 லட்ச இந்தியர்கள் பாதிக்கக்கூடும்.

இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி 2023-24 நிதியாண்டில், வெளிநாடுகளிலிருந்து 118.7 பில்லியன் டாலர் இந்தியாவிற்கு வந்துள்ளது. அதில், 32 பில்லியன் டாலர் பணம் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. இதில் 5 சதவீதம் என்பது 1.6 பில்லியன் டாலராகும், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 13.7 ஆயிரம் கோடி வரியாக அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டும்.
இந்த வரி பணப்பரிமாற்றத்தை மட்டுமின்றி அமெரிக்காவில் முதலீடு செய்து அதனைத் திரும்பப் பெற நினைக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
சில மாதம் முன்னர் பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்த டிரம்ப். தற்போது பணப் பரிவர்த்தனைக்கு 5 சதவீதம் வரி விதித்துள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தின் தான் தான் போரை நிறுத்தியதாக தொடர்ந்து பேசி வந்தார். இந்திய பிரதமரை தனது நண்பர் என சொல்லிக்கொள்ளும் டிரம்ப், தொடர்ந்து இந்தியர்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரான கருத்தையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். ஆனால், இவற்றைப்பற்றி இதுவரையில் மத்திய அரசு தரப்பில் எந்த எதிர் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.