
இந்த வரலாறு தெரியாத விஜய் ரசிகர்கள் என்னை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. வேண்டுமானால் உங்களை தலைவனை அழைத்து வாருங்கள். அவரோடு நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன்….
தவெகவினர் #ஈனப்பிறவி_வேல்முருகன் என்ற ஹேஷ்டேக்கினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரின் எம்.எல்.ஏ.பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகளை வலுத்து வருகின்றன
ஏன் இந்த எதிர்ப்பு?
பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்து பாராட்டி வருகிறார் விஜய். அந்த பாராட்டு விழாவில் விஜயின் மேல் கொண்ட அன்பில் மாணவ, மாணவிகள் அவரை கட்டிப்பிடிப்பதையும், பாசத்துடன் அவர்களை விஜய் அரவணைப்பதையும் கடுமையாக விமர்சித்திருந்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன். இதனால் தவெக சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

என்ன பேசினார் வேல்முருகன்?
’’2 கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டா பயலுக.. நான் நடிகன குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான்..நாளைக்கு மாற்றான் மனைவியாக வாழப்போற பொண்ணை அப்பன், ஆத்தா, ஆயிரக்கணக்கான ஊடகங்கள் முன்னால.. ஒரு சினிமா கூத்தாடிப்பயல கட்டிப்பிடித்து மு*****கொடுக்க அனுமதிக்கிறான். இது என்ன ஈனப்பிறவி. தமிழனோட பிறவியா இது?’’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார் வேல்முருகன்.
போராட்டம்:
மாணவிகளையும், பெற்றோர்களையும் கொச்சையாகப் பேசிய வேல்முருகன் எம்.எல்.ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடிதம் அனுப்பி இருக்கிறது.
தவெக பிரமுகரும், நடிகருமான பாலாஜி தலைமையில் வேல்முருகனை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

வலுக்கும் கண்டனம்:
’’இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட உங்களை, உங்கள் தொகுதியில் ஏதோ ஒரு பெண் குழந்தை உங்களை அண்ணனாக அல்லது தந்தையாக எண்ணி பாசத்தால் தழுவினாலும் உங்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் இருக்குமா? உங்கள் தொகுதி பெண்களை, சகோதரிகளை இப்படி தான் நீங்கள் பார்த்துள்ளீர்களா? உங்கள் குடும்பத்து பெண்களும் யாரையேனும் சகோதரனாக எண்ணி பழகினாலும் உங்கள் வார்த்தைகள் அவர்கள் மீது இப்படி தான் இருக்குமா?’’ என்று கேட்கிறார் தவெக மாநில இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ்.
அவர் மேலும், ‘’பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண் குழந்தை தான் அண்ணனாக, தந்தையாக நினைத்து ஒருவரை பாசத்துடன் அரவணைப்பதை கூட ஆபாசமாக பார்க்கின்ற பார்வை எப்படிப்பட்ட ஈனத்தனமான செயல். உங்களது கருத்து, ஒட்டுமொத்த பெண் சமூகத்தை கீழ்த்தரமாக இழிவு படுத்தும் வார்த்தைகள் என்பதை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்’’என்கிறார்.
’’தமிழ் பெண்களை கீழ்த்தரமாக பேசி அவமானப்படுத்திய திமுக வின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

இதை விட பெண்களை பெற்றவர்களை அவமானபடுத்த முடியாது என்ற அளவிற்கு கீழ்த்தரமாக பேசியதற்கு வேல்முருகன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். வேல்முருகனின் பேச்சு பெண்களின் மானம், மரியாதை, சுதந்திரத்திற்கு கூட பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது’’ என்கிறார் பாஜக மாநில துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி .
விளக்கம்:
தன் கருத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிருக்கிறார் வேல்முருகன்.
‘’பொதுவெளியில் கதாநாயகனையோ, கதாநாயகியையோ கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் அநாகரிகமான செயல் என்று கருதுகிறது நிலம் தமிழர் நிலம். ஆனால் இந்த நிலத்தில் சில பெண்கள், சில ரசிகைகள் உணர்ச்சிவயப்பட்டவர்களாக திரைசார்ந்த கதாநாயகர்கள் வருகின்ற போது அவர்களை கட்டிப்பிடிப்பதும் மு**** கொடுப்பது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இது தமிழரின் செயலா? என்று கேள்வி எழுப்பினேன். அதில் சில மணித்துளிகளை மட்டும் வெட்டிஒட்டி விஜய் ரசிகர்கள் விஜயை பேசி விட்டதாகவும் மாணவிகளை பேசிவிட்டதாகவும் பரப்புகின்றனர்.
விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்து காயின் வழங்குகிறார். சால்வை போர்த்துகிறார். நான் 2001இல் இருந்தும் அதற்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்களை என் சொந்த செலவில் படிக்க வைக்கிறேன்.

நான் பேசிய ஒண்ணேமுக்கால் மணி நேர பேச்சை விஜய் கேட்கட்டும். அதில் அவருக்கு ஆட்சேபம் இருப்பதாக தெரிவித்தால் விஜய்யுடன் நேருக்கு நே விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
இளம்பெண்கள் சினிமாக்காரர்களை பார்த்த உடன் உணர்சி வயப்படக்கூடாது. நீங்கள் பிற்காலத்தில் மாற்றானோடு வாழும்போது அந்த ஆண்மகனுக்கு இது நெருடலை ஏற்படுத்தும் . இந்த தவருகளை என் தமிழ்ப்பிள்ளைகள் செய்யக்கூடாது.
சுமார் 45 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சினிமா கலாச்சார சீரழிவுகளை எதிர்த்து என் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைத்து வருகிறேன். விஜய்யை விட புகழ்பெற்ற நடிகர்களை எல்லாம் எதிர்த்து பேசி இருக்கிறேன். இந்த வரலாறு தெரியாத விஜய் ரசிகர்கள் என்னை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. வேண்டுமானால் உங்களை தலைவனை அழைத்து வாருங்கள். அவரோடு நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன்’’ என்று எதிர்ப்புக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் .
இந்த விளக்கம் அடிக்கின்ற புயலின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.