
அதிமுக கூட்டணி என்று பேசப்பட்ட காலம் போய் இப்போது பாஜக கூட்டணி என்றே சொல்லப்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணி பேச்சுதான் இப்படி என்றால் 2026 சட்டமன்ற தேர்தலில் வென்றால் அதிமுக ஆட்சியா? என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியா? என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி என்று திரும்பத் திரும்ப அழுத்திக் கொண்டே இருக்கிறார் அமித்ஷா. ஆனால் பழனிசாமியோ ’அதிமுக ஆட்சிதான்’ என்று திரும்பத் திரும்ப சமாளித்துக் கொண்டே இருக்கிறார்.

கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார். அந்த நீக்கல் நடவடிக்கை எடுத்ததுமே முன்கூட்டியே போட்ட திட்டப்படி அமித்ஷாவை சென்று சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார் பழனிசாமி.
இதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி அமையும் என்று தெரிவித்தார் அமித்ஷா. அவர் அப்படிச் சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார் பழனிசாமி. அவருக்கு ’மைக்’ கொடுக்கப்படவில்லை. பேச அனுமதிக்கவும் இல்லை என்பது வேறு கதை.
முன்னதாகவே டெல்லியில் பழனிசாமி அமித்ஷாவை சந்தித்த பின்னர், 2026இல் தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சிதான் என்று தனது எக்ஸ் தள பக்கத்தின் மூலம் அறிவித்தார் அமித்ஷா.

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு மறுநாள் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா? என்ற கேள்வி எழுந்தபோது, இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ’’அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது’’ என்று சொல்லி சமாளித்தார் பழனிசாமி.
ஆனால், நேற்று மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ‘’வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக – அதிமுகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்பதை அடித்துச் சொல்லி இருக்கிறார்.
இந்த முறை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறார் பழனிசாமி?
கூட்டணி ஆட்சி என்று சொன்னால் தமிழ்நாட்டில் மரியாதை இருக்காது என்பதால், கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்லி கட்சிக்காரர்களை ஏமாற்றுகிறாரா பழனிசாமி? இல்லை, அவரே அமித்ஷாவிடம் ஏமாறுகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.