
இந்தியாவில் ஐந்து வயது முதல் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், நடைமுறையில் அதை பெறுவதற்கு எளிய மக்கள் படாதபாடு பட வேண்டி இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை அனைவருக்குமான கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியாவில் ஒவ்வொரு குழந்தைக்குமான கல்வி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற ஆலோசனையின் போது, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து இவ்வளவு தூரத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் இந்த அனைவருக்குமான கல்வி சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். குழந்தைகளின் விண்ணப்ப மனுக்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளியிலு ம் 25 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்தப் பிள்ளைகளுக்குரிய கல்வி கட்டணத்தை அரசாங்கம் செலுத்தி விடும். இதில் ஒன்றிய அரசின் பங்காக 60%, மாநில அரசின் பங்காக 20% எனப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆனால் தமிழ்நாட்டில் அனைவருக்குமான கல்வி சட்டத்தின் கீழ் நிரப்பப்படும் இடங்களுக்குரிய ஒன்றிய அரசின் பங்களிப்பு கடந்த நான்கு ஆண்டுகளாக ஒதுக்கப்படவில்லை. எனவே மாநில அரசு 100% நிதியையும் ஒதுக்கி பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. இதில் சில தனியார் பள்ளிகளுக்கு உரிய முறையில் நிதி கிடைக்காத காரணத்தால் அத்தகைய பள்ளிகளில் அனைவருக்குமான கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கும் முறையை நிறுத்திவிட்டனர்.
எந்த நோக்கத்திற்காக முந்தைய ஒன்றிய அரசு அனைவருக்குமான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை சட்டத்தை கொண்டு வந்ததோ அதற்கு நேர் மாறான முறையில் இன்றைய ஒன்றிய அரசு செயல்பட்ட காரணத்தால் ஏற்பட்ட இந்த நிலைமையை சரி செய்து, உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அரசே முழு நிதியையும் வழங்கிய நிலையில், இந்த ஆண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பாபு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேட்டபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் இந்த தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற அமர்வு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த நிதியை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உரிய வகையில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
100 நாள் வேலை திட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம், மருத்துவம் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள், ஏழைகளுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட பல திட்டங்களும் தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு இவற்றிற்கு நிதி ஒதுக்க மறுப்பது என்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொடூர செயலாகும். நியாயமாக கிடைக்க வேண்டிய நிதிக்கு நீதிமன்றத்தை நாடிப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ்நாடு.
தமிழ்நாட்டு மக்களை தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் என்றுதான் மத்திய அரசு பார்க்கிறதே தவிர இந்தியர்கள் என்று பார்க்கவில்லை என்பது புரிகிறது. ஒரே நாடு என்று பேசுபவர்கள் ஒரே நாட்டில் உள்ள மக்களை அரசியல் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைப்பது என்ன நியாயம்?
தமிழ்நாட்டு மக்களை தங்களுக்கு வாக்களிக்காதவர்கள் என்றுதான் மத்திய அரசு பார்க்கிறதே தவிர இந்தியர்கள் என்று பார்க்கவில்லை என்பது புரிகிறது. ஒரே நாடு என்று பேசுபவர்கள் ஒரே நாட்டில் உள்ள மக்களை அரசியல் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைப்பது என்ன நியாயம்?
நியாயமான கேள்விகளால்படிப்போரை சிந்திக்க வைக்கும் வரிகள் சிறப்பு
-ஆரூர் செ. கர்ணா.