
பாஜகவுக்கும் தவெகவுக்கும் ஜோடி பொருத்தம் சூப்பர்! என்ற விமர்சனம் எழக் காரணமாக இருக்கிறார் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அருண்ராஜ்.
‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜயை காரில் குண்டுகட்டாக தூக்கி வந்து விசாரணை நடத்தினர் வருமான வரித்துறையினர். முன்னதாக விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டின் போது, பாஜக இழுத்த இழுப்புக்கு எல்லாம் வர முடியாது என்று ரஜினி அடம்பிடிக்கிறார் என்பதால் விஜய்யை அரசியலுக்கு இழுக்க முயற்சி நடந்தது என்றும், விஜயை தனிக்கட்சி தொடங்கச் சொல்லி அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ். பேசியதாகவும், அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதால்தான் அந்த ரெய்டு மேட்டர் தூசு தட்டி விட்டது போல் ஆகிவிட்டது என்கின்றனர்.
ஆனால் அருண்ராஜோ அந்த ரெய்டினை தான் நடத்தவில்லை என்று இப்போது சொல்லி சமாளிக்கிறார். அருண்ராஜ் ரெய்டு நடத்தியது போன்று பரவும் வீடியோ விஜய் வீட்டில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், அது சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தவெகவினர் சொல்லி வருகின்றனர்.

பாஜக சொல்லி கட்சி தொடங்கிய விஜய், பாஜகவின் கொள்கைகளை கொண்டிருக்காமல் என்ன செய்வார்? அவர் நேரடியாக பேசினால், தவெக பேசுகிறதா? பாஜக பேசுகிறதா? என்ற குழப்பம் வந்துவிடும் என்பதால்தான் அந்த வேளையை அடுத்தக்கட்ட தலைவர்களுக்கு கடத்தி இருக்கிறது பாஜக மேலிடம் என்கிறார்கள்.
அதன்படி தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், ‘’மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறை வர வேண்டும்’’ என்கிறார். அதாவது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரு தேர்தல், முதல்வரை தேர்ந்தெடுக்க ஒரு தேர்தல் என்று நடக்க வேண்டும் என்கிறார். ’’பாஜக ஆசையும் அதுதான்’’ என்று சொல்லும் மார்க்சிஸ்ட் அருணன், ’’ஜோடி பொருத்தம் சூப்பர்!’’ என்கிறார். அதாவது ஒத்த கருத்துடன் இருக்கும் தவெக – பாஜக ஜோடி பொருத்தம் சூப்பர் என்று சொல்கிறார்.

அருண்ராஜ் சொன்ன ஜனாதிபதி ஆட்சிமுறை கருத்துக்கு, ‘’மாநிலங்களின் கூட்டாட்சியை அடிநாதமாக்கி அரசியல் சாசனம் எழுதிய அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, மாநிலங்களை காலி செய்வதையே லட்சியமாகக் கொண்டவரை கொள்கை பரப்புச் செயலாளராக விஜய் நியமித்திருப்பதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்; விஜய் கட்சியை ஆர்எஸ்எஸ் முழுமையாகக் கைப்பற்றுகிறது அல்லது பாஜகவின் பிராக்ஸியாக தவெகவை தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்போகிறது’’ என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.