
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட ஆயத்தமானது முதல் அந்நாட்டில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பான பேச்சுகள் வந்த வண்ணம் இருந்தது. டிரம்ப் அதிபரானதும் அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அப்படி சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறி இருந்த இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கிட்டு நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது. அதற்கு இந்தியர்களின் மத்தியில் எதிர்ப்பு இருந்தபோதிலும் மத்திய அரசிடம் இருந்து எந்த கண்டனங்களும் வராதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அமெரிக்காவில் 1.2 கோடி பேர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்படுகிறது. அவர்களை நாடு கடத்துவது கைது செய்வது என டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி முறையான ஆவணங்கள் இன்றி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி இருந்ததாகக் கூறி 44 பேரை குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினர் (Immigration and Customs Enforcement – ICE) கைது செய்தது. மேலும் தொடர்ந்து சோதனை செய்வது, கைது செய்வது போன்ற நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதனைக் கண்டித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் நகரம் முழுவதும் பேரணி நடத்தினர்.

போராட்டத்தை ஒடுக்கக் காவல் துறையினர் முயற்சி செய்த போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல் துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்களைப் போராட்டக்காரர்கள் மீது பயன்படுத்தியது. போராட்டக்காரர்களில் சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டு கார் மற்றும் காவல் துறை வாகனங்கள் மீது தீ வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதுடன், 1,100 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, நியூ ஆர்லியன்ஸ் என 25 நகரங்களில் அரசுக்கு எதிரான செயல்கள் சில போராட்டக்காரர்கள் ஈடுபடத் தொடங்கினர். போராட்டக்காரர்களை அடக்க ராணுவத்தின் ஒரு பிரிவான நேஷனல் கார்டு படையைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசின் இத்தகைய செயல்களை கலிபோர்னியா மாகாண ஆளுநர் கேவின் நியூஸம் கடுமையாகக் கண்டித்ததுடன், தன்னிடம் அனுமதி பெறாமல் நேஷனல் கார்டு படையை அனுப்பியது தவறு என்றும் கூறியுள்ளார்.
அதேபோல், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே ஒரு நாட்டில் குடியேறியவர்களால் அதிக குற்றச்சம்பவங்கள் நிகழ்வதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்பும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான்.
கலிபோர்னியா ஆளுநர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரின் கண்டனத்திற்குப் பதில் அளிக்கும் விதமாக, ”கவர்னரும் மேயரும் தங்கள் வேலைகளைச் செய்ய முடியாவிட்டால், அது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் தலையிட்டு பிரச்சனையைத் தீர்ப்போம். கலவரங்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு அவர்கள் வழியில் பதிலடி கொடுப்போம்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் டிரம்பின் இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்கர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.