
ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த தொழில் துறை, சேவைத் துறை, சுற்றுலா என ஒவ்வொரு வணிக முறையைக் கையில் எடுப்பது வழக்கம். அந்த வகையில் சுற்றுலா ஒரு முக்கிய வணிக முறையாக உள்ள தெற்கு ஐரோப்பாவில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு ஐரோப்பியாவை சேர்ந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலியில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிப்பதால், அந்நாட்டவரின் செலவினங்கள் அதிகரிப்பதுடன், உள்ளூர் வாசிகள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பார்சிலோனா பகுதியில் water gun மற்றும் வண்ண புகைகளைக் கொண்டு கடை வீதியில் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.
SET எனப்படுகிற Southern Europe Against Touristification என்னும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதிகளில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில், ‘Tourist go home’, ‘உங்கள் விடுமுறை நாட்கள், எங்கள் துயரம்’ (Your holidays, may misery), அதிகரிக்கும் சுற்றுலா, நகரத்தைக் கொல்கிறது (Mass tourism kills the city) போன்ற வாசகங்களும் முழக்கங்களும் பெரும் அளவில் காண முடிகிறது.
கடந்த 2024ம் ஆண்டு தரவுகளின்படி பார்சிலோனாவில் 1.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், சுற்றுலா மூலம் 26 மில்லியன் பேர் வருகை தந்துள்ளனர். 31 சதவீதம் பேர் சுற்றுலா பயணிகளின் மூலம் தங்களின் செலவின அதிகரிப்பதாக கருதுகின்றனர். இத்தகைய நீண்டகால கருத்துகளின் வெளிப்பாடு ஒருங்கிணைக்கப்பட்டு போராட்டமாக உருப் பெற்றுள்ளது.
பார்சிலோனாவை பொருத்த அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் சுற்றுலாத் துறையைச் சார்ந்துள்ளது. சுற்றுலா வருகை அதிகரிப்பால் கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு வாடகைகள் 68 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் வீடுகளின் விலை 38 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை வேலை வாய்ப்பை தருவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது எனப் பொதுவாகக் கூறப்படும் கருத்தை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ரைட்டர்சிடம் பேசியுள்ளார். பொருளாதாரத்தைக் கொண்டு வரும் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதே இதற்கான தீர்வாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் கேட்டலோனியா அரசு விமான நிலையத்தை விரிவு படுத்துவது தொடர்பான திட்டத்தையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விமர்சித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, நார்வே நாட்டில் சுற்றுலா மூலம் இயற்கையான சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த 2026ம் ஆண்டு முதல் 3 சதவீதம் வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.