
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ‘கீழடி’ அகழ்வாராய்ச்சி அறிக்கையினை வெளியிட மறுத்துவிட்டது. அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டுமென்றால் அறிவியல் ஆதாரங்கள் தேவை என்கிறது.
தமிழ்நாடு வந்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், ‘’கீழடி ஆராய்ச்சிகள் இன்றைய உலகம் ஏற்றுக்கொள்ளுவதற்கு ஏற்றவாறு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வலுவான ஆதாரங்கள் தேவைப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த புறக்கணிப்புக்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. ’’அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை’’ என தமிழ்நாடு முதலமைச்சரும் தனது எதிர்ப்பினை வலுவாக பதிவு செய்திருக்கிறார்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அரசின் இந்த செயலை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறார்.
’’சென்னைக்கு வந்த மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் பாஜகவின் அலுவலகத்தில் இருந்து பேட்டி கொடுக்கிறார். கீழடியில் கூடுதலான அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று அவர் கேட்கிறார்.
அறிக்கை கொடுத்த இரண்டே முக்கால் வருடத்தில் இந்த கேள்வியை அவர்கள் நீதிமன்றத்தில் கேட்டிருக்கலாம். நாடாளுமன்றத்திலும் இந்த கேள்வியை எழுப்பி இருக்கலாம்.
இது தொடர்பாக நாங்கள் கேட்கும் போதெல்லாம் இதோ வெளியிட்டு விடுவோம் என்றே சொல்லி வந்தனர். திடீரென்று இதைச் சொல்வதால் இவர்களின் நோக்கம் என்ன? என்பது நமக்கு புரிகிறது’’ என்று சொன்ன வெங்கடேசன்,
’முதலில் இது வெறும் அறிக்கை வெளியிடும் பிரச்சனை அல்ல; பத்து ஆண்டுகளாக எதைச் சொன்னார்களோ, எதைச் செய்தார்களோ, அதே வேளையைத்தான் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

கோமியம் குடிச்சா கோவிட் போயிடும்னு சொன்ன நீ, எங்களிடம் கூடுதலான அறிவியல் ஆதாரம் வேண்டும் என்பதா? நியாயம் வேண்டாமா? யார்கிட்ட யார் வந்து கேட்பது?
யோசித்துப்பாருங்கள்… பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது. அதனால்தான் கணேசனுக்கு யானை தலையை பொருத்த முடிந்தது என்று பேசியவர் பிரதமர் நரேந்திரமோடி. அவருடைய அமைச்சரவையில் இருக்கின்ற ஒரு அமைச்சர், தமிழ்நாட்டிற்கு வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார்.

இதுகூட பரவாயில்லை. பண்டைய இந்தியாவில் மரபணு அறிவியல் மிகச்சிறப்பாக வளர்ச்சி அடைந்தது. அதனால்தான் கர்ணனின் பிறப்பு என்பது சாத்தியமானது என்று பேசியவர் இதே விஸ்வகுரு. இந்த விஸ்வகுருவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்தான் இன்று நம்மிடம் வந்து கூடுதலான அறிவியல் ஆதாரம் கொடுங்கள் என்று கேட்கிறார்.
இது கூட பரவாயில்லை. ஏற்கனவே மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஹர்ஷவர்தன். அவர், பண்டைய இந்தியாவில் விமான தொழில்நுட்பம் மிகச்சிறப்பாக இருந்தது. அதனால்தான் ராமாயணத்தில் புஷ்பக விமானத்தை பயன்படுத்த முடிந்தது. அதுவும் இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து அங்கே இதைப் பேசினார்.

இவ்வளவு அறிவியல் பூர்வமானவர்களாக இருக்கிற இந்த ஆட்சியில் அமைச்சராக இருக்கிறவர்தான் நம்மிடம் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்கிறார்.
இதுகூட பரவாயில்லை. பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜநாத்சிங், இந்தியாவில் பண்டைய காலத்தில் தொலைநோக்கு ஏவுகணைக்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருந்தது. அதனால்தான் பிரம்மாஸ்திரத்தை நம்மால் பயன்படுத்த முடிந்தது என்று சொன்னார். இவருடைய சகாதான் இன்று நம்மிடம் வந்து கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்கிறார்.

இதுகூட பரவாயில்லை. இன்னொருத்தர் இருக்கிறார். பாஜக மாநில முதலமைச்சர் குமார் தேவ். அவர், பண்டைய இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்ப வசதி இருந்தது. அதனால்தான் குருஷேத்திர போரை தன்னுடைய அறைக்குள் இருந்தே பார்த்து சஞ்சயனால் கதை சொல்ல முடிந்தது என்கிறார்.

இவ்வளவு பெரிய அறிவாளிகள் இருக்கின்ற கூட்டத்திலே இருக்கக்கூடிய ஒருவர், இவ்வளவு ஆய்வுகள் செய்து ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்த நம்மிடம் வந்து, கூடுதல் அறிவியல் ஆதாரம் கேட்கிறார். கேட்டவரின் தகுதியைப் பற்றி நாம் கேள்வி எழுப்பவே இல்லை. ஏனென்றால் நீ எவ்வளவு ஆதாரம் கேட்டாலும் அதை கொடுக்க முடிகின்ற உண்மை எங்களிடம் இருக்கிறது. அதை கொடுக்க முடிகின்ற வலிமை எங்களிடம் இருக்கிறது’’ என்று கொந்தளித்திருக்கிறார்.

போலி அறிவியலைப் போற்றிடும் கூட்டத்தினர், அறிவியல் ஆதாரம் பற்றிப் பேசுவதா? என்று ஆத்திரப்படும் வெங்கடேசன், ’’ இது உண்மைக்கும் கயமைக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம். உண்மையே வெல்லும்’’ என்று அழுத்தமாச் சொல்கிறார்.