
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.. என்று வாலி எழுதிக்கொடுத்ததும் ஷங்கருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால், இந்த பல்லவியை மாற்றக்கூடாது என்பதில் வாலி பிடிவாதமாக இருக்க அதே பாடலாக வந்து செம ஹிட் ஆனதும், ’’இப்ப என்னய்யா சொல்லுற..?’’ என்று ஷங்கரிடம் கேட்டிருக்கிறார் வாலி.
சில நேரங்களில் இப்படி இயக்குநர்கள் விட்டுக்கொடுத்து அது பிறகு நல்ல வரவேற்பைப் பெறுவது உண்டு. ஆனால் பெரிய கவிஞர்கள் தங்கள் வரிகளை மாற்றுவதில் ரொம்பவே பிடிவாதமாக இருப்பது உண்டு. அதில் அர்த்தமும் உண்டு.
கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிக் கொடுத்ததைத்தான் வைக்க வேண்டும். அதில் திருத்தம் ஏதும் செய்யக்கூடாது என்பதில் ரொம்பவே பிடிவாதமாக இருப்பார் என்று சொல்வதுண்டு. பலரும் இதையே குற்றச்சாட்டாக வைப்பதுண்டு.

இயக்குநர் சேரன் படங்களில் தொடர்ந்து எழுதி வந்த வைரமுத்து வெற்றிக்கொடி கட்டு படத்தில் முரண்பட்டார். ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு அவ கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்ஸ் பவரு’ன்னு தேவா எழுதி கொடுத்த டம்பி வார்த்தைகளை அப்படியே பல்லவியாக வைத்து எழுதிக்கொடுக்கச் சொல்லி சேரன் கேட்க, கலரு – பவரு மாதிரி ஆங்கிலச் சொற்கள் வேண்டாம். தமிழ் சொல்லாக எழுதித்தருகிறேன் என்று வைரமுத்து சொல்ல, நீங்க மட்டும் பிப்டி கேஜ் தாஜ்மகால்னு எழுதலாமா? அதுல இங்கிலீஸ் இல்லையா? என்று சேரன் கேட்க, இருவருக்கும் இடையே நீண்ட வாக்குவாதத்தில் வைரமுத்து பிடிவாதமாக நிற்க, வேறு வழியின்றி அந்தப்பாடலை பா.விஜயை வைத்து எழுத வைத்தார் சேரன்.
இயக்குநர் பாலா கூட வைரமுத்துவிடம் சில நேரம் சில திருத்தங்கள் கேட்க செய்து கொடுத்திருக்கிறார் வைரமுத்து. பரதேசி படத்தில் ஒரு பாடலை எழுதிக்கொடுத்து இதில் ஒரு வரியைக்கூட மாற்றக்கூடாது. என் ரத்தத்தை வடித்து எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்று வைரமுத்து பாலாவிடம் கண்டிஷன் போட்டிருக்கிறார். இப்படி கண்டிசன் போடுகிறாரே என்று படித்து பார்த்தேன். உண்மைதான் ரத்தத்தை வடித்துதான் எழுதி இருக்கிறார் வைரமுத்து என்று சொல்லி இருந்தார் பாலா.

இது மாதிரி வைரமுத்து குறித்து கோடம்பாக்கத்தில் பல பேச்சுக்கள் உண்டு. அதே நேரம் நியாயம் என்று தெரிந்தால் வரிகளில் திருத்தம் செய்வதும் உண்டு. ஆனால், வைரமுத்து என்றால் தான் எழுதியதை மாற்றி எழுதித்தர மாட்டார் என்று இளைய தலைமுறையிடம் பதிருந்திருக்கிறது. இது குறித்து மனம் திறந்திருக்கிறார் வைரமுத்து.
என்மீது ஒரு பழிஉண்டு
பாடல்களில்
திருத்தம் கேட்டால்
செய்யமாட்டேன் என்று
அது முற்றிலும்
உண்மைக்குப் புறம்பானது
திருத்தத்திற்கு
ஒரு கருத்தமைதி வேண்டும்.
இருந்தால், அதற்கு நான்
உடனே உடன்படுவேன்;
மாற்றியும் கொடுப்பேன்;
கொடுத்திருக்கிறேன்
புன்னைகை மன்னன் படத்தில்
‘வான் மேகம்
பூப்பூவாய்த் தூவும்’
என்றொரு பாட்டு
மழையில் நனையும்
ஒரு மான்குட்டி
தன் கவிதையால் மழையைக்
குளிப்பாட்டும் பாட்டு
‘மழைத்துளி தெறித்தது
எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
உயிர்த்தலம் சிலிர்த்தது’
என்று எழுதியிருந்தேன்
‘உயிர்த்தலம் என்பதைமட்டும்
மாற்றிக்கொடுங்கள்’ என்றார்
இசையமைப்பாளர்
ஏன் என்றேன்?
‘நீங்கள் எழுதிய பொருளில்
புரிந்துகொள்ளாமல்
அதைப் பெண்ணுறுப்போடு
சம்பந்தப்படுத்திப்
பிரச்சினை செய்வார்கள்’ என்றார்
சிந்தித்தபோது
சரியென்றே பட்டது
நான் உடனே
‘நினைத்தது பலித்தது
குடைக்கம்பி துளிர்த்தது’
என்று மாற்றிக்கொடுத்தேன்
இதில் நியாயம் இருக்கிறது
*

இன்னொரு படம் மனிதன்
அதில்
‘வானத்தைப் பார்த்தேன்
பூமியைப் பார்த்தேன்’
என்றொரு பாடல்
“குரங்கிலிருந்து பிறந்தானா
குரங்கை மனிதன் பெற்றானா
யாரைக் கேள்வி கேட்பது
டார்வின் இல்லையே”
என்று எழுதியிருந்தேன்
இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின்
உதவியாளர் லட்சுமி நாராயணன்
என் காதோடு வந்து
‘டார்வின் என்பதை மட்டும்
மாற்றுங்கள்; அது எல்லாருக்கும்
புரியாது’ என்றார்
நான்
புன்னகையோடு சொன்னேன்:
‘தெரிந்ததை மட்டும்
சொல்வதல்ல பாட்டு;
தெரியாததைச் சொல்லிக்
கொடுப்பதும் பாட்டு’
என்று மாற்ற மறுத்துவிட்டேன்
எஸ்.பி.முத்துராமனிடம் சென்று
நான் சொன்னதைச்
சொல்லியிருக்கிறார்.
அவரும் இதற்குமேல்
வற்புறுத்த வேண்டாம் என்று
வருத்தத்தோடு விட்டுவிட்டார்
டார்வின் பேசப்பட்டது
இப்படி
நியாயமான பொழுதுகளில்
மாற்ற மறுத்திருக்கிறேன்
பாட்டுவரியின் திருத்தத்தைப்
பொருளமைதியே தீர்மானிக்கிறது;
நானல்ல
ஆனால் பழி
என்மீதே வருகிறது
என்ன செய்ய?