
மதுரை ஆதீனம் மடத்திற்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது எனும் உத்தரவை எதிர்த்து, ஒரு பக்தராக நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை நித்தியானந்தா பீடத்தைச் சேர்ந்த சீடர் ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் இதுவரை ஆஜராகி வந்த நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர் இன்று ஆஜராகவில்லை. ஆகவே, புதிய வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நித்தியானந்தாவின் சீடர் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.

அப்போது, நித்தியானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படிச் செல்வது? நித்தியானந்தா அங்கு எப்படிச் சென்றார்? கைலாசாவிற்கு மனுதாரார் சென்றிருக்கிறாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு மனுதாரர், நான் கைலாசாவிற்கு சென்றதில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள யு.எஸ்.கே. எனும் தனி நாட்டில் உள்ளது கைலாசா. கைலாசாவுக்கு ஐ.நா. சபையின் அங்கீகாரம் உள்ளது என்று நித்தியானந்தாவின் சீடர் தரப்பில் பதில் அளித்தார்.
புதிய வழக்கறிஞரை நியமிக்க கால அவகாசம் கோரியதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள்.

கடந்த 2012இல் மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவித்தார் அப்போதைய ஆதீனம் அருணகிரிநாதர். இதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த அறிவிப்பினை திரும்ப பெற்றுவிட்டார் அருணகிரிநாதர். இதன் பின்னர் அருணகிரிநாதர் மறைந்த பின் மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டார்.
அருணகிரிநாதருக்கு பின் தானே மதுரை ஆதீனம் என்று சொல்லி மடத்திற்குள் நித்தியானந்தா செல்ல முற்பட எதிர்ப்புகள் எழுந்தது. அவர் மடத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 2013இல் நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

இதன் பின்னர், ஒரு பக்தராக மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நித்தியானந்தா கோரிக்கை வைக்க, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மதுரை ஆதீன மடம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் தனக்கு அனுமதி கோரிய நித்தியாவின் வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது.