
முருகன் தமிழ்க் கடவுள். தமிழ்ப் பண்பாடு கூறும் ஐவகை நிலங்களில் முதன்மையானதான குறிஞ்சி நிலத்தின் தலைவன். நீண்டகாலமாக மக்களின் வழிபாட்டுக்குரிய தெய்வம். அறுபடை வீடுகளில் குடிகொண்டிருப்பதுடன், குன்றிருக்கும் இடந்தோறும் குமரன் இருப்பான் என்கிற அளவில் முருகனுக்குத் தமிழ்நாட்டின் பல மலைகளிலும், குன்றுகளிலும், ஆற்றங்கரைகளிலும், கடற்கரையோரங்களிலும் கோயில்கள் உண்டு.
பா.ஜ.க. 1980ஆம் ஆண்டு உருவான கட்சி. அதற்கெனத் தனிக் கொள்கை கிடையாது. நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கையை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி. அதற்கு முன், ஜனசங்கம் என்ற பெயரில் அரசியலில் ஈடுபட்டு வந்தது. 1977ல் இந்தியாவில் முதன்முதலில் காங்கிரசல்லாத மத்திய அரசு உருவானது. ஜனதா என்ற பெயரில் ஒன்றிணைந்த அந்தக் கட்சியில் ஜனசங்கமும் சேர்ந்து அமைச்சரவையில் இடம்பெற்றது. இரண்டரை ஆண்டுகளில் ஜனதா கட்சியும் ஆட்சியும் சிதறியபோது, ஜனசங்கம் வெளியேறி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஆனது.
அகண்ட பாரதம் அமைப்பது, இந்தியாவை இந்துக்களுக்கு மட்டுமே உரிய நாடாக ஆக்குவது, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைக் குறி வைப்பது, மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் எனப் பேதம் பிரிக்கும் சனாதன-வருணாசிரமக் கொள்கைகளை நிலை நிறுத்துவது, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதில், மனுதர்ம சாஸ்திரத்தை இந்தியாவின் அல்ல..அல்ல.. பாரதத்தின் சட்டமாக்குவது இவைதான் பா.ஜ.க.வின் கொள்கையும் அரசியல் நோக்கமும் ஆகும்.
முருகனை வழிபடும் தமிழர்கள் இதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவர் தொடங்கி, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வரை மனிதர்களை பிறப்பால் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை. இதுதான் தமிழ்நாட்டின் பண்பாடு. எல்லா உயிரும் தம் உயிர்ப் போல நினைத்து இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே என்றுதான் தமிழில் பாடப்பட்டுள்ளது. சனாதனத்தையும் சாத்திரத்தையும் வேத மந்திரங்களையும் எதிர்த்து, சமரச சுத்த சன்மார்க்க நெடிறயை வலியுறுத்தியவர் வடலூர் இராமலிங்க வள்ளலார். அவரும் முருக பக்தர்தான்.
இந்துக்களின் திருக்கோயில்களில் இருந்து முஸ்லிம்களின் தர்காக்களுக்கும், கிறிஸ்தவர்களின் தேவாலயங்களுக்கும் கொடையளிப்பதும், அதுபோலவே கோயில்களுக்கு தர்காக்கள், ஜமாத்துகள், தேவாலயங்கள் சார்பில் அன்பளிப்பு தருவதும் தமிழ்நாட்டில் காலம்காலமாக உள்ள நடைமுறை. இருபதாம் நூற்றாண்டின் இந்தித் திணிப்பை மட்டுமல்ல, எட்டாம் நூற்றாண்டில் சமஸ்கிருதம் கோலோச்சியபோது அதனை எதிர்த்து அப்போது நடைபெற்ற மொழிப் போராட்டம்தான் நாயன்மார்களின் தேவாரம்-திருவாசகம் பதிகங்களும், ஆழ்வார்களின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பாடல்களுமாகும்.
தமிழ்நாட்டின் இந்த பண்பாட்டு வரலாற்றை சிதைக்கும் வகையில் இந்து மத அரசியலை செய்ய நினைக்கும் பா.ஜ.க., மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டைக் கூட்டுகிறது. தமிழ்க் கடவுளான முருகனை எல்லாரும் வழிபடலாம். ஆனால், முருகன் வழிபாட்டைவிட, முருகன் மீது ஆரியப் பண்பாட்டுச் சாயத்தைப் பூச நினைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஆரியப் பண்பாடுதான் தமிழ்க் கடவுளான முருகனை ஸூப்ரமணியன் ஆக்கியது. குறிஞ்சி நிலத்தில் மலைவாழ் பெண்ணான வள்ளியைக் காதலித்து மணமுடித்த தலைவன் முருகனின் பண்பாட்டு அடையாளத்தை சிதைக்கும் வகையில், முருகனுக்கு தெய்வானை என்ற மனைவிக்கு பிறகே வள்ளியை காதல் மணம் புரிந்துகொண்டார் என்று கதைக் கட்டியது. ஸ்கந்தன் என்றும் கார்த்திகேசன் என்றும் புதுப்பெயர்களையும் அதற்கேற்ப புனைக் கதைகளையும் உருவாக்கியது.
ஆரியப் பண்பாட்டிடமிருந்து தமிழ்க் கடவுள் முருகனை மீட்க அருணகிரிநாதர், வள்ளலார், குமரகுருபரர் போன்ற ஆன்மீகத் தமிழப்புலவர்களும், தமிழறிஞர்களும், ஞானிகளும், குன்றக்குடி அடிகளார் போன்ற ஆதீனங்களும் போராடினர். முருகனைத் தமிழ்க் கடவுளாக நிறுவினர். சமயச் சார்பற்ற தமிழ்நாட்டின் பண்பாட்டைக் காத்தனர். இதற்கு மாறாக, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் பல நூறு ஆண்டுகளாக உள்ள சிக்கந்தர் மலையைக் காரணம் காட்டி, வன்முறையைத் தூண்டி, கலகம் விளைவிக்க முயற்சி செய்து அம்பலப்பட்ட பா.ஜ.க.தான் இப்போது முருக பக்தர்கள் மாநாடு என்று போலி பக்தி மாநாட்டை நடத்துகிறது.
திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியவர்கள் பா.ஜ.க.வினர். வள்ளலாரை சனாதன தர்மக் காவலர் என்று புளுகியது ஆர்.எஸ்.எஸ். கூட்டம். கேரளாவில் பாரத மாதா படத்தின் கையில் காவிக் கொடியைப் பறக்க விட்டு மரியாதை செலுத்தியிருக்கிறார் அங்குள்ள ஆளுநர். அதுபோல முருகனுக்கும் காவி பூசி, தேர்தல் லாபம் பெறலாம் என நினைக்கிறது இங்குள்ள பா.ஜ.க.
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தலில் மொட்டை அடித்து அனுப்புவார்கள்.