
இந்து முன்னணி முன்னெடுப்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. விசிக உள்ளிட்ட கட்சிகள் இந்த மாநாட்டை எதிர்த்து மதுரை பேரணியில் நடத்தியது. இந்த பேரணியில் இயக்குநர் அமீரும் பங்கேற்றார்.
மாநாட்டை எதிர்ப்பது குறித்து அமீர், ‘’ஆன்மீகம் மக்களிடம்தான் இருக்க வேண்டும். அது அரசியல்வாதிகள் கைகளில் போகக்கூடாது. முருகனை வட நாட்டில் இருந்து வரும் சங்கிகள் தூக்கிப்பிடிப்பது என்பது ஆபத்தானது. எல்லா இடங்களிலும் மதக்கலவரத்தை நடத்தி முடித்து விட்டார்கள். தமிழ்நாட்டிற்குள் இது நடக்கவில்லை. சில இடங்களில் முயற்சி செய்து தோற்றுவிட்டார்கள். அதனால் கடைசியாக மதுரையை அவர்கள் கையில் எடுக்க முயற்சி செய்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தானது.

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் மலையா? முருகர் மலையா? என்று விவாதத்திற்கு கொண்டு வந்தார்கள். பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அதனால்தான் அவர்கள் நடத்தும் இந்த மாநாடும் ஆபத்து என்று சொல்கிறோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 40 ஆண்டுகள் வாழ்ந்தவன் நான். எனக்கு தெரியும், அவ்வளவு எளிதில் இந்த மக்களிடையே மத எதிர்ப்பு அரசியலை உண்டாக்க முடியாது. இந்த மதுரை மக்கள் இந்த அரசியலுக்கு சோரம் போக மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்று விளக்கம் அளித்திருந்தார்.

அமீரின் இந்த பேச்சுக்கு இயக்குநர் பேரரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், ‘’வேற்று மதத்தவரான அமீருக்கு இந்து மதத்திற்குள் என்ன வேலை? இன்னொரு மதத்திற்கு அறிவுரை சொல்லக்கூடி அளவுக்கு… அதை செய்யக்கூடாது. அமீர் இந்து மதத்தில் இருந்து அவருக்கு தெய்வ பக்தி எல்லாம் இருந்து இப்படிச் சொன்னால் பொதுவான கருத்து என்று யோசிப்பார்கள். ஆனால் அமீர் வேறு மதச்சைச் சேர்ந்தவர். அவருக்கு இந்து மதத்திற்குள் என்ன வேலை?’’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.