
“முருகன் அருளைப் பெற இந்து மக்கள் கட்சியின் தலைவர் காடேஸ்வரா அழைக்கிறார்” என்று ஊரெங்கும் விளம்பரம் செய்திருந்தது பா.ஜ.க.வின் ஃபேக் ஐ.டி. ஆம்.. பா.ஜ.க. தன் உதிரி பாகங்களைக் கொண்டு மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டிற்குத்தான் இப்படியொரு விளம்பரம். தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடு என திருத்தலங்கள் உள்ளன. முருகனை வழிபடும் தமிழ் பக்தர்கள் அங்கே சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். அவர்கள் நேரடியாக முருகனின் அருளைப் பெறுகிறார்களே தவிர, யாரும் எந்தக் கட்சியின் தலைவர் தயவிலும் முருகனை அருளைப் பெற வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழக் கடவுளான முருகனும் தனக்காக காடேஸ்வரா போன்ற புரோக்கர்களை ஒரு போதும் நியமிப்பதில்லை.
தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட பா.ஜ.க., மீண்டும் அ.தி.மு.க தோளில் ஏறி, அதைவிடத் தன்னை உயரமாகக் காட்டிக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. அதற்காக, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்த அண்ணாமலையை மாநிலக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்த நயினார் நாகேந்திரனை கட்சியின் மாநிலத் தலைவராக்கியது. நயினார் நாகேந்திரனும் யோக்கியரல்ல. நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்வதில் நேரடியாக சிக்கியவர். அ.தி.மு.க.வின் அமைச்சராக இருந்தபோது பல சர்ச்சைகளுக்குள்ளானவர்.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிரான கட்சியில் இருந்தால் ஊழல்வாதிகள். அதே ஊழல்வாதிகள் பா.ஜ.க.வில் சேர்ந்தவிட்டால் அவர்கள் பா.ஜ.க தலைமை என்கிற வாஷிங் மிஷினால் சுத்தம் செய்யப்பட்டு, புனிதர்களாகிவிடுவார்கள். மராட்டிய மாநிலம் தொடங்கி தமிழ்நாடு வரை பா.ஜ.க.வின் லட்சணம் இதுதான். ஊரறிந்த ரகசியம் இதுவென்றாலும், இந்த வாஷிங் மெஷின் டெக்னிக்கும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. காரணம், தமிழர்களின் முழுமையான எதிரியாக இருக்கின்ற ஒரே இயக்கம் பா.ஜ.க. மட்டும்தான்.
தமிழ்நாட்டுக்குரிய நிதியை மத்திய பா.ஜ.க. அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்யவே செய்யாது. பா.ஜ.க.விடம் அடிமையாகிவிட்ட அ.தி.மு.க ஆட்சியிலும் அதுதான் நடந்தது. பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்து, இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கிய தி.மு.க ஆட்சியிலும் அதே நிலைமைதான். மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கென்று தனித்துவமான எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஒற்றை செங்கல்லுடன்தான் நிற்கிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வரைபடம் வெளியாகிறதே தவிர, கட்டடம் கட்டியபாடில்லை.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தங்கள் மாநிலம் வஞ்சிக்கப்படுவதை உணர்ந்தே இருக்கிறார்கள். அதற்கான அண்மைக்கால உதாரணம், கீழடி அகழாய்வு அறிக்கைறை பா.ஜ.க. அரசு ஏற்க மறுத்த தமிழ் விரோதப் போக்கு சாட்சியாக இருக்கிறது. இதையெல்லாம் திசை திருப்புவதற்கான முருகன் பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மதுரையில் அரசியல் விளையாட்டை நடத்தத் திட்டமிட்ட பா.ஜ.க., அதை தனது உதிரி பாகங்கள் மூலமாக நிறைவேற்ற முடிவு செய்தது.
திருப்பரங்குன்றத்தில் பல நூறு ஆண்டுகளாக உள்ள தர்காவை வைத்து பா.ஜ.க. அண்மையில் நடத்திய வன்முறை அரசியலை நன்கறிந்து தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பா.ஜ.க.வின் திடீர் குபீர் முருக பக்தியைக் கண்டு அச்சமும் சந்தேகமும் கொண்டார்கள். காரணம், இதுவரை டெல்லியிலோ, உத்தரபிரதேசத்திலோ பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களிலோ முருக வழிபாட்டை பா.ஜ.க. இதுவரை முன்னெடுத்ததில்லை. அங்கெல்லாம் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு, சிறுபான்மையினரை அச்சுறுத்துவதுதான் பா.ஜ.க.வின் வேலை. தமிழ்நாட்டில் ஜெய்ஸ்ரீராம் எடுபடாது என்பதால் முருகனி வேலைத் தூக்கி அரசியல் செய்பவர்கள்தான் பா.ஜ.க.வினர்.
முருக பக்தர்கள் மாநாடு அனுமதி தொடர்பான வழக்கின்போது, மாநாட்டில் அரசியல் இருக்காது என்று உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் உதிரிபாகங்கள் உத்தவராதம் தந்தன. மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனும் இது அரசியல் மாநாடல்ல என்றார். ஆனால், ஜூன் 22 அன்று மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில், அருள்மிகு முருகனுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத பகல்ஹாம் தாக்குதல் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மோடி அரசுக்கு ஆதரவான தேர்தல் வியூகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிரானத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடவுளை வைத்து பச்சையாக அரசியல் செய்து நீதிமன்றத்தை அவமதித்துள்ளது பா.ஜ.க.