
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த 2025ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சத்யராஜ்க்கு ‘பெரியார் ஒளி’ விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்ற சத்யராஜ், பாஜகவை கடுமையாக விளாசி எடுத்தார்.
’’சாதி ஒழிப்பே தமிழ்தேசியம். சாதியை வைத்துக் கொண்டிருந்தால் தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகும்? ஆணவக்கொலை எப்படி நடக்குது? ஜப்பானில் இருந்து வந்தா வெட்டுறான்? ஜப்பான்காரனா வெட்டுறான்? சைனாக்காரன் வந்து வெட்டுறானா? ஒரு தமிழன் தான் இன்னொரு தமிழன வெட்டுறான். அப்போ சாதி ஒழியாமல் எப்படி தமிழ்தேசியம் மலரும்? அதனால் சாதி ஒழிப்பே தமிழ்தேசியம்.
சாதியை வைத்துகொண்டு, அடங்கு என்று சொன்னால் அடங்க மறுப்போம்; அத்து மீறுவோம்.

வானமும் நீலம். கடலும் நீலம். உலகத்துலயே மெஜாரிட்டி நீலம்தான். நீலத்தை அரவணச்சுத்தான் போகணும். யாராக இருந்தாலும் இனிமே நீலத்தை அரவணைச்சுத்தான் போகணும். அதனால்தான் இப்போது எங்க பார்த்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர்னு எல்லோரும் தோள்மேல கை போட நிலைமை வந்திருக்குது. ஆனா, எதுக்காக தோள் மேல கை போடுறான்னு நாம் கேர் ஃபுல்லா இருக்கணும்.
1990இல் மதுரை விசிகவை தொடங்கினபோது, பெரியார் – அம்பேத்கர் படத்தைப்போட்டு பெரியாரிஸ்டுகளையும் அம்பேத்கரையும் ஒன்றிணைச்சது தம்பி(திருமா)தான். இனிமே அந்த பிரிவினை நமக்குள்ள இருக்கக்கூடாது. மார்க்ஸ், மகாராஷ்டிராவில் பிறந்திருந்தா அண்ணல் அம்பேத்கரா இருந்திருப்பார். அம்பேத்கார், ஈரோட்டில் பிறந்திருந்தா தந்தை பெரியாரா இருந்திருப்பார். பெரியார், ஜெர்மன்ல பிறந்திருந்தா மார்க்ஸ்சா இருந்திருப்பார். சூழ்நிலைகளைதான் தலைவர்களை உருவாக்குது.
ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் என்ன வித்தியாசம்னு பெரியாருகிட்ட கேட்டாங்க. கோயில்ல கடவுள் சிலைக்கு முன்னாடி உண்டியல் வைக்கிறீங்களே.. அது ஆத்திகம். அந்த கடவுளையே நம்பாம உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க பார்த்தீங்களா.. அதுதானுங்க நாத்திகம்னு சொன்னார் பெரியார். மேட்டர் ஓவர். சாப்டர் ஓவரா?

கடவுள் இருக்குதா? இல்லையாங்குறதுல பிரச்சனையே இல்ல. சாதி ஒழியணும். அதுதான் பெரியாருக்கு முக்கியம். அதற்கு தடையாக இருக்கும் கற்பனை கருத்தியலை மறுக்கிறார். அது ஒரு ஆளாக இருந்தா ஓபனா தெரியும். எதிர்த்து போராடலாம். அது வந்து உருவகப்படுத்தப்பட்ட ஒரு மாயையான ஒரு கற்பனை. அதை வச்சுத்தான் எல்லா வித்தையும் காட்டிக்கிட்டு இருக்காங்க. அந்த வித்தையை தமிழ்நாட்டுக்குள்ள காட்ட முடியாது.
முருகனுக்காக ஒரு விழா நடத்தி எங்கள எல்லாம் ஏமாத்திட்டதா நினைக்காதீங்க. எங்கள ஏமாத்துறதா நினைச்சு நீங்க ஏமாந்து போயிடாதீங்க’’ என்று பேசினார் சத்யராஜ்.
சாதி ஒழிப்பே தமிழ்தேசியம் என்று சத்யராஜ் பேசிவிட்டு அடுத்து பேச நீண்ட இடைவெளி விட வேண்டியதிருந்தது. திருமாளவன் எழுந்து நின்று கை தட்டினார். விசிகவினரும் ஆர்ப்பரித்தனர்.