
ஆறு முறை ஒத்திவைப்புகளுக்குப் பிறகு வெற்றிகரமாக ‘ஆக்ஸிம் – 4’ திட்டத்தின்கீழ் இந்திய விண்வெளி வீரர் உட்பட 4 பேர் விண்வெளிக்கு பறந்தனர்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ‘ஆக்ஸிம் – 4’ என்ற திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகிய 4 பேர் விண்வெளி சென்றுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனமும் ’ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனமும் இணைந்து விண்வெளி நிலையத்துக்கு விண்கலனை அனுப்பியது. இதுவே முதல் தனியார் விண்கலமாகும். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதுதான் ஆக்ஸிம் – 4 திட்டம்.
முன்னதாக, கடந்த மே மாதம் 29ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் இவர்கள் விண்வெளிக்கு செல்ல இருந்தனர். ஆனால், திட்டமிடப்பட்ட ஏவுதள பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொல்நுட்பக் கோளாறு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இறுதியாக இன்றைய தினம் வெற்றிகரமாக இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வீரர்கள் விண்ணில் பறந்தனர். இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்தை நாளை மாலை சென்றடையக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு திரும்புவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘ககன்யான்’ எனப்படும் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் சுபான்ஷூ சுக்லா-வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சுபான்ஷூ சுக்லா?

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த சுபான்ஷூ சுக்லா 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். பிறகு 2024ம் ஆண்டு குழு கேப்டனாக பொறுப்பேற்றார். 2019ல் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷூ சுக்லா படைக்க உள்ளார். 1984ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர் முதன் முதலில் பயணித்தார். தற்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.