
பாலிவுட், டோலிவுட், மல்லுவுட்டைத் தொடர்ந்து கோலிவுட்டும் போதைபொருளால் தள்ளாட்டம் கண்டிருக்கிறது. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவைத் தொடர்ந்து கொக்கைன் விவகாரத்தில் சென்னை போலீசாரின் கையில் இருக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல் அதிரவைக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 22.5.2025இல் இரவு விடுதியில் மது அருந்திவிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பிரசாத் என்பவர் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் மீது ஏற்கனவே இருக்கு வழக்குகளைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
அதிமுக ஆட்சியில் ரயில்வே, சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி பிரசாத் 2 கோடி ரூபாய்க்கு மேல் பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. ஒரு நபரிடம் 2 லட்சம் ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வீதம் வரையிலும் 200 நபர்களிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்த வேலைவாய்ப்பு மோசடியில் பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் பிரசாத்துடன் இணைந்திருந்த மதுரை மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தோஷ் என்பவர் மூலம் சில போலீசாரின் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் செல்போன் கால் விபரங்களையும், லோகேசனையும் பெற்று அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் 2 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தொடர் விசாரணையில் பிரசாத்துக்கு பெங்களூருவைச் சேர்ந்த பிரதீப்பும், அவரின் வெளிநாட்டு நண்பனான காசா நாட்டைச் சேர்ந்த ஜான் மூலமாக கடந்த 3 வருடங்களாக கொக்கைன் போதைப்பொருளை பெற்று அதை தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த வியாபாரத்திற்காக சில இடங்களில் நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார் பிரசாத்.
இந்த வழக்கின் விசாரணையில் 11 கிராம் அளவில் கொக்கைன் போதைப்பொருள் சிக்கியது. இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பான பணப்பரிவர்த்தனை, மின்னணு தொழில்நுட்ப ஆதாரங்களும் சிக்கின.

பிரசாத்திடம் மேற்கொண்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் போதை பொருள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் நடந்த சோதனையில் கொக்கைன் போதைப்பொருள் பரிமாற்றம் தொடரான பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள் சிக்கின. ஸ்ரீகாந்திடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கொக்கைன் பயன்படுத்தியதும் உறுதியானது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்தை தொடர்ந்து மேலும் பல திரைப்பிரபலங்களும் இதில் சிக்குகிறார்கள். நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொக்கைன் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியானால் கைது செய்யப்படலாம்.
பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் சென்னை மற்றும் மேலும் சில இடங்களில் நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்போரின் நில உரிமையாளர்களை மிரட்டியும், போலி ஆவணங்கள் தயாரித்து குற்றம் செய்துள்ளார். இதனால் அஜர் வாண்டையாரும், இந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த நாகேந்திர சேதுபதி, சந்திரசேர்கர், சிவசங்கரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

பிரசாந்தும், அஜய் வாண்டையாரும் கூட்டாளிகளுடன் இணைந்து நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தல், புழக்கத்தில் விடுதல், அரசு வேலை வாங்கித்தருவதான பண மோசடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடர்பான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரசாந்த் கைதானதுமே அவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி என்பது தெரியவந்ததால் அக்கட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டதும் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார் பழனிசாமி. ஆனாலும் இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிமுக முக்கியப்புள்ளிகள் சிலரின் உதவியால்தான் பிரசாந்த் இந்த அளவுக்கு ஆட்டம் போட்டுள்ளார் என்பது தெரியவருவதால் அதிமுக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கொக்கைன் போதைப்பொருள் விவகாரத்தில் பிரசாத்தை கஷ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளது போலீஸ். பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலமாக கொக்கைன் போதைப்பொருள் வாங்கிய அதிமுக அரசியல் புள்ளிகளின் மகன்கள், நடிகர், நடிகைகளின் பட்டியலை தயாரித்துள்ளனர் சென்னை போலீசார். தி,ந எழுத்தில் தொடங்கும் சில முன்னணி நடிகைகள் சிலரும் இந்த பட்டியலில் இருக்கிறார்களாம். முன்னணி நடிகர் ஒருவரின் மகனும் இந்தப்பட்டியலில் இருக்கிறார் என்றும், இந்த பட்டியல் வெளியாகும் போது கோலிவிட்டு பெரிதாக பூகம்பம் வெடிக்க இருக்கிறது என்கிறது காவல்துறை வட்டாரம்.