உண்மையைச் சொல்ல வேண்டியதுதான் ஊடகங்களின் கடமை. நடுநிலையாக இருக்கிறோம் என்று சொல்கிற ஊடகங்களும், அதில் உள்ள ஊடகர்களும் உண்மைக்கு நேரெதிரான திசையில் பயணிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்த காலத்திலிருந்தே இதுதான் உண்மை என்பது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், அந்த உண்மையை மறைக்க முடியாது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே பிரிட்டிஷ் பக்கம் நிற்பதா, காந்தி பக்கம் நிற்பதா என்று ஊடகங்களுக்கு ஊசலாட்டம் இருந்தது. யார் எந்தப் பக்கம் நின்றார்கள் என்பது அவரவர் விருப்பத்தையும் சூழலையும் பொருத்ததாக அமைந்தது. காந்தியை ஆதரித்து, காங்கிரஸ் செய்திகளை வெளியிட்டவர்கள்கூட அந்தந்த மாநிலத்தில் ஒரே கட்சிக்கும் எதிரும் புதிருமாக நின்ற இரண்டு தலைவர்களில் ஒருவரை ஆதரித்து, மற்றவரை மட்டம் தட்டுவதைத் தங்களின் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.
நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916ல் உருவாகி, பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டபோது, புகழ்பெற்ற இந்து பத்திரிகை அந்த இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தது. மற்றொரு பிரபல பத்திரிகையாக இயங்கி வந்த மெயில் பத்திரிகை நீதிக்கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

சுதந்திர இந்தியாவிலும் பத்திரிகைகள் அதே போக்கையே கடைப்பிடித்தன. ஒரு பத்திரிகையின் வாசகர்கள் ஏதேனும் ஒரு தரப்பின் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்றால், மற்றொரு பத்திரிகை அதற்கு நேர் எதிரான தரப்பின் வாசகர்களுடைய ஆதரவைப் பெறுவதற்கேற்ற செய்திகளை வெளியிடும் போக்கு தொடர்ந்து நிலவியது. திராவிடக் கட்சிகள் உருவான போது, பெரிய பத்திரிகைகள் அந்த இயக்கங்களின் செய்திகளை இருட்டடிப்பு செய்து, திராவிட இயக்கத்தினர் எவற்றை விமர்சிக்கிறார்களோ அவற்றைப் புனிதமாகக் கட்டமைத்து, மக்களிடம் அவை பற்றிய பிரமிப்பை உருவாக்கும் வேலைகைளைத் தொடர்ந்து செய்து வந்தன. திராவிட இயக்கத் தலைவர்கள் மாபெரும் மாநாடுகளை நடத்தினால், அவை பற்றி பெயரளவுக்கு பெட்டிச் செய்தி ஒன்றை வெளியிட்டு, தங்களை நடுநிலை என்று காட்டிக் கொண்டன.
இந்த ‘நடுநிலை’ முகமூடிகளை திராவிட இயக்கத்தினர் தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நடத்திய இயக்கப் பத்திரிகைகளும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் நடத்திய பத்திரிகைகளும் அம்பலப்படுத்தின. பிறப்பாலேயே தங்களுக்குப் புகழ் உண்டு என்று கருதிக்கொண்டு செயல்பட்ட பிரபல நடுநிலை ஏடுகள் பலவற்றின் யோக்கியதை என்ன என்பதை கட்சிப் பத்திரிகைகள்தான் மக்களிடம் விளக்கின. இந்த உண்மையை ஏற்கவும் கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும், அதை மறைக்க முடியாது.
அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்தவரை, கட்டுரையாளரின் பெயர் மட்டுமே வாசகர்களுக்குத் தெரியும். காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகள், இணையதளங்கள் ஆகியவை உருவான பிறகு பத்திரிகை முதலாளிகள், அதில் பணியாற்றும் ஊடகர்கள் தங்கள் முகத்தைக் காட்டும் நிலைமை உருவானது. உண்மையை சொல்வதைவிட, தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை நியாயம் போல விளக்குவதே காட்சி ஊடகர்களின் முதன்மையான நோக்கமாக அமைந்தது. தங்களை சினிமா ஹீரோக்கள்போல கருதிக் கொண்டார்கள். நான்கு பேர் அவர்களைப் பொதுவெளியில் அடையாளம் கண்டு கொண்டு கைக்குலுக்குவது, ஆட்டோகிராப் வாங்குவது, செல்ஃபி எடுப்பது என்றானவுடன் அவர்களுக்குத் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் உருவாகிவிட்டது. தலைக்குள் ஒன்றும் இல்லாவதர்கள்கூட ஒளிவட்டத்துடன் அலையத் தொடங்கினர்.
தாங்கள் இல்லாவிட்டால் மக்களுக்கு எந்த உண்மையும் தெரியாது என்பதாக நினைத்துக்கொண்டு, மக்கள் அறிந்த உண்மைகளையும், மக்கள் அறிய வேண்டிய உண்மைகளையும் மறைத்து, தாங்கள் யாருக்கு சாதகமாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கான ஊடகர்களாக மாறிய அவலமும் தொடங்கியது. அதுவே இப்போதும் தொடர்கிறது. கட்டுரையாக எழுதி வந்தபோது, அதைப் படித்த வாசகர்களின் சிந்தனையில் புதிய கருத்துகள் உருவாகின. காட்சியாகக் காட்டும்போது அவை மக்களின் மனதை ஈர்த்துவிடுகின்றன. சிந்தனைக்கான வாய்ப்பு குறைவாகிவிடுகிறது.
இன்றைய எடிட்டிங் வசதிக்கேற்ப எதைக் காட்டுவது, எதைத் தவிர்ப்பது, எதை முன்னிலைப்படுத்துவது, எவரை பிரம்மாண்டப்படுத்துவது எனத் திட்டமிட்டு செய்யும் ஊடகர்களாலும் ஊடக நிறுவனங்களாலும் உண்மைகள் பல அடி ஆழக்குழிகளில் புதைக்கப்படுகின்றன. ஆனால், இவர்கள் தங்களை நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இத்தகைய வேலைகளை செய்துவருகிறார்கள்.
அறம் என்பார்கள். நேர்மை என்பார்கள். வார்த்தைகளுக்கு பல வண்ணம் பூசுவார்கள். அவையனைத்தும் தங்களை முன்னிறுத்திக்கொள்வதற்காகத்தான். இந்த புனிதக்கட்டமைப்பும் ஒளிவட்டமும் ஒரு நாள் உடைந்துபோகும் நீர்க்குமிழி என்பதை உணராமல் செய்பவர்கள் ஒருநாள் வசமாகி சிக்கிக்கொள்ளும் போது, அவர்களின் பிம்பம் சிதைந்து, இவ்வளவுதான் இவர் என்று சின்னாபின்னமாக்கிவிடுகிறது காலம்.
