
தனது மாமியார் பணத்தாசை பிடித்தவர். அதனால் தனது தயாரிப்பிலேயே தன்னை தொடர்ந்து நடிக்க வைத்தார். அதுவும் சரியான கதையை செலக்ட் செய்யாமல் தோல்விப்படங்களாக கொடுத்து என் மார்க்கெட்டை காலி செய்யப் பார்க்கிறார். மனைவியும் பணத்தாசை பிடித்தவர். சினிமாவில் நஷ்டம் என்று தன்னிடம் பொய்க்கணக்கு காட்டி மீண்டும் மீண்டும் தங்கள் தயாரிப்பிலேயே நடிக்க வற்புறுத்துகிறார். தனது குடும்பத்தினருக்கு கூட பணம் கொடுக்க விடாதபடி தன் சம்பளத்தை எல்லாம் பிடுங்கிக்கொள்கிறார். தன் வங்கி ஏடிஎம் கார்டு எல்லாமே ஆர்த்தி கையில்தான் இருக்கிறது. மாமியார் தன்னை ஒரு மனிதராகவே நடத்தவில்லை என்று தான் ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார் நடிகர் ரவிமோகன்.
தயாரிப்பாளரும் ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் இதை மறுத்துள்ளார். அவர் வார்த்தைக்கு வார்த்தை தனது அறிக்கையில் ‘ என் மாப்பிள்ளை, மகனாக பாவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திரைத்துறையில் தான் கடந்த 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருந்து வருவதாகவும், கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் தன்னைப்பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருவதற்கு விளக்கம் அளிக்கவே இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக குறிப்பிடுகிறார் சுஜாதா.

தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி இத்தனை நாளும் மௌனமாய் இருந்ததாகவும், இப்பொழுதும் பதில் சொல்லவில்லை என்றால் தன்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார் சுஜாதா.
2007ல் சுந்தர் சி- ஐ வைத்து வீராப்பு படத்தை தயாரித்த பின் தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தன்னை ’’2017ல் என் மாப்பிள்ளை ஜெயம் ரவி நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையைச் சொன்னார் எனவும், அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன்’’ என்று கூறி இருக்கிறார்.
அடங்க மறு விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைத்தரவில்லை. அமையவில்லை. ஆனாலும் தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று தன் மாப்பிள்ளை ஜெயம் ரவி சொன்தால் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என்கிறார் சுஜாதா.
இந்தப் படங்களுக்காக 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கியதாகவும், அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ஜெயம் ரவிக்கு ஊதியமாக வழங்கியதாகவும், இதற்கு தன்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக தான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது என்கிறார்
இந்தப் படங்களின் வெளியீட்டின் போது ரவி மோகனை பல கோடி ரூபாய் பொறுப்பேற்க வைத்ததாக அவர் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டினை மறுக்கிறார் சுஜாதா. ‘’ நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறார். அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன். இப்போதும் மகனாகவே பாவிக்கிறேன். அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்’’ என்று தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

ரவி சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு தான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான ஆதாரத்தை காட்டச்சொல்லுங்க என்கிறார் சுஜாதா. அது கூட வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள். அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிடட்டும்’’ என்று தன் பக்க நியாயத்தை ரொம்பவே அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சுஜாதா.
மேலும் சுஜாதா அந்த அறிக்கையில், ‘’இன்றைக்கும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு…’ என்று ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். ‘’எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்தில பார்க்கிறோம்,ரசிக்கிறோம்’’ என்று சொல்லும் சுஜாதா, ‘’நடக்கும் பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது’’ என்கிறார்.
அதே நேரம், ‘’என்றைக்கும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை’’ என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த அறிக்கை மூலம் ரவி மோகனுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் தன் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் சுஜாதா. இப்போது வரையிலும் தன் பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக தன் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புவதாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கும் சுஜாதா, ’’அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது’’என்கிற வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என்று மாற்றுக்கொண்டவர், ஆர்த்தி ரவியை முன்னாள் மனைவி என்று சொல்லி வருகிறார். ஆனால் சுஜாதாவோ வார்த்தைக்கு வார்த்தை ’என் மாப்பிள்ளை’, ‘ என் மகன்’ என்று உருகுகிறார். அதுமட்டுமல்லாமல் பழைய மாறாமல் ரவி மோகன் என்று குறிப்பிடாமல் ‘ஜெயம் ரவி’ என்று குறிப்பிட்டுள்ளார்.