
அன்புமணியின் சொல் வேறு; செயல் வேறு ஆக உள்ளது. ராமதாசுக்கு போட்டியாக கூட்டங்களை நடத்துகிறார். ராமதாஸ், நிர்வாகி ஒருவரை கட்சியை விட்டு நீக்கினால் அவரை உடனே நியமனம் செய்கிறார் அன்புமணி. யாரை நீக்கினாலும் கவலைப்படாதீர்கள்; உடனே நான் நியமனக் கடிதம் கொடுத்துவிடுவேன் என்றும் போட்டா போட்டி அரசியல் செய்கிறார் அன்புமணி.
ஆனால், அதே மேடையில், ’’அய்யாதான் குலதெய்வம்; குலசாமி. 45 ஆண்டுகால அய்யாவின் உழைப்பு இந்தக் கட்சியில் உள்ளது. அய்யாவின் கொள்கையை கடைபிடிப்போம்’’ என்கிறார்.
அன்புமணியின் இந்த சொல் ஒன்றும் செயல் வேறொன்றுமாகவும் இருப்பதை ராமதாசுக்கு கடும் எரிச்சலைத் தந்திருக்கிறது.

அதனால்தான் அவரிடம் இருந்து இந்த பதில் வந்திருக்கிறது. ராமதாசிடம், ’’அன்புமணி உங்களை குலசாமி என்கிறாரே?’’ என்று செய்தியாளர் கேட்டதாகவும், அதற்கு, ‘’அவன் என் கழுத்துல குத்தி கொல்லுற சாமி’’ என்று பதில் சொன்னதாகவும் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
பெற்ற அம்மா மீதே பாட்டிலை எடுத்து அன்புமணி வீசிவிட்டார். நல்லவேளையாக அவர் தப்பித்துவிட்டார் என்று ஏற்கனவே ராமதாஸ் சொன்னதில், ‘பாட்டில்மணி’ என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார் அன்புமணி. இதில் ’கொல்லுறசாமி’ என்ற சொன்னது தொலைக்காட்சிகளில் வெளிவந்தால் எதிர்கால அரசியல் என்னாவது? என்று யோசித்திருக்கிறார் அன்புமணி.
அதனால்தான், சம்பந்தப்பட்ட அந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் பாஜக மூலமாக அழுத்தம் தந்து அந்த பேட்டி வெளிவராமல் செய்துள்ளார் அன்புமணி என்றும் தாமோதரன் பிரகாஷ் தனது வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.

குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் மூன்று மணி நேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட பாமகவில் தந்தை – மகன் மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இதனால்தான் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று பாமகவினர் யாகம் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
தந்தை – மகன் இருவருக்குமிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கி சமாதானம் அடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தஞ்சை வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் பலரும் திருவிடைமருதூர் சூரியனார் கோவிலுக்குச் சென்று சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார்கள்.