
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கியதில் டிவி9 செய்தியாளர் ரஞ்சித்குமார் எலும்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. இவரது மகன் மனோஜ். தந்தை – மகனுக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இருவம் ஒருவர் மீது ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில், அது குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள மோகன் பாபு வீட்டிற்கு செய்தியாளர்கள் சென்றனர்.
சொத்து தகராறு குறித்து செய்தி சேகரிக்க வந்ததால் ஆத்திரம் அடைந்த மோகன் பாபு தனது பாதுகாவலர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை கடுமையாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் டிவி9 செய்தியாளர் ரஞ்சித்குமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரஞ்சித்குமார் புகாரின் பேரில் மோகன் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பே போராட்டம் நடந்து வருகிறது.

தந்தை மகன் இருவருக்கும் இடையே இருக்கும் சொத்து தகராறு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது ஒருபுறமிருக்க, செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இயல்பிலேயே மோகன் பாபு ரொம்பவே டென்ஷன் ஆன மனிதர். பல சந்தர்ப்பங்களில் அவர் பொது இடத்தில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். தன்னுடன் நடித்த நாயகி படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததால் அந்த நடிகை தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று கன்னத்தில் அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தியவர்தான் மோகன் பாபு.