
தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெயர் அ.தி.மு.க.வுக்குரியது. அதன் தற்போதைய நிலை என்னவென்பதை அதன் தொண்டர்களே அறியாமல் இருக்கின்றனர்.
தமிழர் பண்பாட்டை உறுதி சய்யும் கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காமல் திருப்பி அனுப்பிய நிலையில், அது பற்றி அ.தி.மு.கவின் நிலை என்ற கேள்வியை தி.மு.க.வின் ஐ.டி.விங் கேள்வி கேட்டு, கேலிச் சித்திரம் வெளியிட்டது. அதற்காக, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், தி.மு.க. ஐ.டி.விங் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு எதிராக பேட்டி அளித்ததுடன், அமைச்சர் நடமாட முடியாது என்றும் மிரட்டல் விடுத்தார். தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் என்ற முறையில் டி.ஆர்.பி.ராஜா மீது அ.தி.மு.க. தரப்பில் பல ஊர்களிலும் புகார் அளிக்கப்பட்டது. பதிலுக்கு, ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தி.மு.க.வினர் நடத்தினர். சில ஊர்களில் உருவ பொம்மை எரிப்பும் நடந்தது.
கீழடி அகழாய்வு தொடங்கப்பட்டபோது அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. இந்திய தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்ற ஆய்வுகள் நிறுத்தப்பட்டபோது, மாநில தொல்லியல் துறை அதனைத் தொடர்ந்தது. முதல் கட்ட அறிக்கைகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் சமர்ப்பிக்கப்பட்டன. இறுதி அறிக்கையே தி.மு.க. ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளைத்தான் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. எனவே, தி.மு.க.வைவிட அ.தி.மு.க.விற்கே மத்திய அரசை நோக்கி கேள்வி கேட்பதற்கான உரிமை அதிகமாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தி.மு.க.வைத் திட்டுகிறார். ஊடகத்தினரை சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “கீழடியை திராவிடம்-ஆரியம் என்று பிரித்து பிரிவினைவாதம் செய்கிறார்கள்” என்று தி.மு.க. மீது குற்றம் சாட்டினார். இவர் அமைச்சராக இருந்தபோதே, “கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று சொல்ல வேண்டும்” என்றவராவார்.
இத்தனை பிரச்சினைகளிலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஆரிய-திராவிடப் போராட்டம் காலம் காலமாகத் தொடர்வதைப் பற்றி அறிஞர் அண்ணா அளவுக்கு விளக்கமாக எழுதிய அரசியல் தலைவர் யாருமில்லை. ஆரிய மாயை என்று அண்ணா எழுதிய புத்தகம் அப்போது தடை செய்யப்படும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. அந்த அண்ணா பெயரில் நடைபெறும் கட்சியின் முன்னாள் அமைச்சர், ஆரிய-திராவிடம் என்பது பிரிவினையைத் தூண்டும் செயல் என்கிறார். கட்சிக்குத் தலைமை தாங்குபவர் எதுவும் பேசாமல் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு முறை திராவிடம் பற்றி ஊடகத்தினர் கேட்டபோது, “அதுக்கெல்லாம் புராணம் படிக்கோணுமுங்க” என்று பதிலளித்தார். அண்ணாவும் திராவிடமும் அ.தி.மு.க.வின் பெயரிலேயே இருக்கிறது. ஆனால், அண்ணாவின் கொள்கையோ, திராவிடக் கருத்தியலோ அதன் இன்றைய தலைமையிடம் இல்லை என்பதையே எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்களும் வெளிப்படுத்தும் கருத்துகள் நிரூபிக்கின்றன.
பா.ஜ.க.வின் ஆதரவில் இந்து அமைப்புகளை முன்னிறுத்தி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கான விளம்பரங்களில், சூரபத்மனை வதம் செய்து அழித்தது போல, திராவிடத்தை அழிக்க வரும்… என்று எழுதப்பட்டிருந்தது. திராவிடத்தை அழிப்பதற்காக பா.ஜ.க. நடத்திய மாநாட்டில், திராவிடத்தைப் பெயரில் கொண்டிருக்கும் அ.தி.மு.க. பயபக்தியுடன் கலந்துகொண்டது. அது, முருகன் மீதான பக்தியல்ல. பா.ஜ.க. மீதான பயபக்தி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில், பகுத்தறிவு பேசி மக்களை விழிப்படையச் செய்த பெரியாரையும் அண்ணாவையும் விமர்சிக்கும் காணொளியும் ஒளிபரப்பப்பட்டபோது, அதை முன்வரிசையில் உட்கார்ந்து அமைதியாக ரசித்தனர் அ.தி.மு.க.வின் பிரதிநிதிகளாக மாநாட்டில் கலந்து கொண்ட பிரமுகர்கள். இதில், டி.ஆர்.பி.ராஜா வெளியில் நடமாட முடியாது என்று வாய்ச்சவடால் அடித்த ஆர்.பி.உதயகுமாரும் பொத்தினாற்போல உட்கார்ந்திருந்தார்.
மறுநாள் திருவாரூரில் நடந்த விழாவில் ஊடகத்தினரை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “என்னை நோக்கி அவர் கேள்வி கேட்டதெல்லாம் இருக்கட்டும். பெரியாரையும் அண்ணாவையும் விமர்சித்ததைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்ற கேள்வியை நான் கேட்டதாக அவரிடம் கேளுங்கள்” என்ற முறையில் தெரிவித்தார். தமிழ்நாட்டு ஊடகக்காரர்கள் அந்தளவுக்குத் திறன் உள்ளவர்களும் கிடையாது. துணிவுள்ளவர்களும் கிடையாது என்பது பொதுவான கருத்து. அது மாறியிருக்கிறதா என்பது அவர்கள் ஆர்.பி.உதயகுமாரை சந்திக்கும்போது கேட்கும் கேள்வியில் தெரியும்.
அ.தி.மு.க என்ற கட்சி ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.விடம் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகின்றன.