
ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து வைக்கலாம். ஆனால் ஒரு கருத்து சொன்னதற்காகவே மன்னிப்பு கேட்கச்சொல்லி மிரட்டுவது கருத்துரிமைக்கு எதிரானது என்கிற கருத்து எழுந்திருகிறது கமல்ஹாசனை சுழன்றடிக்கும் கர்நாடக அரசியல் விவகாரத்தில்.
கமல் பேசியது சரியே என்று தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சியினரும் சொல்லி வரும் நிலையில், கமல் பேசியது தவறு என்றும், கமல் மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்றும் சொல்லி வருகின்றனர் பாஜகவினர்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், கமல்ஹாசனின் தீவிர ரசிகர். நான் மட்டும் பெண்ணாக இருந்தால் கமல்ஹாசனை காதலித்திருப்பேன் என்று சொல்லும் அளவிற்கு தீவிர ரசிகர். கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் விழாவிற்கு சிவராஜ்குமார் வந்திருந்தார். அவரைப் பார்த்து, தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் (கன்னடம்) பாஷை. அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்’’ என்று சொன்னார் கமல்.

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற வரலாற்று உண்மையைத்தான் சொன்னார் கமல். ஆனால் கன்னடர்களோ தங்கள் மொழியை குறைத்து மதிப்பிட்டுப் பேசியதாக கொந்தளித்தார்கள். போராட்டங்கள் நடத்தி கண்டனம் தெரிவித்தார்கள். கமல் மன்னிப்பு கேட்டால்தான் கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியாகும் என்று சொன்னார்கள்.
’’அன்பு மன்னிப்பு கேட்காது’’ என்று சொல்லிப்பார்த்தார் கமல். ஆனால் கன்னடர்களோ மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்பதிலே பிடிவாதமாக இருந்தார்கள். பாஜகவினரும் கமல் மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்கிறார்கள். அடுத்த மொழியோடு தொடர்புபடுத்தி பேசியது சரியல்ல என்று சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? அருக்கு எதற்கு இந்த ஈகோ? என்று கேட்கிறார் பாஜக பிரமுகர் தமிழிசை.

தான் பேசியதில் தவறு இல்லை. தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? என்பது கமல் தரப்பு நியாயம்.
இதில் கர்நாடக உயர்நீதிமன்றமும் கூட கன்னடர்களின் மனநிலையினையே பிரதிபலித்திருக்கிறது. மன்னிப்பு கேட்க முடியாத அளவிற்கு ஈகோ தடுக்கிறதா? என்று கேட்கிறது.
சீமான் உள்ளிட்டோர் கமல் மன்னிப்பு கேட்கக் கூடாது என்கிறார்கள். இதனால் கர்நாடகாவில் நாளை தக் லைப் படம் ரிலீசாகவில்லை.

இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்டால்தான் கர்நாடகாவில் அவர் படம் ரிலீசாகும் என்று கன்னடர்கள் மிரட்டுவது அநியாயம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அருணன். ‘’கமல் சொன்னது ஒரு மொழியியல் கருத்துதான். அதற்கு மாற்றாக கருத்து இருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்கச் சொல்லி மிரட்டுவது அநியாயம்’’ என்கிறார்.
பாஜகவினர் இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று சொல்லி வருவதால், ‘’இந்த விவகாரத்தை கிளப்பியதே பாஜகதான் என்பது அம்பலமாகிறது’’ என்கிறார் அருணன்.
’’இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்துதான் பிறந்தன’’ என்று சொன்னார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர் பேசியது தவறான கருத்து என்று பலரும் ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறார்கள். அவர் கருத்துக்கு மாற்று கருத்தினைத்தான் முன் வைத்து வருகிறார்கள். அதற்காக, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்… என்றா சொல்கிறோம்’’ என்று கேட்கும் அருணன், ‘’சமஸ்கிருதத்தில் இருந்து இந்திய மொழிகள் பிறந்தன என்று சொன்னதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்பாரா?’’ என்று பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதுசரி, அமித்ஷாவுக்கு ஒரு நியாயம்; கமலுக்கு ஒரு நியாயமா என்ன?
r3u184