
தைலாபுரம் தோட்டத்தில் நுழைந்து சமாதான முயற்சியில் இறங்கி இருக்கிறது பாஜக என்று பார்த்தால் சமாதான முயற்சியில் மட்டுமல்ல, சண்டை முயற்சியிலுமே பாஜகதான் பின்னணியில் இருந்தது என்கிறார்கள் ராமதாசுக்கு நெருக்கமான தைலாபுரம் வட்டத்தினர்.
ஓபிஎஸ் தர்ம யுத்தத்தின் பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பாமகவில் தந்தை – மகன் மோதலின் பின்னணியிலும் ஆடிட்டர் குருமூர்த்தி இருப்பதாகவே செய்திகள் வந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இன்று தைலாபுரம் சென்று ராமதாசை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியபோது அதிமுக பக்கம் நிற்க வேண்டும் என்று ராமதாஸ் விரும்ப, பாஜக பக்கம் நிற்க வேண்டும் அன்புமணி அடம்பிடிக்க அப்போதே ஆரம்பித்துவிட்டது தந்தை – மகன் மோதல்.

மூத்த மகள் காந்தியின் மகன் முகுந்தன் பரசுராமன் பாமக இளைஞரணி தலைவர் நியமனத்தில் இந்த மோதல் உச்சத்திற்கு சென்றது. இதனால் பாமகவில் யாருக்கும் அதிகாரம்? என்ற மோதலில் கட்சியின் பெரும்பான்மையை கைப்பற்றி தன் பலத்தை அன்புமணி காட்டியபோது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்று கண்ணீர் விட்டார் ராமதாஸ்.
ஆனாலும் கொஞ்சமும் சளைக்காமல் தன் பலத்தை நிரூபிக்க தினந்தோறும் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி, தன் ஆதரவாளர்களை நியமனம் செய்து வருகிறார் ராமதாஸ்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாமகவில் நடைபெற்று வரும் இந்த மோதலால் பாஜகவும் அதிமுகவும் கவலை அடைந்தன.
இந்த நிலையில் மாநிலங்களவை சீட் கேட்டு அன்புமணி தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சு நடத்தச் சென்றிருக்கிறது. அதற்கு எடப்பாடி, பெரியவரின் சம்மதத்துடன் வந்தால் பேச்சு நடத்தலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

ஏற்கனவே அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் கொடுத்து அதற்கு கொஞ்சமும் விசுவாசம் இல்லாமல் அவர் சீட் வாங்கிக் கொண்டு பாஜக பக்கம் போய்விட்ட வருத்தம் எடப்பாடிக்கு இருக்கிறது. அன்புமணி பாஜக பக்கம் நின்றபோது அதிமுகவுக்காக விசுவாசத்துடன் நின்றவர் ராமதாஸ் என்பதால் அவர் சம்மதத்துடன் வந்தால் மட்டுமே பேச்சு நடத்தலாம் என்று சொல்லி இருக்கிறார்.
கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிய அன்புமணிக்கு ராமதாஸ் இல்லாமல் கூட்டணியில் சாதிக்க முடியாமல் போனது கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
தந்தை – மகன் இடையே நடந்து வந்த கருத்து மோதலின் உச்சத்தால் சொத்து பகிர்ந்து என்ற முடிவுக்குப் போய்விட்டார் ராமதாஸ். இது இப்படியே போனால் வரும் தேர்தலில் வட மாவட்டங்களில் வாக்கு சதவிகிதத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்த பாஜக அமித்ஷாவுக்கு தகவல் சொல்ல, அவர் உடனே ராமதாசை சமாதானப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
பாஜக வேண்டாம்; அதிமுகதான் வேண்டும் என்று ராமதாஸ் சொன்னபோது, அன்புமணி செய்வதுதான் நியாயம் என்றும் ராமதாஸ் செய்வது அநியாயம் என்றும் பேசி வந்தனர் பாஜக தரப்பினர். நிலைமை இப்போது கை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாசை 40 நிமிடங்கள் சந்தித்து பேசினார் அன்புமணி. இந்த சந்திப்பின் மூலம் மோதல் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான் என்று தெரிகிறது.

ராமதாஸ் கோபத்தில் இருக்கிறார் என்றும் தெரிந்தும் அவரை சமாதானப்படுத்தாமல் அடுத்தடுத்த அதிரடிகளால் அவரை மேலும் மேலும் கோபப்படுத்தி வந்ததால் அவ்வளவு சீக்கிரத்தில் சமாதானம் ஆகாதவராக உள்ளார் ராமதாஸ். இதனால் பாஜக சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தியும், ராமதாசுக்கு நெருக்கமான சைதை துரைசாமியும் தைலாபுரம் சென்று சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றனர்.
ஆடிட்டர் குருமூர்த்தியின் மூலம் அமித்ஷா ராமதாசிடம் செல்போனில் பேசியதாக தகவல். அவர் என்ன பேசினார்? அதில் ராமதாஸ் சமாதானம் ஆனாரா? பரபரத்துக்கிடக்கிறது தைலாபுரம்.