
இப்படித்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும் சேர்த்தும் அறிக்கை வெளியிட்டு வந்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஒரு நிர்வாகியை அதிமுகவில் இருந்து நீக்கினால் அந்த நிர்வாகியை ஓபிஎஸ் நியமனம் செய்வார். ஓபிஎஸ் ஒரு நிர்வாகியை நியமனம் செய்தால் இபிஎஸ் அந்த நிர்வாகியை நீக்குவார்.
கொஞ்ச காலத்திற்கு இப்படி இருவரும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வந்தது கட்சியினரிடையே கவலையையும் குழப்பத்தையும் அதிகரித்தது. பின்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் ஒற்றைத்தலைமைக்கு வந்திருக்கிறது அதிமுக.
அந்த நிலைமை இப்போது பாமகவுக்கு வந்திருக்கிறது. நான் தான் தலைவர் என்று ராமதாசும், நானே தலைவர் என்று அன்புமணியும் மாறி மாறி சொல்லி வருகிறார்கள். ’ஒற்றைத்தலைமை ’ விவகாரம் பாமகவில் பூதாகரமாக வெடித்திருக்கிறது.

’இரட்டைத்தலைமை’ இருப்பதால் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார் அன்புமணி.
அன்புமணி செயல்தலைவராக இருக்க முடியாது என்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளார். ஆனால் அன்புமணியோ, ‘’என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை’’ என்கிறார்.
பொதுக்குழு மொத்தமும் தன் கையில் இருப்பதால் ராமதாசினால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற தெம்பில் இருக்கிறார் அன்புமணி.
பாமக நான் உருவாக்கின கட்சி. இங்கே நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன் என்று ராமதாஸ் எச்சரித்திருக்கும் நிலையில், ‘’பாமக யாருக்கும் சொந்தம் இல்லை. அது பாமக பொதுக்குழுவுக்கே சொந்தம்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

பாமகவின் பொருளாள திலகபாமாவை நீக்கி புதிய நிர்வாகியை நியமித்து அறிக்கை வெளியிட்டார் ராமதாஸ். இதற்கு போட்டியாக திலகபாமாவை மீண்டும் பாமக பொருளாளர் ஆக நியமித்து உத்தரவிட்டார் அன்புமணி. அதே போல் திருவள்ளுவர் மாவட்ட நிர்வாகிகள் சிலரையும் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் ராமதாஸ். இதற்கும் திலகபாமா நீக்கம் – சேர்ப்பு ஸ்டைல்தான் .
இனிமேல் யாரை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கினால் அவர்களை கட்சியில் நியமனம் செய்துவிடுவேன் என்பதை , ‘’கட்சியில் இருந்து யாருடைய பெயரும் நீக்கப்பட்டாலும் அதுபற்றி எந்தவித கவலையும் வேண்டாம். அடுத்த நிமிடமே நியமன கடிதத்தை அனுப்பி விடுவேன்’’ என்று நம்பிக்கை தந்தார்.
அதுமட்டுமல்லாமல் தனது கடிதமே செல்லும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அன்புமணி.

இன்று கூட்டிய கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். இதன் மூலம் கட்சியை முழுமையாக கையில் எடுத்திருக்கிறார் அன்புமணி என்று நினைத்தால், ராமதாசும் தனக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு என்று சொல்கிறார்.
ராமதாஸ் – அன்புமணி இருவரின் அறிக்கையும் மாறி மாறி வருவதால் இதில் எது கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடு? என்பதில் பாமகவினருக்கு குழப்பமும் கவலையும் ஏற்பட்டிருக்கிறது.
2mrc96