
நாளைக்கே ராமதாசும் அன்புமணியும் இணைந்து நின்றாலும் கூட ராமதாஸ் சொன்ன அந்த தீராத பழிச்சொல் காலத்திற்கும் மாறாது. எதிர்க்கட்சியினர் இந்த விமர்சனத்தை வைத்திருந்தால் அது ‘அரசியல்’ என்று காலம் கடந்துவிடும். பெற்ற தந்தையே வைத்த விமர்சனம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது மாறப்போவதில்லை. ராமதாஸே நாளைக்கு தான் சொன்னதை வாபஸ் வாங்குகிறேன் என்று சொன்னாலும் கூட சொன்னது சொன்னதுதான் அது மாறப்போவதில்லை.
இப்படி ஒரு தீராத பழிச்சொல் தீயினை ராமதாஸ் வைத்துவிட்டதால் அதனை அணைக்கப் போராடுகிறார் அன்புமணி.
ராமதாசின் வயதினை காரணம் காட்டி அவரை கட்சியின் தீவிர நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிவிடச் சொல்லி விட்டு, தானே கட்சியை எடுத்து நடத்த பல ஆண்டுகளாக துடித்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி. 6 ஆண்டுகளுக்கு முன்பே இதை நேரடியாக அன்புமணி சொன்னபோது கண்கள் தானாக இரண்டு சொட்டு கண்ணீரை விட்டது என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் ராமதாஸ்.

பல கட்ட போராட்டத்திற்குப் பின்னர் பாமகவின் தலைவராகி விட்டார் அன்புமணி. ஆனாலும் கட்சியினரிடையே அரவணைத்துச் செல்லும் பண்பு இல்லை என்று சொல்லி அவரை செயல் தலைவர் ஆக்கிவிட்டார் ராமதாஸ். பொதுக்குழு ஒப்புதலுடன் முறைப்படி ராமதாஸ் அதைச் செய்யாததால் ‘நானே தலைவர்’ என்று சொல்கிறார் அன்புமணி.
ஆனால் ராமதாஸோ, ஒரு தலைவருக்கு உரிய தலைமைப்பண்பு அன்புமணியிடம் இல்லை என்று சொல்கிறார். கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாமல் அவர்களை அவமானப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
அன்புமணி ஒரு பொய்வண்டி, பாட்டில்மணி என்கிற அளவுக்கு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் ராமதாஸ், அன்புமணிக்கு கட்சியை வழிநடத்தவோ, கூட்டணி குறித்து முடிவெடுக்கவோ தெரியவில்லை என்று விளாசி எடுத்திருக்கிறார்.
தந்தை – மகன் மோதலால் பாமகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் பாமகவின் தவிப்பில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, ராமதாசின் இந்த குற்றச்சாட்டுகளால் அன்புமணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

என்னதான் இழுத்துக்கட்டினாலும் வெட்டியது வெட்டியதுதான் என்பது அன்புமணிக்கே தெரிந்தாலும் கூட, அதற்காக ஒட்ட வைக்கும் முயற்சியினைக் கூட எடுக்காமல் இருக்கக்கூடாது அல்லவா, அதற்காகத்தான் தனது பனையூர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மூன்று நாட்கள் தொடர் ஆலோசனைக் கூட்டத்தினை கூட்டி இருக்கிறார்.
ராமதாஸ் அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு 108 பேரில் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆனால் அன்புமணி 23 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் 22 பேர் வந்துள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு அன்புமணி, கட்சியை கையில் எடுக்கிறாரா? இல்லை, சமாதானமாகிறாரா? என்பது தெரியவரும்.