
ஞானசேகரன் விவகாரத்தில் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக சொன்ன அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை வரும்போது அண்ணாமலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உள்ளது. அப்போது அவர் என்ன சொல்லி சமாளிப்போகிறார்? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதில் மாணவி கொடுத்த வழக்கின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தது.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பேசு பொருள் ஆனது. சென்னை உயர்நீதிமன்றம் தாமாம முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கை விசாரிக்க மூன்று பெண் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம். இந்தக்குழுவின் விசாரணையில் ஞானசேகரன் மீது 11 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஞானசேகரனை குற்றவாளி என்று அறிவித்த சென்னை மகளிர் நீதிமன்றம், அவருக்கு கடந்த மே 28ஆம் தேதி அன்று 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 90ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்புக்கு பின்னரும் இந்த வழக்கு குறித்து அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார். ஞானசேகரன் மட்டும் குற்றவாளி அல்ல. அவர் யார் யாரிடம் பேசினார், என்னென்ன பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்ணாமலை சொன்ன இந்த குற்றச்சாட்டை முன் வைத்து அவரை சிறப்புகுழுவினர் விசாரிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக பாஜவின் தலைவராக இருந்தபோது , அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக சொல்லி இருந்தார் அண்ணாமலை. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இதனால் வசமாக சிக்கி இருக்கிறார் அண்ணாமலை. இந்த மனு மீதான விசாரணை நடக்கும்போது என்ன சொல்லி சமாளிக்கப்போகிறார் அண்ணாமலை? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.