
தலைப்புச் செய்திகள்- பிரேக்கிங் நியூஸ்- Big நியூஸ் என்று கடந்த இரண்டு நாட்களாக வெளியான செய்திகளில் சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் என்றும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மகன் தன் சகோதரியை மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற நிலையில் கைது என்றும், அமித்ஷாவை சந்தித்த பா.ஜ.க. பிரமுகர் செம்மரக் கடத்தல்காரர் மிளகாய்ப் பொடி வெங்கடேசன் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்றும் தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் எல்லாருமே தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினர். ஆளுங்கட்சியான தி.மு.க. பழிவாங்குவதற்காக இவர்கள் மீது வழக்குப் போட்டதாக விமர்சனம் வரும் என்று பார்த்தால், தி.மு.க. ஆட்சியில் அதிகாரம் செலுத்துபவர்கள் எதிர்க்கட்சிகள்தானா என்ற கேள்விதான் அரசியல் களத்திலும் பொதுமக்களிடமிருந்தும் வெளிப்படுகிறது.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரியாணி கடையிலும்-பரோட்டா கடையிலும் தி.மு.க.வினர் தகராறு செய்ததற்காக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் போய் வருத்தம் தெரிவித்து, கடைக்காரர்களை சமாதானப்படுத்தினார். வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, அம்மா உணவகம் பெயர்ப்பலகையையும் அதில் இருந்த ஜெயலலிதா படத்தையும் சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். தி.மு.க.வின் பிரபல பேச்சாளர் வழக்கமான தன் பாணியில் பேசியதை அரசியலாக்கி, ஊடக கேமராக்கள் முன்பாக பா.ஜ.க.வின் நடிகை குஷ்பு கண்ணீர் விட்டு நீதி கேட்ட புதிய கண்ணகியாக மாறினார். உடனே சொந்தக் கட்சியின் பேச்சாளரை கைது செய்து சிறையில் அடைத்தது தி.மு.க. அரசு. குஷ்புவோ, அந்த பேட்டி முடிந்து கேமரா ஆஃப் ஆன அடுத்த நொடியே சிரிப்புடன் நிருபர்களை அனுப்பி வைத்தார். தி.மு.க. பேச்சாளர் சிறைவாசம் முடித்து திரும்பினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு தி.மு.க.வில் செல்வாக்கு இருக்கிறது என்ற செய்தி வெளியானதுமே, சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொண்டு, நீதிமன்ற மேற்பார்வையில் புலன் விசாரணை நடத்தி, வழக்கை விரைந்து முடித்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கச் செய்திருக்கிறது ஸ்டாலின் அரசு.
ஆளுங்கட்சியினரின் அடாவடிகளை உடனுக்குடன் சட்டரீதியாக ஒடுக்குவதுடன், கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பது முதல்வர் ஸ்டாலினின் வழக்கமாக இருக்கிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை காவல்நிலையத்திற்கோ, அரசு அலுவலகங்களுக்கோ சென்று அதிகாரம் செலுத்தக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலின் கடைசி பரப்புரை நாளில், நாளிதழ்கள் அனைத்திலும் முதல் பக்கத்திலும் தி.மு.க.வின் முந்தைய ஆட்சிக்கால அடாவடிகள் என்ற தொகுப்பு விளம்பரத்தை அ.தி.மு.க. வெளியிட்டது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரவுடித்தனம்தான் இருக்கும் என்று மக்கள் மனதில் பதியச் செய்யத் தரப்பட்ட இந்த விளம்பரங்கள் முந்தைய தலைமுறையினரை மட்டுமல்ல, புதிதாக வாக்களிக்க வந்த தலைமுறையையும் யோசிக்க வைத்தது. அதை மீறி, மு.க.ஸ்டாலின் மீதான மக்களின் நம்பிக்கை தி.மு.க.வை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையிலும், எதிர்க்கட்சிகளின் பரப்புரைக்கு மாறாகவும் தனது கட்சியினரைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.
தி.மு.க நிர்வாகிகள் காவல்நிலையத்திற்குப் போகத் தயங்கும் நிலையில், பா.ஜ.க.வினர் அதிகளவில் தமிழ்நாட்டின் காவல்நிலையங்களில் தலையை நுழைத்து, மத்தியில் ஆட்சியிலிருக்கிறோம் ஜாக்கிரதை என்ற கோதாவில் போலீசாரிடம் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் உள்ள பலரும் ஆளுங்கட்சியான தி.மு.க.வினரை ஜஸ்ட் லைக் தட் கையாளுவதும், பா.ஜ.க.வினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைப்பதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பான நடைமுறையாகிவிட்டது. பிரச்சினைகளை சந்திப்பவர்களும் தி.மு.க. நிர்வாகிகளிடம் போனால் வேலைக்கு ஆகாது என்றும், பா.ஜ.க.வினரிடம் போனால் முடித்துக்கொடுத்து விடுவார்கள் என்றும் நினைக்கத் தொடங்கிவிட்டனர். இதுபோலவே அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் அ.தி.மு.க.வினருக்கு அதிகாரிகள் தரும் மரியாதை, ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு கிடையாது.
இதன் தொடர்ச்சிதான், சொந்த சகோதரியையே பண மோசடி செய்து தப்பித்துப் போகப் பார்த்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மகன், கடத்தல் விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியுடன் இணைந்து கட்டப் பஞ்சாயத்து செய்து நீதிமன்றத்தில் ஆஜராகி, போலீஸ் ஸ்டேஷன் விசாரணையை எதிர்கொண்ட அ.தி.மு.க.
கூட்டணி புரட்சி பாரதம் எம்.எல்.ஏ, அமித்ஷாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தமிழக டி.ஜி.பி.யை tag செய்து சவால் விட்ட பா.ஜ.கவின் மிளகாய்ப் பொடி வெங்கடேசன் எனப் பட்டியல் நீள்கிறது. தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருப்பது எந்தக் கட்சி என்ற கேள்வி எழுகிறது.
கழக உடன்பிறப்புகள் மத்தியிலும் என்னை போன்ற ஆத்ரவலர்களின் மனதிலும் ஓடும் எண்ணங்களை படம் பிடித்து செய்து