
தவெகவில் முக்கிய பதவியைப் பெற்று முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்காக வருமான வரித்துறையின் துணை ஆணையர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் அருண்ராஜ் விஜயை வேவுபார்க்க பாஜகவால் அனுப்பப்பட்ட உளவாளி என்ற தகவல் பரவுகிறது.
யார் இந்த அருண்ராஜ்?
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார். மருத்துவத்துறையில் பிடிப்பு இல்லாமல் இருந்து வந்த அருண்ராஜ், நிர்வாகத்துறையினை விரும்பி 2009இல் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதி ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆனார். தமிழ்நாட்டில் வருமான வரித்துறையில் இணை ஆணையராகப் பதவி வகித்து வந்தார்.
பல உயர்மட்ட வருமான வரித்துறை சோதனைகளுக்கு தலைமை தாங்கி வந்த அருண்ராஜ், வருமான வரித்துறையின் பல உயர்மட்ட வழக்குகளை கவனித்து வந்தார். 2016இல் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டு ரெய்டுக்கு பிறகு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு மாறினார். தவெகவுக்காக முழுநேரம் பணியாற்றுவதற்காக வருமான வரித்துறை பதவியை ராஜினாமா செய்திருக்கும் அருண்ராஜ், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சேலம் தொகுதியின் தவெக வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

விஜய்யுடன் நட்பு ஏற்பட்டது எப்படி?
2020இல் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜயை காரில் அழைத்து வந்து அவரது வீட்டில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பான செய்தியானது. அந்த சோதனையில் இருந்த அதிகாரி அருண்ராஜ்.
அந்த ரெய்டில் விஜய் கேட்டுக்கொண்டபடி அவருக்கு அதிக உதவிகள் செய்து அந்த ரெய்டையே காணாமல் செய்துள்ளார் அருண்ராஜ். இதனால் அருண்ராஜ்க்கு மிக நெருக்கம் ஆகிவிட்டார் விஜய்.
இந்த விவகாரம் மேலிடத்திற்கு தெரிந்து அது புகாராக மாறினதால் 2021இல் சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் ஆணையம் இவரை பீகாருக்கு தூக்கியடித்தது. பீகாரில் வருமான வரித்துறை இணை ஆணையராக பணியாற்றிக் கொண்டே விஜய்க்கு மறைமுகமாக பல உதவிகள் செய்து வந்துள்ளார்.

விஜய் தவெகவை தொடங்கியபோது பல ஆலோசனைகளை அவருக்கு அளித்து வந்திருக்கிறார். மருத்துவத்துறையில் இருந்து வருமான வரித்துறைக்கு வந்தாலும் அருண்ராஜ்க்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல் ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்த ஆர்வத்தை அவர் தவெக மூலமாக பூர்த்தி செய்து வந்துள்ளார்.
தவெகவுக்கு உதவி – ராஜினாமா
தமிழக வெற்றிக்கழகத்தை விஜய் தொடங்கிவிட்டாலும் தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் பதிவு என்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. புஸ்ஸி ஆனந்தும் பலமுறை டெல்லி சென்று போராடிப்பார்த்தும் பலனில்லை. கடைசியில் அருண்ராஜை அணுகினார் விஜய். பீகாரில் வருமான வரித்துறை இணை ஆணையராக இருந்த அருண்ராஜ், தனது செல்வாக்கை பயன்படுத்தி தவெகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த உதவி செய்துள்ளார்.
தொடர்ந்து தவெகவின் ஆலோசகராக இருந்து வந்துள்ளார் அருண்ராஜ். தவெகவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக்கொடுக்க ஜான் ஆரோக்கியசாமியை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் அருண்ராஜ். இந்த விவரங்கள் எல்லாம் வெளியே தெரியவந்ததும், மத்திய அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு விஜய்க்கு வேலை செய்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனம் வலுத்து வந்த நிலையில், ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் முழுநேர அரசியல் பணியைச் செய்யச்சொல்லி கேட்டிருக்கிறார் விஜய்.

தவெகவில் முழு நேரப் பணிக்கு வருவதென்றால் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்றும், நேருக்கு நேராக விஜய்யிடம் மட்டும்தான் பேசுவேன் . சுற்றி வளைத்து யாரிடமும் பேச மாட்டேன் என்று சொல்ல விஜய் அதற்கு சம்மதித்திருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் பொதுச்செயலாளர் ஆக இருக்கும் நிலையில் அருண்ராஜ்க்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அல்லது அதற்கு நிகரான பொறுப்பு வழங்க விஜய் முடிவெடுதுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்தே விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் அருண்ராஜ். இவரின் விருப்ப ஓய்வுக்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

பாஜகவின் நீண்டகால திட்டமா?
ரெய்டில் விஜய்க்கு உதவியது, அதன் மூலம் விஜய்யுடன் நெருக்கம் ஆனது, அந்த நெருக்கத்தில் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றம் உங்களால் பிறக்கட்டும் என்று விஜயை உசுப்பேத்தி தவெகவை தொடங்க வைத்தது எல்லாம் பாஜகவின் நீண்டகால திட்டம் என்கிற தகவல் பரவுகிறது. விஜய்யை தொடர்ந்து கண்கானிக்கவே அவரை வேவு பார்க்கவே வருமான வரித்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய வைத்து, பாஜக அனுப்பிய உளவாளி அருண்ராஜ் என்றும் தகவல் பரவுகிறது.