
கொள்கை தவறி எடுத்தது எல்லாம் தவறான முடிவுகள் என்று இப்போது உணர்ந்து, ’’வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்துவிட்டது’’ என்று கண் கலங்கி நிற்கிறார் ராமதாஸ். அழகான ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்துவிட்டார் என்றும் அன்புமணி மீது குற்றம் சுமத்துகிறார் ராமதாஸ்.
பாமகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. தன் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சத்தியம் செய்திருந்தார் ராமதாஸ். அந்த சத்தியத்தை மீறியதற்காக இப்போது வருந்துகிறார்.
தன் மகன் அன்புமணியை பாமகவின் இளைஞரணி தலைவராக்கிய ராமதாஸ், அவரை மத்திய கேபினெட் அமைச்சராக்கியும் அழகு பார்த்தார். அடுத்து முதல்வர் வேட்பாளராகவும் களமிறக்கிப் பார்த்தார். இது போதாது என்று ஜி.கே.மணியிடம் இருந்த தலைவர் பதவியைப் பிடுங்கி அன்புமணிக்கு கொடுத்து அழகு பார்த்தார் ராமதாஸ். அது தவறு என்று இப்போது கவலையுடன் தெரிவிக்கிறார் ராமதாஸ். ‘’என் சத்தியத்தையும் மீறி 35 வயது அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் தவறுதான்’’ என்று கண் கலங்குகிறார்.

மோதல் – சவால் : வாரிசு அரசியல் இல்லை என்ற பாமகவின் கொள்கையை மீறி அன்புமணியை கொண்டு வந்தபோதே கட்சிக்குள் எரிச்சல் உண்டாகியது. இப்போது தனது மூத்த மகள் மகன் முகுந்தனையும் கட்சிக்குள் கொண்டு வந்த போது பாமகவினர் அதிர்ந்தனர்.
வாரிசு அரசியல் தன்னோடு மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்பிய அன்புமணி முகுந்தனின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, ராமதாஸ் தன் முடிவில் உறுதியாக நிற்க பாமகவில் மோதல் வெடித்தது.
பொதுக்குழு மேடையிலேயே ராமதாசும் அன்புமணியும் மோதிக்கொண்டனர். மைக்கை தூக்கி வீசினார் அன்புமணி. தன்னை இனிமேல் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று தன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் அன்புமணி.
இதைத்தான் ராமதாஸ், ‘’மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியா? நான்கு சுவற்றுக்குள் முடிக்கின்ற விசயத்தை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? பனையூரில் அலுவலகம் திறந்திருக்கிறேன் என்கிறார். அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை’’ என்றே இச்செயல்கள் காட்டுகின்றன என்கிறார்.
அன்றிலிருந்தே பாமகவில் 90 சதவிகித மா.செக்களை தன் வசம் வைத்திருக்கிறார் அன்புமணி. இதனால்தான் தற்போது ராமதாஸ் கூட்டும் எந்தவொரு கூட்டத்திற்கும் கூட்டம் கூடுவதில்லை.
இதில் அன்புமணியின் தலைவர் பதவியை பிடுங்கி தான் வைத்துக்கொண்டு அன்புமணியை செயல் தலைவராக அறிவித்ததை ஏற்கவில்லை அன்புமணி. அதனால், ‘நானே தலைவர்’ என்று கட்சியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மன உளைச்சல் : அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் வெளியேற்றப் போவதாகவும், அன்புமணியின் ஆதிக்கத்தால் வேறு வழியின்றி தான் ஓரங்கட்டப்பட்டதை உணர்ந்த ராமதாஸ் கட்சியிலிருந்து தானே ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்றும் மாறி மாறி தகவல் பரவிய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கட்சியில் இருக்கும் பிரச்சனை குறித்து பேசியும், கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அன்புமணியை கடுமையாக விமர்சித்தும் பேட்டி கொடுத்திருக்கிறார். கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகச் சொல்லி அனுதாபம் தேட நினைக்கிறார் அன்புமணி என்று சொல்கிறார் ராமதாஸ். உண்மையில் கடுமையான மன உளைச்சலில் இருப்பது தான் தான் என்பதை ராமதாசின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்கின்றன.
அன்றைக்கே நான் செத்துட்டேன்: மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டு மேடையில் முகுந்தனுக்கு நாற்காலி போட வேண்டும் என்று ராமதாஸ் சொல்ல, அதற்கு அன்புமணி ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஆத்திரத்தில் அன்புமணியை அந்த மேடையில் யாரும் தலைவர் என்று சொல்லக்கூடாது என உத்தரவு போட, அந்த கோபத்தில், தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் 100 பேர் போகவில்லை. 108 பேரில் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். அன்புமணியே 100 பேருக்கும் போன் செய்து யாரும் கூட்டத்திற்கு போகக்கூடாது என்று உத்தரவிட்டதால்தான் யாரும் போகவில்லை என்று அப்போது தகவல் பரவியது. அதை இன்று உறுதிப்படுத்தி இருக்கிறார் ராமதாஸ்.
’’அய்யா என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தூக்கப்போகிறார். அதற்கு கையெழுத்து வாங்கத்தான் உங்களை எல்லாம் அழைக்கிறார் என்று அன்புமணி ஒரு பொய்யைச் சொல்லி எல்லோரையும் வரவிடாமல் செய்துவிட்டார். 108 பேரில் 8 பேர்தான் வந்திருந்தார்கள். அன்றைக்கே நான் செத்துட்டேன்’’ என்கிறார் ராமதாஸ்.

விமானத்தில் கேட்ட கேள்வி – இரண்டு சொட்டு கண்ணீர் : பின்னாளில் முகுந்தன் மாதிரியான பூகம்பங்கள் கிளம்பும் என்று முன்கூட்டியே யோசித்துதான் ஆரம்பத்தில் இருந்தே கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட துடித்திருக்கிறார் அன்புமணி.
’’ஆறு வருடங்களுக்கு முன்பே பிரதமர் மோடி பதவியேற்புக்கு போய்விட்டு திரும்புகையில் விமானத்தில் நான் முன் இருக்கையிலும் அன்புமணி அப்போது பின் இருக்கையிலும் அமர்ந்திருந்தார். அப்போது என்னைப்பார்த்து கட்சியை இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார் அன்புமணி. அதைக்கேட்டதும், இரண்டு சொட்டு கண்ணீர் தானகவே விழுந்தது. நான் எந்த பதிலும் சொல்லவில்லை. விமானத்தில் இருந்து இறங்கியதும் நேராக தைலாபுரம் தோட்டம் வந்துவிட்டேன்’’ என்று சொல்கிறார் ராமதாஸ்.
கட்சி அதிகாரம் யாருக்கு? என்ற விவகாரத்தில் தனக்கு 14 பஞ்சாயத்து வைத்தாக வேதனையுடன் சொல்கிறார் ராமதாஸ். ‘’பசுமை தாயகம், மக்கள் தொலைக்காட்சி என்று பாமகவில் நான் 34 துணை அமைப்புகளை உருவாக்கி இருக்கிறேன். இந்த அமைப்புகளை வைத்து எனக்கு 14 பஞ்சாயத்து வைத்தார் அன்புமணி. அந்த 14 பஞ்சாயத்தின் முடிவுமே, கட்சியை அய்யா பார்த்துக்கொள்ளட்டும்; நீங்க மக்களைப்பாருங்க என்று சொன்னாங்க. ஆனா அன்புமணியின் எண்ணம் என்னவென்றால், கேட்டை இழுத்து சாத்திக்கிட்டு யாரையும் உள்ளே வரக்கூடாது என்று சொல்லவேண்டும் என்பதுதான்’’ என்கிறார்.
தற்கொலை மிரட்டல் : 2024 நாடாமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை உதவி பாஜகவில் கூட்டணி சேர்ந்ததில் ராமதாசுக்கு விருப்பம் இல்லை. ஆனால் மத்திய அமைச்சர் கனவில் ராமதாசிடம் கண்ணீர் விட்டு கதறி கூட்டணியில் சேர்ந்தார் அன்புமணி. பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்று மிராட்டினார். அன்புமணியும் சௌமியாவும் என் காலைப்பிடித்து அழுதார்கள். அதனால் எதுவும் சொல்ல முடியாமல் பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டேன். நான் சரி சொன்ன மறுநாளே அண்ணாமலை தைலாபுரம் வந்துவிட்டார். எல்லா ஏற்பாடுகளையும் சௌமியா செய்து வைத்திருந்திருக்கிறார். அது எனக்கு தெரியாமல் போய்விட்டது’’ என்கிறார் ராமதாஸ்.
அந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பாமக மூன்று இடங்களில் வென்றிருக்கும். அதிமுக 6,7 தொகுதிகளில் வென்றிருக்கும். எல்லாம் அன்புமணியின் தவறான முடிவால் வீணாய் போய்விட்டது என்று குற்றம் சுமத்துகிறார் ராமதாஸ்.
பெற்ற தாய் மீதே தாக்குதல் : கட்சி அதிகாரத்தை தன்னிடம் முழுவதுமாக ஒப்படைத்துவிட வேண்டும் என்று சொல்லி அன்புமணியும் சௌமியா அன்புமணியும் தைலாபுரத்தில் தகராறு செய்தார்கள். இதில் தன் அம்மா என்றுகூட பார்க்காமல் சரஸ்வதி மீது பாட்டிலை தூக்கி வீசி எறிந்தார் அன்புமணி. நல்லவேளையாக பாட்டில் அவர் மீது விழவில்லை என்று செய்திகள் பரவின. அதிகார போட்டியில் தைலாபுரம் வீட்டில் நடக்கும் சண்டைகள் எல்லாம் வெளியே தெரிந்தால் அதிர்ச்சியாக இருக்கும் என்று தகவல் பரவி வந்த நிலையில் அதை இன்று ராமதாஸ் போட்டு உடைத்திருக்கிறார்.
முகுந்தன் விவகாரம் குறித்து பேச்சு வார்த்தையில், ‘’உன் ரெண்டாவது மகளை இளைஞரணி தலைவராக்கிட்டா சும்மா இருந்திருப்பே’’ என்று சொன்ன தாய் சரஸ்வதி மீது சாப்பிட்டுக் கொண்டிருந்த அன்புமணி பாட்டிலை எடுத்து வீச அவர் தப்பித்துவிட்டார்’’ என்கிறார் ராமதாஸ். இதைச் சொல்லும்போதே அவரது நா தழுதழுத்தது.

கவுரவம் :அன்புமணிக்கு தலைமைப்பண்பு அறவே இல்லை’’ என்று சொல்கிறார் ராமதாஸ். ஆனால் தலைவர் பொறுப்பு தனக்கு வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார் அன்புமணி.
தலைவர் பதவியை கொடுத்து அதை பிடுங்கிக்கொண்டதால் அதை ரொம்பவே அவாமனகரமானதாக நினைக்கிறார் அன்புமணி. அதனால் அவர் செயல் தலைவராக செயல்பட விரும்பம் இல்லாமல் இருக்கிறார்.
செயல் தலைவராகவே தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ஒப்புக்கொண்டால் பாமகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார் ராமதாஸ். இதில் அன்புமணி கவுரவ குறைச்சல் பார்ப்பார் என்றுதான், ‘’தகப்பனிடம் தோற்பது ஒன்றும் அவமானகரமானது அல்ல’’ என்று சொல்கிறார்.
ஆனால் அன்புமணியோ செயல் தலைவராகவே செயல் பட முடியாது. தலைவர் பதவிதான் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பொதுக்குழு ஒப்புதல் இல்லாமல் செயல் தலைவர் என்று ராமதாஸ் சொல்லிவிட்டதால், கட்சியில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான பலமும், அதிகாரமும் அன்புமணிக்கே இருக்கிறது. இதனால் அன்புமணி கையில் மாவட்ட செயலாளர்களின் பலம் இருக்கிறது. அதனால்தான் அவர் ராமதாஸ் கூட்டும் கூட்டத்திற்கு மா.செக்கள் செல்லாமல் செய்ய முடிகிறது. தன் அழைப்பிற்கு வராத மா.செக்களை கட்சியை விட்டு தூக்க நினைத்தாலும் அது முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறார் ராமதாஸ்.
பலம்:ஜி.கே.மணி, காடுவெட்டி குரு உள்ளிட்ட பாமக மூத்த தலைவர்களை மரியாதையாக நடத்தவில்லை அன்புமணி. ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரனின் நியமன கடிதத்தை கிழித்து எறிந்தார் அன்புமணி. குடும்பத்துடன் வந்திருந்த தமிழ்க்குமரனை பொதுக்குழு கூட்டத்தை விட்டு வெளியேற்றிவிட்டார் அன்புமணி. கட்சியின் நிர்வாகக்குழுவில் உள்ள 19 பேரின் பேச்சை அன்புமணி கேட்பதில்லை. அவர்களின் கருத்து வெளியே செல்ல அனுமதிப்பதும் இல்லை என்று அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் கூட கட்சியின் 90 % அதிகாரைத்தை கைப்பற்றி கட்சியில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அன்புமணி.

இமேஜ்: அன்புமணி பற்றி அத்தனை உண்மைகளையும் உடைத்துவிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்து கட்சி அதிகாரத்தை தான் கைப்பற்ற நினைத்தாலும் விடாக்கொண்டன் கொடாக்கொண்டனாக இருக்கிறார் அன்புமணி. கூசாமல் பொய் சொல்லுவார், தலைமைப்பண்பு இல்லாதவர், மேடை நாகரீகம் தெரியாதவர் என்று அன்புமணியின் ‘’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’’ இமேஜ்க்கு தீ வைத்திருக்கிறார் ராமதாஸ். இதை அணைக்கப் போராடுகிறார் அன்புமணி.
இதனால் தான் யார் என்று காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. பாமக மாவட்டச் செயலாளர்களை நாளை சந்திக்கிறார் அன்புமணி. தைலாபுரத்தில் நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்திருக்கும் நிலையில் அதற்கு போட்டியாக சோழிங்கநல்லூரில் சந்திக்கிறார் அன்புமணி.
அக்கூட்டத்தில் என்ன பேச முடிவெத்திருக்கிறார் அன்புமணி?