
நான் என்ன விரும்புகிறேனோ அதைத்தான் நீ சாப்பிட வேண்டும் என்பது வன்முறை. இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வன்முறை தலைவிரித்து ஆடி, மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் நசீம் குரேஷி என்ற 56 வயது முஸ்லிம் சமுதாயத்தவர் மாட்டுக்கறியை எடுத்துச் சென்றதாக சந்தேகத்திற்குள்ளாகி, ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். பீகாரிலிருந்து ஹரியானா மாநிலத்தில் வேலை தேடிச் சென்ற ஒருவர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று 5 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி கொலை செய்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் 45 வயது முஸ்லிம் வணிகர் ஒருவர் மாட்டுக்கறியைக் கொண்டு சென்றதாக அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில், 2015ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் முகமது அக்லக் என்ற முஸ்லிம் நபர் மீதான தாக்குதலும் அவரது படுகொலையும்தான் இதற்கான முதன்மையானக் காரணமாக அமைந்தது. பசு என்பது இந்து மதப் பண்பாட்டில் புனிதமாகக் கருதப்படுவதாலும், காளை என்பது ரிஷபம் என்ற பெயரில் சிவனின் வாகனமாக இருப்பதாலும் மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாது என பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இந்த உணவு அரசியல் தாக்குதலில் அதிகம் குறி வைக்கப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம்களும், பட்டியல் இன மக்களும்தான். முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடும் பட்டியல் இன மக்கள் இந்து சனாதன தர்மத்திற்குள் வராத பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். இதனால் இரு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உயிர் பறிக்கப்படுகிறது.
இந்துக்களில் பலர் ஆட்டுக்கறி, கோழி, மீன், முட்டை போன்ற இறைச்சி உணவுகளை சாப்பிடக்கூடியவர்கள்தான். இவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். மாட்டுக்கறி அரசியலைத் தொடங்கிய பா.ஜ.க.வும் அதன் பரிவாரங்களும் மெல்ல மெல்ல நகர்ந்து இறைச்சி உணவுக்கு எதிரான பரப்புரைகளைத் தொடங்கியதுடன், பொது இடங்களில் இறைச்சி உணவு சாப்பிடுவதற்குத் தடைகளையும் பலவித கெடுபிடிகளையும் விதிப்பது வழக்கமாகிவிட்டது.
காய்கறி உள்ளிட்ட சைவ உணவு சாப்பிடுபவர்கள் மேலானவர்கள் என்றும், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு சாப்பிடுபவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குவதிலும், அதையே வாழ்க்கை முறையாகக் கடைப்பிடிக்கச் செய்வதிலும் பா.ஜ.க.வின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு கார்ப்பரேட் சாமியார்கள் உருவாக்கியுள்ள ஆசிரமங்கள், மடங்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் துணை நிற்கின்றன. இதன் காரணமாகப் பள்ளிகளில் கூட உணவு அரசியல் நுழைந்து, மாணவர்கள் தங்கள் டிபன் பாக்ஸில் எதை எடுத்து வரவேண்டும், எதை எடுத்து வரக்கூடாது என்று நிர்பந்திக்கும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
தமிழக பா.ஜ.க. சட்டப்பிரிவின் துணைத் தலைவர் குமரகுரு நடத்திவரும் தனியார் பள்ளியில், அசைவ உணவின் வாசனை சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதால் மீன், முட்டை உள்பட எவ்வித அசைவ உணவும் கொண்டுவரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள செய்தி, ஊடகங்களில் பரவலானது. இதுகுறித்து கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகி குமரகுரு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், ஒரு சில மாணவர்களின் நலன்களுக்காக மற்ற மாணவர்கள் அசைவ உணவு கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தான உணவு என்பது அசைவம்தானா? சைவத்தில் சத்து இல்லையா? முட்டை கூட கொண்டு வரக்கூடாதா என்று கேட்கிறார்கள். எந்த சைவ ஹோட்டலிலாவது முட்டை உள்ளதா? ” என்றெல்லாம் கேட்டு நியாயம் பேச முயன்றிருக்கிறார்.
ஒரு சில மாணவர்களுக்காக, பெரும்பாலான மாணவர்களின் உணவு முறைக்குத் தடை விதிப்பதென்பது, பள்ளிக்கூட விதிமுறை கிடையாது. அது குருகுலக் கல்வி முறை. சேரன்மாதேவி குருகுலத்தில் காந்தி காலத்து காங்கிரஸ் நிதியில் ஒரு சில மாணவர்களுக்காக பெரும்பான்மையான மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகத்தான், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கமே தோன்றியது. அந்த இயக்கத்தின் நூற்றாண்டில் அதே குருகுல பாணி நிபந்தனைகளை விதித்துள்ளது குமரகுருவின் தனியார் பள்ளி. பா.ஜ.க அரசின் தேசிய கல்விக்கொள்கையின் நோக்கமும் குருகுல பாணியிலேயே உள்ளதால் இனி பல பள்ளிகளிலும் இதே நிலை உருவாகலாம்.
முட்டை என்பது இந்திய குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய மலிவு விலையிலான புரதச் சத்து நிறைந்த உணவு. அதனால் மத்திய அரசின் உணவுத் துறை சார்பிலேயே முட்டை குறித்த விழிப்புணர்வும், அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தி பல ஆண்டுகளாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவில் முட்டை வழங்கப்படுவதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான வளர்ச்சியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பற்றி இந்திய அளவிலான ஆய்வறிக்கைகள் பல வெளியாகியுள்ளன.
இவற்றுக்கு நேர்மாறாக, மேல்தட்டு கண்ணோட்டத்தில் அசைவ உணவு மீதான வெறுப்பு, அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் மட்டம் என்ற பார்வையில் பா.ஜ.க. நிர்வாகியின் பள்ளியில் உணவு அரசியல் சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது ஆதிக்கத் திமிரைக் காட்டுகிறது. தனியார் பள்ளிகள் மீது கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டியதும், ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையானவர்களின் உணவுப்பழக்கம் தடையின்றித் தொடரச் செய்வதும் அவசியமாகும்.