அரியானாவில் தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்பதற்காக சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமண நிகழ்வில் சிறுமி மாயம்
அரியானா (Haryana) மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண விழா நடந்துள்ளது. அப்பொழுது அங்கு விளையாடிக்கொண்டிருந்த விதி என்ற சிறுமி மாயமாகியுள்ளார்.
திருமண வீட்டில் பரபரப்பு
தொடர்ந்து, சிறுமி விதியின் உறவினர்கள் திருமண மண்டபத்தில் பல பகுதிகளில் சிறுமியை தேடியும் கிடைக்காததால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அச்சமடைந்தனர்.
மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு
இதனிடையே மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியில் சிறுமி விதி (vidhi) நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமி விதி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். மேலும், சிறுமி திருமண வீட்டில் விளையாடியது, அவர் யார் யாருடன் பேசினார் என வீடியோ பதிவுகளை வைத்து விசாரித்தனர்.
கொலையாளி பூனம் கைது
அப்போது, சிறுமி கடைசியாக ஒரு பெண்ணுடன் மாடிப்படி ஏறி சென்றதும், அப்பெண் பூனம் (வயது 34) என்றும் தெரியவந்தது. உடனே பூனத்தை போலீசார் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், பூனத்திடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்வெளியானது.
தன்னைவிட அழகு என்பதால் கொலை
சிறுமி விதி திருமண வீட்டில் அழகாக இருந்ததாகவும், தன்னைவிட யாரும் அழகாக இருக்கக் கூடாது என்ற பொறாமையில் சிறுமி விதியை கொலை (Murder) செய்ய திட்டம் தீட்டி மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, ஒரு அறைக்குள் சிறுமியை அழைத்து சென்ற பூனம் வாளியில் உள்ள தண்ணீருக்குள் சிறுமியின் தலையை அமுக்கி கொலை செய்துள்ளார். இதன் பின்னர் எதுவும் நடக்காதது போல் கதவை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சொந்த மகன் உட்பட 3 குழந்தைகள் கொலை
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், 2023-ம் ஆண்டில் தன்னைவிட அழகாக இருந்ததாக அவரது மைத்துனியின் 9 வயது சிறுமி இஷிகாவை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுள்ளார். அப்பொழுது பூனத்தின் 3 வயது மகன் சுபத் பார்த்து விட்டான் என்பதால், வெளியில் சொல்லிவிடுவான் என பயந்து சுபத்தையும் கொலை செய்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு தனது தாய் வீட்டில் உறவினரின் 6 வயது மகள் ஜியாவை நீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் கொலையாளி பூனம் போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இச்சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
