வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே!, சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து!, தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே! ஆகிய முழக்கங்களோடு, வரும் 16 அன்று ஒரே நாளில், சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும், திருச்சியில் காதி கிராப்ட் அருகிலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்கள் எதற்காக?
’’இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாக்குரிமையை மறுத்துவிட்டு, வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பீகாரிகள் உள்ளிட்ட இந்திக்காரர்களுக்கு வாக்குரிமை வழங்கி, அவர்களை தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாக மாற்றும் சதித் திட்டத்தை, இந்தியத் தேர்தல் ஆணையம் “சிறப்புத் தீவிர சீராய்வு என்ற திட்டத்தின் வழியே செய்து கொண்டிருக்கிறது.
வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் , செயற்கையான முறையில் இந்திக்காரர்கள் உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுகிறது. அதன்வழியே, தமிழ்நாட்டு அரசியலில் செயற்கையான குறுக்கீட்டையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேரும், அரியானாவில் 25 இலட்சம் பேரும் நம் கண் முன்னேயே வாக்காளர் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அரியானாவின் 10 வாக்குச்சாவடிகளில், பிரேசிலை சேர்ந்த ஒரு நடிகையின் ஒரே புகைப்படத்தைக் கொண்டு போலியான முறையில் 22 வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட செய்தி, தேர்தல் ஆணையம் எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பதை முகத்தில் அடித்தாற்போல் உணர்த்தியது.
இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், நலிந்த பிரிவினர் என பீகாரிலும், அரியானாவிலும் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டிலோ இலட்சக்கணக்கான தமிழர்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பீகாரிகள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்து கொண்டிருக்கிறது.
வேலைக்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்ற வாக்காளர்களை பட்டியலில் இணைப்பது இந்த சீராய்வுத் திட்டத்தின் நோக்கமாக(Point No: 7, Election Commission of India Order No: 23/ERS/2025 dated 24.06.2025) இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. இதன் வழியாக, இந்த “சிறப்புத் தீவிர சீராய்வு” திட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்காக தமிழ்நாட்டில் குடியேறியவர்களை தமிழ்நாட்டுப் பட்டியலில் இணைப்பதையே நிறைவேற்றப் போகிறது.

தமிழ்நாட்டில் பீகாரிகள் மட்டுமின்றி, உ.பி., அரியானா, ம.பி., சார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இந்தி மாநிலங்களைச் சேர்ந்த சற்றொப்ப 1 கோடிக்கும் மேற்பட்டோர் குடியேறியுள்ள நிலையில், அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டால், தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாக அவர்கள் வலுப்பெறுவார்கள். தமிழ்நாட்டையே நிரந்தர வசிப்படமாகக் கொண்டு இங்கேயே நிலைபெற அவர்கள் அதிகாரம் பெறுவார்கள். அதன்பிறகு, அரசு நிர்வாகம், கல்வி, வேலை வாய்ப்புத் தேர்வு அனைத்திலும் இந்தியைத் திணிப்பது தீவிரமாக நடக்கும். ஏற்கெனவே உள்ள ஆங்கிலத்தோடு, இந்தியும் சேர்ந்து கொண்ட தமிழர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி விடும்!’’இதனால்தான் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறோம் என்கிறது தமிழ்த் தேசிய பேரியக்கம்.
தமிழர்கள் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டுமெனில், தேர்தல் ஆணையம் கொடுக்கும் SIR படிவத்தை உடனே நிரப்பித் தர வேண்டுமாம். அதிலோ, 2002ஆம் ஆண்டு வாக்களித்த விவரங்களையோ, அவரது இல்லத்தினர் வாக்களித்த விவரங்களையோ இணையதளத்தில் பெயரைப் போட்டுப் பார்த்து, நாமே தேடித் தர வேண்டுமாம். தேர்தல் அலுவலர்கள் செய்ய வேண்டிய அலுவலகப் பணிகளை, வாக்காளரே செய்ய வேண்டும் என நிர்பந்தித்து, வாக்காளர்கள் அதை சரியாக நிரப்பித் தரவில்லை என்ற போலிக் காரணத்தைக் கூறி, தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது தான் இதன்வழியே நடக்கப் போகிறது.

பாஜகவுக்கு தொடர்ந்து பெரும்பான்மைத் தமிழர்கள் வாக்களிக்க மறுக்கும் நிலையில், இந்திக்காரர்களைத் தமிழ்நாட்டு வாக்காளர்களாக்கி, தமிழ்நாட்டிற்குள்ளேயே பா.ச.க.வுக்கான வாக்கு வங்கியை உருவாக்கிடவே இத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்துகிறார்கள். அசாம், திரிபுரா, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மண்ணின் மக்களை விட அதிகளவில் இந்திக்காரர்களைப் படிப்படியாகத் திட்டமிட்டுக் குடியமர்த்தி, செயற்கையான வாக்கு வங்கியை உருவாக்கியதன் வழியே, அங்கெல்லாம் ஆட்சி இப்போது நடக்கிறது. எனவே, தமிழர்கள் விழிப்போடு இத்திட்டத்தை எதிர்த்துக் களம் கண்டு, பேரெழுச்சியை உருவாக்க வேண்டுமென என அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
