
பெரியார் சென்றது சுற்றுலா அல்ல. கற்றுலா. பல நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையையும், அந்நாட்டு அரசாங்க அமைப்பு முறையையும், மக்களுக்கும் அரசுக்குமான உறவையும், மதம்-கடவுள் போன்றவற்றை அவர்கள் எப்படி கையாளகிறார்கள் என்பதையும் பெரியார் கற்றுக் கொள்ள விரும்பினார். மனிதர்கள் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்திய தத்துவ மேதை சாக்ரடீஸின் சிலையை கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் கண்டார் பெரியார். அது அவருக்கு நெகிழ்ச்சியான நேரம்.

உண்மையைப் பேசியதற்காகவும், பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை சிந்திக்கத் தூண்டியதற்காகவும் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொன்றது கிரேக்க அரசு. ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற சாக்ரடீசின் சிந்தனை உலகம் முழுவதும் பரவியது. பெரியாரோ தன்னை நோக்கிய விமர்சனம் என்கிற விஷத்தை விழுங்கி, இன்றளவும் உயிர்த்திருக்கின்ற சிந்தனையாளர். தன் மீதான சொல்லடி, கல்லடி, செருப்பு வீச்சு, கலவரம், சிறைவாசம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு சளைக்காமல் பயணித்தவர். அதனால்தான், முன்னோடி பகுத்தறிவுவாதியான சாக்ரடீஸ் சிலை முன்பாக நிதானமாக நின்று சிந்தித்தார் பெரியார்.
“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். இந்தப் பணியை செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் இதைச் செய்ய முன் வராததால் நான் இதனை செய்கிறேன்” என்று வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார். அவருடைய இந்த பெரும்பணிக்கு பதவி எதுவும் கிடைக்காது என்பதும், பாராட்டு கிடைக்காது என்பதும் அவருக்குத் தெரியும். விமர்சனங்களுக்கு அஞ்சாமல் அவர் பணியைத் தொடர்ந்தார்.
“நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். ஆராய்ந்து முடிவெடுங்கள். அவர் சொல்லிவிட்டார் இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையும் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனசாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய காலம் இது” என்பதை ஏற்கனவே வலியுறுத்தி வந்த பெரியார், தன்னுடய ஐரோப்பிய பயணத்தின் தொடக்கத்திலேயே அதை உறுதி செய்து கொண்டார்.
முதல் உலகப் போருக்குப் பிறகு, உலகின் அரசியல் போக்கும் சிந்தனைகளும் மாறியிருந்தன. சோவியத் யூனியன் என்கிற புதிய பொதுவுடைமை பூமி புரட்சியால் உருவாகியிருந்தது. மன்னர்களின் ஆட்சி அதிகாரம் குறைந்து, குடியரசு ஆட்சிகள் பல நாடுகளில் உருவாகியிருந்தன. ஏகாதிபத்திய அரசுகளின் வலிமை குறைந்தது. பிரிட்டன்-பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த காலனி நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அறிவியல் தொழில்நுட்பமும் மருத்துவக் கண்டுபிடிப்புகளும் பெருகிக் கொண்டிருந்தன. மேலை நாடுகளில் இதற்கான கட்டமைப்புகள் வலுப்பெற்று வந்த நிலையில்தான், பெரியார் தனது பயணத்தை மேற்கொண்டார்.
வெப்ப நாடான இந்தியாவிலிருந்து கடுமையான கப்பல் பயணத்தில் ஐரோப்பாவுக்கு சென்றவருக்கு அங்குள்ள குளிர் சிரமப்படுத்தியது. முதல் சில நாட்கள் அவரது உடையில் பெரிய மாற்றமில்லை. “தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளிக் குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம், ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தான். முட்டை இவ்விடம் மிக மலிவு. 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது” என்று பெரியார் சொல்கிறார்.
பெரியார் தனக்கானத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, பொது காரியங்களுக்கு முன்னுரிமை தருபவர். குடிஅரசு 27-12-1931 இதழில் பண்டிதர் திருஞானசம்பந்தர் என்பவர் பெரியாரின் பயணம் பற்றி எழுதுகிறார். “யான் நமது பெரியாரைக் கப்பலில் ஏறி காணச் சென்றபோது அவர் நான்காவது டெக்கில் புழுதி நிறைந்த இடத்தில், நாற்றங்கள் வீசுகின்றவிடத்தில், விகாரமான நாகரிகமற்ற பாமர மக்களுடன் வீற்றிருந்த காட்சி கண்டு பகைவர்களும் கண்கலங்குவரென்றால் மற்றும் யாது வரைவது. நமது தலைவர் மற்றைய தலைவர்களைப் போல முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் செல்வதற்கேற்ற செல்வநலன் உடையவராயிருந்தாலும், ஏழை மக்களின் பிரயாண நிலைமையை அறிய வேண்டுமென்றும், அவர்களுடன் அவர்கள் கஷ்டங்களைத் தானும் அனுபவித்தால்தான் தேசமக்கள் நிலையைத் தானுமறிவதோடு, பிறரும் பின்பற்றச் செய்யக் கூடுமென்னும் தியாக புத்தியில் அவ்வாறு செல்ல எண்ணங்கொண்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது. தனது மனைவியையும் பாராது, அவரது வயது சென்ற தாயையும் பாராது, மற்றுமுள்ள உற்றார்களையும் கவனியது சென்றனர் என்றால் அவரது திறனை என்னவென்று கூறுவது? அவர் பிரயாணத்தை, அவருடன் மாறுபட்டவர்களும், அவர் உண்மை தியாகத்தை நன்கறிவர். அவர்பால் சுயநலங்கருதிய அழுக்கர்களே புறங்கூறவும், பொறாமை கொண்டு தூற்றவும் செய்வர்.”
-குடிஅரசு இதழில் பண்டிதர் திருஞானசம்பந்தர் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்த வேளையில், ஐரோப்பாவில் சமுதாய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் பெரியார். அவர் தன் பயணம் பற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொருவரும் கவனிக்கத்தக்கவை.
“பட்டிக்காட்டில் உள்ளவனுக்கு தாலுக்கா ஒரு கண்காட்சி. தாலுக்காவை விட்டு வெளியே வராதவனுக்கு ஜில்லா ஒரு கண்காட்சி. ஜில்லாவிலிருப்பவனுக்கு மாநிலத்தின் தலைநகர் கண்காட்சியாகும். தலைநகரில் இருப்பவனுக்கு பம்பாய்-லண்டன் போன்ற பெரிய நகரங்கள் கண்காட்சியாகும். இம்மாதிரி பெரிய நகரங்களைப் பார்ப்பதும் ஒரு கண்காட்சி போன்றுதான் ஆகும். ரயிலைவிட்டு இறங்கி வண்டியில் ஏறி, தாஜ்மகால் ஓட்டலில் இறங்கித் தங்கிவிட்டு வந்தால் விஷயம் தெரியாது. விஷயம் தெரியவேண்டுமென்றால் வீதியில் நன்றாகத் திரிய வேண்டும்.
அப்போதுதான் அந்நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள், அவர்களது நிலை என்ன- வாழ்க்கைமுறை எப்படி என்பவைகள் தெரியும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளை சுற்றிப் பார்த்தவன் பி.ஏ. படிப்பாளிக்குச் சமமாகும். வேண்டுமானால் இங்கிலீஷ் பேச எழுத காலேஜில் பயிலவில்லை எனலாம். ஆனால் இந்தச் சுற்றுப்பயணத்தில் தானாவே சிறிது சிறிதாக அந்த அறிவும் ஏற்பட்டுவிடும்” என்ற பெரியார், ஐரோப்பிய நாடுகளின் பல வீதிகளில் சுற்றினார். மக்களை சந்தித்தார். பல புதிய இடங்களுக்கு சென்றார். மற்றவர்கள் செல்லத் தயங்கும்- சென்றாலும் சொல்லத் தயங்கும் நிர்வாண சங்கத்திற்குப் பெரியார் சென்றார்.
(சுற்றும்)
-கோவி. லெனின்