
தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்த மலேயாவில் சனாதன-வர்ணாசிரமத்தின் வேர்களை அசைத்துவிட்டது பெரியாரின் பரப்புரை. வூயின்காயூவில் பெரியார் பேசியதை மலாயா வானொலி நிலையத்தார் ஒலிப்பதிவு செய்து, நாடு முழுவதும் கேட்கும்படி சுமார் 20 நிமிடம் ஒலிபரப்பினார்கள். நேரடியாக நிகழ்ச்சிக்க வரமுடியாத தமிழர்களும் மாலை நேரத்தில் இந்த ஒலிபரப்பைக் கேட்டு பெரியாரின் கருத்துகளை செவிமடுத்தனர்.
மலேயா ரேடியோ நிலையத்திற்கும் பெரியார் நேரடியாக சென்று அங்குள்ள ஒலிப்பதிவுக்கூடம், ஒலிபரப்பும் முறை, ஒலித்தட்டுகள் சேகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை பார்த்தார். அவருடன் தமிழ் முரசு ஆசிரியர் கோ.சாரங்கபாணி, க.இராசாராம் உடனிருந்தனர். மலேயா வானொலி நிலையத்தின் இந்திய பகுதி அதிகாரி பெரியாரை வரவேற்று, அவருடைய வருகை குறித்து மலேயா தமிழ் மக்களுக்கு செய்தி விடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பெரியார் பேசியதை மலேயா வானொலி ஒலிப்பதிவு செய்தது. “தமிழ் மக்கள் தங்களிடையே உள்ள மூடப்பழக்க வழக்கங்களையும், சாதி வேற்றுமைகளையும் விட்டொழித்து, மிக்க ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும் அல்லது ஆசையாகும். நீங்கள் உங்கள் வருவாயை உங்களுடைய குடும்பத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்தது போக, மீதியை நன்கு சேமித்து எதிர்காலத்தில் சுதந்திரமான வருவாயை ஏற்படுத்திக்கொள்ளத்தக்கத் தொழிலை செய்யக்கூடிய தன்மையைப் பெறவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் பெரியார்.
இரண்டு முறை மலேயா பயணம் மேற்கொண்ட அவருடைய பேச்சின் தாக்கம் பல இடங்களிலும் வெளிப்பட்டது. மூவார் நகரில் வசித்த ரா.ம.தண்ணிமலை செட்டியார் என்பவர் தன் அம்மாவின் மரணத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் புரோகிதர்களை அழைத்து, சமஸ்கிருத மந்திரம் ஓத வைத்து, திதி கொடுப்பது வழக்கம். பெரியாரின் பரப்புரையின் தாக்கத்தால் , புரோகிதத்தைத் தவிர்த்து ஏழை மக்களுக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார். அதுபோலவே முரு.சொக்கலிங்க செட்டியார் என்பவரும், தைப்பிங் நகரில் வசித்த சுருட்டுக்கடை முதலாளி தி.சு.க.வடிவேலு பிள்ளை என்பவரும் தங்கள் தந்தையர் நினைவுநாளில் திதி கொடுக்கும் வழக்கத்திற்குப் பதிலாக ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினர்.
மலேயா தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த இவர்கள் இப்படி செய்யத் தொடங்கியது சனாதனக் கூட்டத்திற்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. அதனால்தான் இளம் சாமியார் ஒருவரை மலேயாவுக்கு அனுப்பி பெரியார் பரப்புரை செய்த இடங்களில் பதில் கூட்டங்களைப் போடச் செய்தனர். அந்த சாமியார்தான், குன்றக்குடி அடிகளார்.
அருள்நெறியுடன் பொதுவுடைமைக் கொள்கையிலும் நாட்டமுடைய அடிகளாரை காஞ்சி மடத்தின் உத்தரவுப்படி சனாதனக் கூட்டம் தனது ஆளாகப் பயன்படுத்தி வந்தது. வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் அருள்நெறித் திருக்கூட்டம் என்ற பெயரில் பெரியாரைப் பின் தொடர்ந்து அடிகளார் பிரச்சாரம் செய்தார். இது பகுத்தறிவு சிந்தனையாளர்களிடம் மட்டுமின்றி, ஆன்மிக பக்தர்களிடமும் வியப்பை ஏற்படுத்தியது.
“பெரியார் இயக்கம் வளர்ந்தபிறகுதான் பிராமணரல்லாத சமூகத்துக்கு உரிமைகள் கிடைக்குது. கோயில் வழிபாட்டு உரிமை உள்பட எல்லாத்திலும் நமக்கு பெரியார்தான் பாதுகாப்பா இருக்காரு. அவருக்கு எதிரா நம்ம ஆள் ஒருத்தரையே பிரச்சாரம் பண்ண வச்சிருக்காங்களே?”
“இதுதானே காலம் காலமா பிராமணர்கள் கையாள்கிற உத்தி”
-ஆன்மிக நண்பர்களின் இத்தகைய பேச்சு பெரியாரின் கவனத்திற்கும் சென்றது. பெரியாருக்கு எதிராக அடிகளார் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் நண்பர்களின் விருப்பம். யார் போய் அடிகளாரை சந்திப்பது என்ற கேள்வியும் இருந்தது. பெரியாரே நேரில் போய் அடிகளாரை சந்தித்தார்.
ஈரோட்டில் சென்னியப்ப முதலியார் இல்லத்தில் குன்றக்குடி அடிகளார் தங்கியிருப்பதை அறிந்து அங்கு செல்ல முடிவு செய்தார். அடிகளாரும் பெரியாரை சந்திக்க ஆர்வமாக இருந்தார். மாடியில் தங்கியிருந்த அடிகளார் கீழே வருவதாகச் சொல்லியும் பெரியாரே மேல ஏறிச் சென்றார். பெரியாரை மதித்து வரவேற்றார் அடிகளார். ‘மஹா சந்நிதானம்‘ என்று அடிகளாரை அழைத்தார் பெரியார். இருவரும் தனியே பேசினார்கள். கடவுள், மதம், தீண்டாமை பற்றி விவாதித்தார்கள்.
“மதம், கடவுள் எல்லாம் தீண்டாமையை ஒழிக்கவில்லையே? மனிதனை மனிதனாக்கவில்லையே? ஜாதிகளை அகற்றவில்லையே? கடவுள் பெயரால்தானே இந்த அவலமான காரியங்கள் செய்யப்படுகின்றன?” என்று பெரியார் கேட்டார். “இவற்றையெல்லாம் கடவுள் செய்யவில்லையே?” என்று குன்றக்குடி அடிகளார் சொன்னபோது, “அப்படியானால் இந்த அநியாயத்தைக் கடவுள் ஏன் தட்டிக் கேட்கவில்லை?” என்று பெரியார் கேட்டதும், அடிகளார் சற்று யோசித்தார்.
பெரியார் அவரிடம், “எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? அவரை நான் பார்த்தது கூட இல்லை. எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்படவேண்டும். அவ்வளவுதான்” என்றார். “இருவரும் சேர்ந்து உழைப்போம்” என்றார் அடிகளார். “உங்கள் சம்பிரதாயங்கள் இடம் தருமா?” என்று பெரியார் கேட்டார். “முயற்சி செய்வோம். சம்பிரதாயங்கள் என்பதே காலந்தோறும் மாறுவதுதானே?” என்று அடிகளார் நம்பிக்கையுடன் சொன்னார்.
இருவரும் முயற்சி செய்தனர். சம்பிரதாயங்கள் தகர்ந்தன. திருச்சி பொன்மலையில் திராவிடர் கழகத்தினர் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழாவில் காவி உடுத்திய குன்றக்குடி அடிகளார் கலந்துகொண்டார். அடிகளாரின் அழைப்பை ஏற்று குன்றக்குடி மடத்திற்கு கருப்புச் சட்டை அணிந்த பெரியார் சென்றார். சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, கோவில் கருவறையில் பூசை செய்வது, தமிழ் வழிபாடு உள்ளிட்ட பலவற்றிலும் பெரியாரும் அடிகளாரும் இணைந்தே பயணித்தனர். எந்த பெரியாருக்கு எதிராக குன்றக்குடி அடிகளாரைத் தூண்டி விட சனாதனக் கூட்டம் நினைத்ததோ, அந்தக் கூட்டத்தின் திட்டம் தவிடுபொடியானது.
பெரியாரிடம் கொள்கைப் பாடம் கற்றவர்களான அண்ணாவும், கலைஞரும் மலேயாவுக்குப் பயணித்து அங்குள்ள தமிழர்களிடம் பேசினர். அவர்கள் சென்றபோது மலேசியா, சிங்கப்பூர் என இருநாடுகளாக மலேயா பிரிக்கப்பட்டுவிட்டது. 1965ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் நாள் சிங்கப்பூரில் தரையிறங்கிய பேரறிஞர் அண்ணாவுக்கு விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்ப் பண்பாட்டு அமைப்பினர், பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அண்ணாவை அழைத்திருந்தனர். அண்ணாவுடன் இரா.செழியன் பயணித்தார்.
சிங்கப்பூரில் மாபெரும் வரவேற்புப் பொதுக்கூட்டம். அண்ணாவைக் கண்டு ஆர்ப்பரிக்கும் சிங்கப்பூர் தமிழர்களை, அந்த கூட்டத்திற்கு தலைமையேற்ற சிங்கப்பூரின் மிக முக்கிய பிரமுகர் ஆச்சரியமாகப் பார்க்கிறார். அண்ணாவின் சொற்களுக்கு எழும் கைத்தட்டல் அவரது ஆச்சரியத்தை அதிகமாக்குகிறது. அண்ணா என்ன பேசுகிறார் என்பது முழுமையாகப் புரியாவிட்டாலும் உணர்வினை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது.
அவர் தனது தலைமை உரையில், “இப்படி ஒரு கூட்டத்தை இதற்கு முன் நான் எனது வாழ்நாளில் கண்டதில்லை. இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு அண்ணாவுக்கு கூடிய கூட்டமே பெரிய கூட்டம்” என்று குறிப்பிட்டார். அவர்தான், சிங்கப்பூர் பிரதமராக 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்து, இன்று காணும் சிங்கப்பூரை கட்டமைத்த மகத்தானத் தலைவர் லீ குவான்யூ.
(சுற்றும்)
-கோவி. லெனின்