
“கேஸ், கோர்ட், விசாரணை, ஜாமீன் இப்படி இழுத்தடிக்கிறதுக்குப் பதிலா இந்தக் கொடூரக் குற்றவாளிகளை ஒரு துப்பாக்கித் தோட்டாவில் முடிச்சிடணும். அதுதான் சரிவரும்” என்று இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி அறியாதவர்கள் சொல்லும் கருத்து தவறானது என்றாலும், அவர்களின் கருத்துக்கு வலுசேர்ப்பது போன்ற தருணங்கள் அமைந்து விடுகின்றன. கொடூரக் குற்றச்சாட்டுக்குள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவனுக்கு மகளிர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட மரணதண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த மரணதண்டனையை ரத்து செய்திருப்பதுடன், தஷ்வந்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ந் தேதி சென்னை போரூர் பகுதியில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியைத் திடீரென காணவில்லை. மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் அந்த சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட கொடூரத் தகவல் கிடைத்தது. விசாரணையில், அருகில் உள்ள குன்றத்தூரைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் அந்த சிறுமியை கடத்திச் சென்று, இத்தகைய கொடுமைக்குள்ளாக்கி எரித்திருப்பது தெரியவரவே, அவனைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். குண்டர் சட்டமும் பாய்ந்தது.

தஷ்வந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையானான். செலவுக்குப் பணம் கேட்டு, தன் தாயாரிடம் தகராறு செய்து அவரை அடித்துக் கொன்றுவிட்டு, தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினான் கொடூரன் தஷ்வந்த். அதனால் போலீசார் அவனை மீண்டும் கைது செய்தனர். சிறுமி பாலியல் கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. பின்னர் அதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இரண்டு தீர்ப்புகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இந்திய தண்டனை சட்டத்தின் மீதும், நீதிமன்றத் தீர்ப்புகளின் மீதும் நம்பிக்கை அதிகரித்தது. கொடூரக் குற்றவாளிகள் தப்பவே முடியாது என்ற நிலை இனி ஏற்படும் என மக்கள் நம்பினர்.
மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட தஷ்வந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, நவம்பர் 8 அன்று தீர்ப்பளித்தது. அதில், “குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றங்களை நிரூபிக்கத் தவறியதால், சிறுமி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கையும் சட்டப்படி தீவிரமாக விசாரிக்க வேண்டும். அந்த விசாரணை அறக்கோட்பாட்டின்படியே இருக்க வேண்டும். வெகுஜனங்களின் உணர்ச்சிகளாலும், புற நெருக்கடிகளாலும் நீதிமன்றங்கள் ஆளாகக்கூடாது. குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பவர் உடனடியாக விடுதலை செய்யப்படுகிறார் என்று உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவும், தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதும் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டதும், பாலியல் கொடூரத்திற்குள்ளாகி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதும் உறுதியானாலும், தஷ்வந்த் மீதான குற்றத்தை காவல்துறை தரப்பில் நிரூபிக்கவில்லை என்பதுதான் உச்சநீதிமன்ற உத்தரவின் சாரம். கீழ்க் கோர்ட்டில் ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சியங்கள் இவற்றைவிட உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை இருந்ததாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு தெரிவிக்கிறது.

கொடூர நிகழ்வு நடந்தபோது அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. அப்போதிருந்த காவல்துறை அதிகாரிகளின் விசாரணையின் நேர்மை குறித்த சந்தேகம்தான் உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் வெளிப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், அதிலிருந்த மீண்டு, ஜாமீன் பெறக்கூடிய வகையில் செல்வாக்கு பெற்றிருக்கிறான். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை செல்லக்கூடிய அளவிற்கு பொருளாதாரச் சூழலும் இருந்திருக்கிறது. தாயை அடித்துக் கொல்லக்கூடிய அளவிற்கு கல் நெஞ்சமும் வாய்த்திருக்கிறது. இதை நாம் சொல்லும்போது உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். சட்டத்திற்கும் நீதிக்கும் அந்த உணர்ச்சி முக்கியமல்ல. உண்மையை நிரூபிக்கும் ஆதாரங்களே முதன்மையானவை.
.தஷ்வந்த் குற்றம் செய்த காலத்தில் போக்சோ சட்டம் நடைமுறையில் இல்லை என்கிறார்கள். போக்சோ சட்டப்பிரிவுகள் இது போன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு கடிவாளம் போட்டு, தண்டனை பெற்றுத் தரும் என்றாலும், அவை தொடர்பாக வழக்குகளிலும் பல குளறுபடிகளை நாம் காண்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் நம்புவது வழக்கின் புலன் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறையைத்தான். அவர்கள் தரும் ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதுதான் எளியவர்களின் கடைசி நம்பிக்கை. அந்த நம்பிக்கை தகர்ந்து போகும்போது, கையறு நிலையே ஏற்படும். தலையங்கத்தின் தொடக்கத்தில் சொன்ன வரிகள்தான் மக்களின் மனதில் தோன்றும்.