மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரையும் மாற்றி, அதன் தன்மையையும் மாற்றி, மாநில அரசுகள் மீது சுமையை ஏற்றி, ஏழை மக்களுக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 100 நாள் வேலைத் திட்டம் பழைய நிலையிலேயே தொடர வேண்டும் என்பதே அதில் பயனடைந்து வரும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசின் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற்று, மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி சார்பில் 300க்கும் அதிகமான இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. சென்னை மேடவாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றதால் அது பெரிய அளவில் ஊடகங்களில் கவனம் பெற்றது. அதே நேரத்தில், ஊரகப் பகுதிகளில் நடந்த போராட்டங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தால் வாழ்வுரிமை பெறும் கிராமத்துப் பயனாளிகள், குறிப்பாகப் பெண்கள் அதிகளவில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகாத்மா காந்தி பெயரில் கொண்டு வந்த திட்டம் என்பதால், பா.ஜ.க. அரசு காழ்ப்புணர்வுடன் இந்தத் திட்டத்தை முற்றிலுமாக மாற்றி, அப்படியே முடக்கிப் போட்டுவிட திட்டமிடுகிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதுதான், கிராமத்துப் பயனாளிகளின் பயமாகவும் உள்ளது. பா.ஜ.க அரசு இதனை அலட்சியப்படுத்தி, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கான ரகசிய வேலைகளை செய்தால் அதன் விளைவுகளை அது எதிர்கொண்டே ஆகவேண்டும்.
போராட்டத்தில் கிராமத்துப் பெண்களின் குரலை மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்தினால் எதிர்கொள்ளக்கூடிய விளைவுதான், மாநில அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மீதான அலட்சியமும் ஏற்படுத்தும். குறிப்பாக, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டால் செவிலியர்கள் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்றாலும், இவர்களின் பணி நிரந்தரம் குறித்த வாக்குறுதிகளை கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தரப்பு வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரித்தான் அவர்கள் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை, மத்திய அரசின் பாரபட்சம் ஆகியவற்றை தி.மு.க. அரசு முன்வைத்து, செவிலியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டும் நிலையில், போராட்டக்காரர்களைக் காவல்துறையின் கையாளும் முறை, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியைப் போலவேதான் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகளை காவல்துறை தனது வாகனத்தில் ஏற்றி, சென்னைக்கு வெளியே கொண்டு போய் இறக்கிவிட்டது. தற்போதும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை காவல்துறை தனது வாகனத்தில் ஏற்றி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இறக்கிவிட, இரவு நேரத்திலும் செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதன்பிறகு அவர்கள் வேறொரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பல இடங்களிலும் செவிலியர்கள் போராட்டம் தொடர்கிறது. நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்தப் பணியாளர்களும் பார்ப்பது ஒரே விதமான வேலைதான். அவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு மேலும், இவர்களுக்கு 20ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவும் ஊதியம் கிடைக்கிறது. அந்த வேறுபாடு நீக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. ஒப்பந்த செவிலியர்கள் ஆயிரம் பேர் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அமைச்சரின் உறுதிமொழி செவிலியர்களின் போராட்டத்தை தற்காலிக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
செவிலியர்கள் போலவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தங்கள் போராட்டத் திட்டடங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில், ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்து பல கட்டப் போராட்டங்களை நடத்துவது ஒவ்வொரு தேர்தலின் போதும் இயல்பானதுதான். எனினும், தி.மு.க. தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை முன்வைத்து, தி.மு.க. ஆட்சியை நோக்கி நடத்தப்படும் போராட்டம் என்பது அரசின் மீதான பொறுப்பை கூடுதலாக்குகிறது.
உயரதிகாரிகளும் காவல்துறையினரும் எல்லா ஆட்சியிலும் தங்களின் நடைமுறைப்படியே செயல்படுவார்கள். ஆட்சியாளர்கள் அப்படி இருக்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள், தங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள், தேர்தல் களத்தில் பக்கபலமாக நின்றவர்கள் என்று எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். அதைவிட முக்கியமானது, போராடுபவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயம். அதை அலட்சியப்படுத்துவதும் புறக்கணிப்பதம் நியாயமல்ல.
