அரசியல் கட்சி என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான நிரந்தர அடையாளமாக மாறியிருக்கிறது கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம். கடந்த 2025 செப்டம்பரில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், நாமக்கல்லில் பகல் நேரத்தில் பேசிவிட்டு, இரவு நேரத்தில் கரூருக்கு வந்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். நீண்டநேரம் மக்களும் ரசிகர்களும் காந்திருந்ததும், அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காததும், நடிகர் விஜய் (Actor Vijay) அங்கு வந்தபோது அவரைப் பார்ப்பதற்காக ஏற்பட்ட நெரிசலுமே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்றாலும், அவரது கட்சி நிர்வாகிகள் தரப்பில், ஆளுங்கட்சியான தி.மு.க மீது பழிபோடப்பட்டது. சிகிச்சை, போஸ்ட்மார்ட்டம், நிவாரணத் தொகை என ஒவ்வொன்றையும் சதிக்கோட்பாடாக த.வெ.க.வினர் முன்வைத்தனர்.
இந்த கரூர் (Karur) உயிர்ப்பலிகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கரூர் மாவட்ட அரசு நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகிகளையும் சி.பி.ஐ. டெல்லிக்கு அழைத்து விசாரித்தது. தாங்கள் கேட்ட இடத்திற்குப் பதில் வேறு இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்ததால்தான் இந்த நெருக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும், கட்சியின் தேர்தல் பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜூனாவும் தெரிவித்துள்ளனர். த.வெ..க நிர்வாகிகள் கேட்ட இடத்தைவிட, பெரிய இடமாகவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஆவணங்களுடன் சமர்ப்பித்துவிட்டது. முதலில் கேட்ட இடத்தை த.வெ.க. நிர்வாகிகள் நேரில் பார்க்கவுமில்லை, அங்கே எத்தனை பேர் அளவுக்குத் திரள முடியும் என்பது பற்றியும் விவரமும் அறியவில்லை என்பது அவர்களை சி.பி.ஐ. விசாரித்தபோதே தெரிந்துவிட்டது.
மாலை 7 மணி முதல் 10 மணி வரை விஜய் வருகை குறித்து காவல்துறையிடம் அனுமதி வாங்கிய த.வெ.க. நிர்வாகிகள், ஏன் மதியம் 12 மணிக்கே விஜய் வருவார் என்று கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவிட்டார்கள் என்பதையும், 12 மணி முதல் 7 மணி வரை மக்கள் காத்திருந்ததால்தான், நீர்ச்சத்து குறைபாடும் நெருக்கடியால் மயக்கமும் ஏற்பட்டது என்பதையும் பற்றி சி.பி.ஐ. விசாரித்தபோது, த.வெ.க. நிர்வாகிகளிடம் உரிய பதிலில்லை. அந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்களுக்கு மட்டும்தான் என்று விசாரணைக்குட்பட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறிவிப்பில் கட்சித் தொண்டர்களுக்கு மட்டும் என்றோ, கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் என்றோ எந்த வார்த்தையும் இடம்பெறாததையும், மதியம் 12 மணி எனப் பொதுவாகத் தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்களும் திரண்டு வரும் சூழலையும், அதனால் நெருக்கடியையும் உருவாக்கியிருப்பது கட்சி நிர்வாகம்தான் என்பதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டதா என த.வெ.க. நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டபோது, கொடுத்தோம் என்று தெரிவித்துள்ளனர். காவல்துறை தரப்பில், அங்கு திரண்ட கூட்டத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கும் வகையில் கட்சியின் கட்டமைப்பு இல்லை என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர். த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள், “கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான செருப்புகள் கிடந்தன. ஆனால், காலி தண்ணீர் பாட்டில்கள் இல்லையே” என்று கேட்டபோது, “பாட்டில்களை தொண்டர்கள் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். அதனால்தான் கண்ணுக்குத் தெரியவில்லை” என்று நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். “ஓ.. செருப்பை அங்கேயே கழற்றிவிட்டு, பாட்டிலை மட்டும் ஓரமாகப் போட்டார்களா?” என செருப்படி கேள்வி கேட்டிருக்கிறது சி.பி.ஐ.
41 உயிர்ப்பலிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் எந்தப் பொறுப்பும் ஏற்கவில்லை. ஒட்டுமொத்த நிகழ்வையும் சதிக்கோட்பாடாக சித்தரித்து, ஆளுங்கட்சி மீது பழி போடுவதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தினர். தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் இவற்றைத் தவிர்க்கும் வகையில், உச்சநீதிமன்றம் சென்று, சி.பி.ஐ. விசாரணையைப் பெற்றது தமிழக வெற்றிக் கழகம். தற்போது அதன் தலைவரான நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது சி.பி.ஐ. அமைப்பு.
சி.பி.ஐ. விசாரணை (CBI Investigation) என்பது உடனடியாக முடியக்கூடியதல்ல. நீண்டகாலம் ஆகும் என்பதை பல வழக்குகள் நிரூபித்துள்ளன. அத்துடன், அது பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் என்பதால், விசாரணைக்கு சென்று உளறிய கட்சி நிர்வாகிகளால் சி.பி.ஐ.யிடம் சிக்கியிருக்கிறார் விஜய்.
