
நடிகர் KPY பாலாவின் வாரி வழங்கும் வள்ளல் குணம் இப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. காலாவதியான பழுதடைந்த வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கி பெயிண்ட் அடித்து அதை ஆம்புலன்ஸ் என்று சொல்லி கொடுப்பதாக போட்டோ ஷூட் செய்கிறார் பாலா என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விவகாரத்தில் பாலாவுக்கு துணைநிற்கிறார். அவர், ‘’பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது.
வறுமையில் வாடும் மக்களுக்கு தம்பி பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார். நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப்போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும். மாறாக உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்கு கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித்தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச்செயலாகும்.

தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை எத்தனை கேள்விகள்? உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது. அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி.
எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது? இந்த நாட்டில் உளவுத்துறை உள்ளது. பாதுகாப்பு முகமை உள்ளது. வருமானவரித்துறை உள்ளது. சிறப்புப் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளது. அது அவர்களுடைய வேலை, அவர்களுடைய கவலை. உங்களுக்கு என்ன கவலை? எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்?
இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்? தம்பி பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும்தான். உங்களுக்கு என்ன வேலை அதில்? ஏனென்றால், இப்போது தம்பி பாலாவை பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்? நீங்கள்தான் தம்பி பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள்? பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள். இப்பொழுது தம்பி பாலாவை பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன?
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற நடுக்கம் வருகின்றது. யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்ற கேள்விக்கு பதில் தருவார்களா?
அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு. தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணைநிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ‘அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!’ என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்றுகொண்டே இரு!
மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்!’’ என்று கூறியிருக்கிறார்.
திரையுலகில் இயங்கி வரும் செல்வன் அன்பு தனது சமூக வலைத்தளத்தில், ‘’பாலா பற்றிய சமீபத்திய பேட்டிகள், கான்ட்ரவர்ஸி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பொதுவாக மனிதன் இரக்க குணமுடையவன் தான். பணம் காசு இல்லையென்றாலும் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் போது ஒரு வயதான அம்மாவோ, கைக்குழந்தையோடு தாயோ வந்தால் எழுந்து இடம் கொடுப்பதில் கூட இரக்கக் குணம் தான் இருக்கிறது.
பாலாவுக்கு அது சொஞ்சம் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர் செய்தது எல்லாமே Attention seeking தான். 80களில் பரவலாக ஒரு விஷயம் அப்போது பத்திரிக்கைகளில் வந்தது. நீலிம்குமார் என்கிற ஆள் ஒரு கண்ணாடிக்கூண்டுக்குள் 27 நல்ல பாம்பு, 24 கட்டுவிரியன், கருநாகம் 9, வேறு சில பதினைந்து பாம்புகள் இவைகளுடன் 72 மணிநேரம் உள்ளேயே இருந்தார். இது இந்தியா முழுக்க அவரைக்கவனிக்க அவர் செய்த செயல்.
எலெக்ஷன் மன்னன் என்று கூட ஒருவர் இருந்தார். மேட்டூரைச்சேர்ந்த பத்மராஜன் என்பவர் 238 முறை தேர்தலில் போட்டியிட்டு தோற்றிருக்கிறார். சுயேட்சை என்கிற பெயரில் இறங்கும் அனைவருமே attention seeking ஆட்களே.
பாட்சா என்றொரு படம் வந்தது. அதில் படம் தொடங்கும் முதல் காட்சியே என்ன தெரியுமா? மாணிக்கம் கொடுத்துட்டு வரச்சொன்னாருன்னு பணத்தை கொண்டு போய் தேவைப்படும் இடங்களில் கொடுத்துவிட்டு வருவார் ஜனகராஜ். ஒரு திரைக்கதையில் ஒரு நாயகனின் கேரக்டரை படம் தொடங்கும் முன்பே நம் மனதில் பதிய வைக்கக்கூட அவன் ஏழைப்பங்காளன் எனக்காட்டி விட்டு தான் தொடங்க வேண்டி இருக்கிறது.
பாலா விஜய் டிவிக்கு வரும் போது ஒரு காமெடியனாக தான் அறிமுகமானார். அப்போது கூட attention seekingக்காக பம்பைத்தலை போன்று முடி அதிகமாக வைத்திருப்பார். மக்களிடம் அறிமுகமாயாச்சு. இனி அடுத்த லெவலுக்கு போக வேண்டும். அப்போது தொடங்கியது தான் இந்த உதவி செய்வது. ஒரு பெட்ரோல் பம்ப் ஊழியன் பைக் இல்லை என்றதும் மறுநாள் பைக்கோடு அவன் முன்னாள் நின்றார். இது தான் நான் பார்த்த முதல் வீடியோ.
அந்த நேரத்தில் இது மகா அபத்தமாகவேப்பட்டது. பைக் ஒரு மனிதனுக்கான அத்தியாவசிய பொருளே அல்ல. இந்தியாவில் எத்தனையோ மலைப்பிரதேசங்களில் சாலை இல்லாமல் நடந்து போய் தங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளும் மக்கள் உண்டு. அருமை தெரியாத ஜீவன்கள் செய்த நிகழ்வாகவே தெரிந்தது அப்போது.
அப்படி தன் கேரக்டரை தமிழகத்தில் பதிய வைக்க பாலா செய்தவை ஒரு லிமிட் வரை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. பின் கான்ட்ரவர்ஸி அவர் சினிமாவில் நடித்த போது தொடங்கியது. படத்தை ஓட வைக்க தொடங்கப்பட்ட கான்ட்ரவர்ஸி இப்போது பூதாகரமாக ஆடிக்கொண்டிருக்கிறது.
பாலா செய்வதைப் பார்த்து பலரும் செய்வார்கள் என்று அவர் சொல்வதெல்லாம் அபத்தமானது. அப்படியென்றால் கர்ணன் கதையை படித்த எல்லோருமே வள்ளலாகி இருக்க வேண்டுமே.

யூடியூபுக்கு வெளியே இது அதிகமாக பேசப்படவில்லை. கோடிகளில் நடிகர் சம்பளம் வாங்கினால் அவன் நாட்டுக்கு என்ன செய்தான் எனக்கேள்வி எழுப்புகிறார்கள். ஏன் இந்த கையேந்தும் மனம் எனத்தெரியவில்லை. மக்கள் மனதளவில் மாற வேண்டும். கையேந்தக்கூடாது. ஆள்பவர்களும் மாற வேண்டும். அப்படி மாறினால் பாலா போன்றோரின் உதவிகளுக்கு இங்கு தேவையே இருக்காது.
மிகப்பெரிய செல்வ வளமுடைய அரபு நாடுகளில் கூட கடைக்கு கடை ஒரு உண்டியல் வைத்திருப்பார்கள். அது அந்த நாட்டின் குடிமக்களுக்காக அல்ல. அடுத்த நாட்டுக்கு அனுப்பி வைக்க. அப்படி இந்தியா வளர்ந்து விட்டால் பாலாவின் தேவையே இங்கு இருக்காது.
அதை நோக்கி பயணிப்போம். பாலா ஒன்றை மட்டும் மனதில் வைக்க வேண்டும். பெரும் வள்ளலாக இருந்த யாருமே ஓஹோவென்று வாழ்ந்த சரித்திரம் இங்கு கிடையாது. கல்வெட்டுகளில் பெயர் மட்டுமே மிஞ்சும். தேவை இருப்பவன் பெற்றுக்கொள்ளட்டும். கொடுக்கும் பாலா கொடுக்கட்டும். (இந்தப்பதிவு கூட எனக்கான attention seeking தான் எனச்சொல்லிக்கொண்டு….)’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
பாலாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ஆனால், அவர் மட்டும் மவுனமாகவே இருந்து வருகிறார்.