
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த மாதம் 6ம் தேதி அன்று உடல்நலக்குறைவினால் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூவமாக அறிவித்திருந்தது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருவதால், ஜூன் 1ம் தேதி நடைபெறும் கடைசிக்கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தலும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
ஜூன் 1ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் வைத்தால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி.
இந்த நிலையில் 7-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இல்லாததால் ஜூன் 1-ல் விக்கிரவாண்டி தொகுதி இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களின் 54 மக்களவை தொகுதிகளுக்கு ஜுன்1ம் தேதி அன்று 7-வது கட்ட, அதாவது இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிவிப்பு இல்லாததாலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்? என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.