
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் தொழில் அதிபர் எலான் மஸ்கிற்கு இடையேயான சண்டை சமூக வலைத்தளத்தில் எல்லை மீறிச் செல்கிறது. இது இருவரின் தனிப்பட்ட பிரச்சனை என்பதைத் தாண்டி அந்நாட்டின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தொடர்புடையது என்பதை இரண்டு பேரும் நினைவில் கொள்வதாகத் தெரியவில்லை.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதும், அரசின் செலவினங்களைக் குறைப்பதற்காக, எலான் மஸ்க் தலைமையில் ‘Department Of Government Efficiency’ என்ற துறை உருவாக்கப்பட்டது. இத்துறையின் அறிவுறுத்தலின்படி டிரம்ப் அரசு பல்வேறு மாற்றங்களை நிர்வாகத்தில் செய்து வந்தது.
One Big Beautiful Bill:
அனைத்தும் எலான் மஸ்க் நினைத்தபடி சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்படத் தொடங்கியது. அதற்குக் காரணம் ‘One Big Beautiful Bill’ என்ற மசோதாதான்.
இதில், எலான் மஸ்க் குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருந்ததே மஸ்கின் கோபத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக, மக்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, எல்லை பாதுகாப்பிற்கும் இராணுவத்திற்கும் செலவினங்களை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகளை மஸ்க் எதிர்த்தார். மேலும் இத்தகைய நடவடிக்கைகள் நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். இந்த எதிர்ப்பின் உச்சமாகத் தனது அரசு பதவியிலிருந்தும் வெளியேறினார் மஸ்க்.
ஆனால், மஸ்கின் கோபத்திற்கு இது காரணம் இல்லை எனச் சொல்லப்படுகிறது. மஸ்கின் தொழில்களில் முதன்மையானது மின்சார வாகன உற்பத்தி மற்றும் விற்பனை. மின்சார வாகன உற்பத்திக்கு அமெரிக்க அரசு மானிய உதவி வழங்கி வருகிறது. இந்த மானியத்தை நிறுத்தும் திட்டமும் One Big Beautiful Bill-ல் இடம்பெற்றுள்ளது. இதுதான் மஸ்கின் கோபத்திற்குக் காரணம்.
Donald Trump VS Elon Musk:
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மசோதாவில் உள்ள அனைத்தும் மஸ்கிற்கு நன்கு தெரிந்த நிலையில், அவர் இப்படிப் பேசுவது தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக டிரம்ப் கூற அதற்கு மஸ்க் அளித்த பதில் தான் இந்த பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். டிரம்ப் பொய் சொல்வதாகவும், மசோதாவில் இருப்பதை தன்னிடம் ஒருமுறை கூட காண்பிக்கவில்லை என்றும் கூறியதுடன், டிரம்பின் வெற்றிக்குத் தான் தான் காரணம் என்றும், அவர் நன்றி மறந்திருக்கக் கூடாது என்றும் கடுமையாகச் சாடினார் மஸ்க்.

பதிலுக்கு, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளிப்பதை நிறுத்தினாலே பாதி செலவு குறைந்துவிடும் என டிரம்ப் கூற, பதிலுக்கு மஸ்க், ‘அப்படி என்றால் விண்வெளியில் சிக்கியுள்ள உங்கள் வீரர்களை நீங்களே பூமிக்கு அழைத்து வாருங்கள். டிராகன் விண்கலத்தை நான் செயல்படுத்துவதாக இல்லை’ எனக் கூறியுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வந்ததை போல் மற்ற வீரர்களையும் அழைத்து வருவதுதான் மஸ்க் குறிப்பிடும் விஷயம்.
இதுமட்டுமின்றி டிரம்பை பதவி நீக்கம் செய்து, அதற்குப் பதிலாக ஜே.டி.வான்ஸ் ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டும் முன் வைத்துள்ளார்.
டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு:
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டின் என்பவர் அமெரிக்காவில் பைனான்சியராகவும் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். இவர் 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுமிகளைக் கடத்தி செல்வாக்கு மிக்கவர்களுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக 2018ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். பிறகு, இவருக்கு எதிராகப் பலர் சாட்சி கூறினர்.
இவ்வழக்கு தொடர்பாக உருவாக்கப்பட்டதுதான் Epstein Files எனப்படும் ஆவணம். எப்ஸ்டினுடன் கிட்டத்தட்ட 150 பேர் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலம் 950 பக்க அறிக்கையாக உள்ளது. இதனை 2024ல் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், வெளியிடப்படவில்லை. இதற்குக் காரணமாக மஸ்க் சொல்லும் விஷயம் தான் அடுத்த ஷாக்.

எப்ஸ்டின் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் டிரம்பும் ஒருவர். அதனால் தான் அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது என மஸ்க் கூறியுள்ளார்.
இப்படி மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வது இவர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்பதைத் தாண்டி, அந்நாட்டிற்கு என சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விண்வெளித்துறை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை இன்றி இயங்காத நிலை உள்ளது. அதன் பல திட்டங்களை மஸ்க் நிறுவனம்தான் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களிலும் அவரது நிறுவனம் தொடர்பில் உள்ளது. இந்நிலையில் தான் மஸ்க் முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
அரசு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அபரிவிதமான நிதியுதவி அளித்து, அதனை வளர்த்து விட்டதின் விளைவினையும், பெரும் முதலாளியின் பண உதவியுடன் வெற்றிபெற்ற ஒரு அரசியல்வாதியின் அதிகாரப் போக்கையுமே இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. இதனால் தான், ஒரு அரசு மக்களின் பணத்தில் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை வளத்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.