
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. தந்தை – மகன் இடையே பேச்சு வார்த்தை 40 நிமிடங்கள் மட்டுமே நடந்திருக்கும் நிலையில் குருமூர்த்தி 3 மணி நேரத்திற்கும் மேலாக பேசி இருப்பதால் அன்புமணியை விடவும் பாஜகவே அதிகம் ராமதாசிடம் போராடுவது தெரிகிறது.
ஓபிஎஸ்சை தர்மயுத்தம் செய்ய உத்தரவிட்டு, அதிமுகவை இரண்டாக உடைத்த குருமூர்த்திதான் இப்போது தைலாபுரம் தோட்டத்திற்குள் நுழைந்திருக்கிறார் என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்.

அதிமுக போலவே பாமகவும் இப்போதும் பாஜக பிடிக்குள் போய்விட்டது. பார்ப்பனர்களை கட்சியில் சேரமாட்டேன் என்று பாமகவை துவக்கின நேரத்தில் சொன்னார் ராமதாஸ். ஆனால் இப்போது பாமகவின் குடும்ப சண்டையை தீர்க்க குருமூர்த்தான் தேவைப்படுகிறார் என்கிறார் இராசேந்திரன்.
தமிழக பாஜகவில் இருக்கும் ‘சூத்திர’ அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை போன்றோர்களுக்கு சாலை ஓரத்தில் நின்று கூவுவதற்குத்தான் உரிமை இருக்கிறது. கட்சியின் அதிகாரம் எல்லாம் மக்கள் அறியாத ஆடிட்டர் குருமூர்த்திக்கே உள்ளது என்கிறார் இராசேந்திரன்.

திராவிட மாடல் எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது பாஜக என்று சொல்லும் இராசேந்திரன், உண்மையில் பாமகவில் இப்போது நடப்பது ஆரிய திராவிட போராட்டம்தான் என்கிறார். இந்த போராட்டத்தில் நிச்சயம் திராவிடம் வென்றே தீரும் என்கிறார்.