
கடந்த 7ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கார் மோதியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அந்த வழக்கறிஞர் வாகனத்தை நிறுத்திவிட்டு சத்தம் போட்டுக்கொண்டு ஓடிவந்து கார் கதவைத் திறக்கச்சொன்னதும், காரில் திருமாவளவன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு, விவிஐபி என்பதால் எதுவும் சொல்லாமல் அந்த வழக்கறிஞர் திரும்பியதாகவும், அப்போது அவரை அடிக்கச்சொல்லி திருமாவளவன் உத்தரவு போட்டதால் அவரின் ஆதரவாளர்கள் அந்த வழக்கறிஞரை அடித்து உதைத்ததில் போலீசார் வந்து வழக்கறிஞரை காப்பாற்றி அழைத்துச் சென்றதாகவும், மூன்று மணி நேரம் கழித்துதான் மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்றும் அந்த வழக்கறிஞரின் சகோதரர் சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். சம்பவம் தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.

திருமாவளவன் இந்த குற்றச்சாட்டினை மறுத்திருந்தார். அவர், தன் வண்டிக்கு முன்னால் சென்ற அந்த இளைஞர் தான் வண்டியில் இருப்பதை பார்த்துவிட்டு வேண்டுமென்றே வம்பு இழுத்தார். அவர் வண்டியில் என் வாகனம் மோதவில்லை, என் வண்டியிலும் அவர் வாகனம் மோதவில்லை. ஆனால் விபத்து என்று சித்தரிக்கிறார்கள். இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று என்னுடன் வந்தவர்களை கேட்டுக்கொண்டேன். ஆனால் விபத்து என்று பொய்ச் செய்தியை பரப்பி சமூக பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில், ‘’உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -7 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி’ என்பது தெரியவருகிறது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும். அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திட வேண்டுமென கோருகிறோம்’’என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.