
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் சிறைத்தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள், கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உட்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களில் இவர்கள் பங்கு பெற்றனர்.
இந்த சூழலில், 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் இவர்கள் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமின் மனு பல்வேறு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
8 பேர் சார்பாக கத்தார் நீதிமன்றத்தில் இந்திய அரசு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கத்தார் நீதிமன்றம், 8 பேரின் மரண தண்டனையை சிறைத்தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.