
அதிகாரப் போட்டியில் ராமதாசை பலவீனப்படுத்தும் முயற்சியில் அன்புமணியும், சவுமியாவும் ஈடுபடுகின்றனர். பதிலுக்கு அன்புமணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றார் ராமதாஸ் என்று பாமக மோதலை சுருக்கமாகச் சொல்கிறது தைலாபுரம் மற்றும் பனையூர் வட்டாரம்.
ராமதாசை மீறி கூட்டணி பேச எங்கே சென்றாலும் பெரியவருடன் வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்படுகிறார் அன்புமணி. இதனால் ராமதாசிடம்தான் இருக்கிறது அன்புமணியின் அதிகாரம் என்றாகிவிட்டது. இதை மாற்றவே, தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கவே மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம், நடைபயணம் என்ற முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் அன்புமணி.

கடந்த 19ம் தேதி அன்று சேலத்தில் நடந்த பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, கட்சியின் பிரச்சனைகள் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, ராமதாசை ஒரு தீயசக்தி ஆட்டிப் படைப்பதாகவும், அந்த தீய சக்தி சொல்வதைத்தான் ராமதாஸ் கேட்பதாகவும், பாடுபட்டு வளர்த்த பாமகவை அந்த தீய சக்தி அழிக்கத் துடிப்பதாகவும், இதை சும்மா விடக்கூடாது என்றும் ஆவேசப்பட்டார்.
அந்த தீய சக்தி யார்? என்று சொல்லாமல், மறைமுகமாக பேசிவிட்டதால் பாமகவினரிடையே அந்த தீய சக்தி யார்? என்ற சலசலப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், ‘’சுசீலாவைத்தான் தீய சக்தி என்று சொல்கிறார் அன்புமணி’’ என்று தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சித் தலைவர் சி.என்.ராமமூர்த்தி.

’’தின்டிவனத்தில் தொண்ணூறுகளில் ராமதாஸ் 2 ரூபாய் டாக்டராக இருந்த காலத்தில் அவரிடம் நர்ஸ் ஆக இருந்தவர் சுசீலா. இப்போது அவர் சென்னையில் வசிக்கிறார். அவர் பெயரில்தான் விஸ்வகர்மா அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார் ராமதாஸ். அந்த அறக்கட்டளையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அவர்தான் ராமதாசுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
‘அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். அனாதையாகப் போய்விடுவீர்கள். நீங்கதான் பாமக. நீங்கதான் அதிகார மையம். மகனிடம் இந்த அதிகார மையம் போய்விட்டால் உங்களுக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும் ’என்று ஆலோசனை மட்டும் சுசிலா சொல்கிறார். மற்றபடி, ராமதாசை அவர்தான் முழுமையாக ஆட்டிப்படைக்கிறார் என்று சொல்ல முடியாது’’ என்று தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.

ராமதாசுக்கு அந்தப்பெண் ஆலோசனைகள் வழங்குவது உண்மைதான். ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, 2026 தேர்தல் வரையிலும் தலைவராக இருப்பதாகச் சொன்னார். அப்போது ராமதாசுக்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பேசி முடித்த உடனே, இறுதி மூச்சு உள்ளவரைக்கும் நானே தலைவராக இருப்பேன் என்று மாறிவிட்டார் என்கின்றனர் அன்புமணி அலுவலகம் அமைந்திருக்கும் பனையூர் வட்டாரத்தினர்.