
ஷங்கருக்கு முன்பு தமிழ்சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்பட்டவர் கதிர். ’இதயம்’ மூலம் டி.ராஜேந்தருக்கு பிறகு ஒரு தலைக்காதலை பிழிந்து எடுத்துக் கொடுத்தவர் கதிர்.
இப்போதும் ஒருதலைக்காதலர்கள் கொண்டாடும் பாடல் ‘இதயமே இதயமே..’தான். இப்போதும் கல்லூரிகள் கொண்டாடும் பாடல் இவரின் காதல் தேசம் படத்தின் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல்தான்.
காதல் வைரஸ் படத்திற்கு பிறகு காணாமல் போனவர் அவ்வப்போது முகம்காட்டி, மீண்டும் படம் இயக்கப்போவதாக சொல்லி வருவார். இப்போது முகம்காட்டி, வேதாத்திரி மகரிஷியை நாடி பிரம்ம ஞானம் பெற்றதாகச் சொல்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கதிர், சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் படித்தார். கை செலவுக்காக பகுதி நேர வேலை தேட ஆரம்பித்து, ஓவியர் என்பதால் சினிமாவுக்கு போஸ்டர் டிசைன் வேலை கிடைத்தது. பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்தார் கதிர். தொடர்ந்து டார்லிங்.. டார்லிங்.. படத்திற்கு போஸ்டர் டிசைன். மணிரத்னத்தின் முதல் படமான பகல் நிலவு படத்திற்கும் போஸ்டர் டிசைன்.
இதயம் படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர், உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் படங்களின் மூலம் முன்னணி இயக்குநர் ஆனார். தொண்ணூறுகளில் காதலர்களின் தேசமாக இருந்தது இதயம் சினிமா. காதல் தேசம், காதலர் தினம் படங்கள் காதலர்கள் கொண்டாடித் தீர்த்த சினிமாக்கள். கதிர் படத்தின் பாடல்கள் அனைத்துமே கொண்டாடப்படும்.

இவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த சசி, மிஸ்கின், வெற்றிமாறன், கருணாகரன் எல்லாம் பெரிய இயக்குநர்களாகி விட்டனர். த்ரிஷா ‘மிஸ் சென்னை’ அழகியாக தேர்வான குழுவில் ஒருவர் கதிர்.
காதல் வைரஸ் படத்தின் தோல்விக்கு பிறகு கதிரால் எழ முடியாமல் போய்விட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கப்போவதாகவும், மாணவர்கள் தேசம் என்று படம் எடுக்கப்போவதாகவும் அவ்வப்போது பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் எதுவும் கை கூடவில்லை.

இந்த நிலையில் தனக்கு ஏற்பட்டதை, பாதிக்கப்பட்டதை, அதிலிருந்து மீண்டதை எல்லாம் ’ஆனந்த வாழ்க்கை’ படத்தின் விழாவில் மனம் திறந்தார்.
வேதாத்திரி மகரிஷியின் மன வள கலை பற்றிய படம் இது. இந்த படத்திற்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம்?
’’வேதாத்திரி மகரிஷியை என்னைக்கு நான் கை பிடிச்சேனோ அன்னைக்கே என் வாழ்க்கையின் துன்பம் எல்லாம் போச்சு. நிறைய படங்கள் பண்ணேன்.. காசு, பேரு, புகழ் எல்லாம் இருந்துச்சு. திடீர்னு ஒருநாள் படம் தயாரிச்சு தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் பண்ணேன். ரொம்ப நஷ்டம். பயங்கர டென்ஷன், பிராபளம், குடி, நோய்னு பல்வேறு பிரச்சனைகள். துன்பம் வரும்போது பாருல போய் குடிப்பேன், வீட்டுல போய் பிரச்சனைன்னு வருசம் பூரா துன்பத்தை தூக்கி அலஞ்சிக்கிட்டே இருந்தேன்.

வாழ்க்கையில புயல் வந்துடுச்சு. அந்த மாதிரி டைம்லதான் நடிகர் ராஜேஸ் மூலமாக தேவகோட்டை தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் அறிமுகமாகி அவர் மூலம் வேதாத்திரி மகரிஷியின் கை பிடித்து மன வளக்கலை பயின்றேன். பின்னர் பிரம்ம ஞானம் முடித்தேன். ஆழியாறில் பிரம்ம ஞானம் இப்போதுதான் முடித்தேன். இப்போது என் வாழ்க்கையில் துன்பம் எல்லாம் போச்சு. உண்மையான சந்தோசங்கிறது உன்னை அறியுறதுதான். வேதாத்திரி மகரிஷி மூலமாக என்னை நான் அறிந்தேன். என் குடும்பத்தினரையும் மன வளக்கலை பயலச் செய்திருக்கிறேன்’’ என்கிறார்.