
காமராஜரிடம் அரசியல் பயின்றார். காந்திய வழியில் நடந்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை மட்டுமின்றி, வடமாநிலங்களிலும் அவர் பாதம் படாத பகுதிகள் இல்லை என்கிற அளவில் நடந்தே சென்றார். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சியின் தலைவராகப் பல நிலைகளுக்கு உயர்ந்தார். எந்த நிலையும் இல்லாவிட்டாலும் தமிழின் குரலாக ஒலித்தார். அரசியலில் இனி பார்க்க முடியாத அபூர்வ மனிதர்களில் ஒருவர், குமரிஅனந்தன்.
பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவரும் தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜனின் அப்பா என்றுதான் அவருடைய மரணத்தின்போது அடையாளம் காட்டப்படுகிறது. குமரிஅனந்தனோ பாரதிய ஜனதா கட்சியின் மதவாதத்திற்கு நேரெதிரான காந்தியவாதி. காமராஜரின் உண்மைத் தொண்டர். ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் காமராஜருடன் இணைந்து நின்று, காமராஜர் மறைவுக்குப் பிறகு, ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றவர். இந்திரா காங்கிரஸை தோற்கடித்து ஜனதா (ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி) ஆட்சி நடைபெற்ற போது, நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். ஏழை எளிய மக்கள் தங்கள் சொந்தங்களுக்கு பணம் அனுப்பப் பயன்படுத்தும் மணியார்டர் படிவத்தில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தமிழில் அதனை வெளியிடச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நிறைவேறிடச் செய்த பெருமை குமரி அனந்தன் அவர்களுக்கு உண்டு.
ஜனதாவிலிருந்து விலகி காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் கண்டவர். சட்டமன்றத்திலும் அழகிய-இனிய தமிழில் அவரது குரல் ஒலித்தது. தமிழ்நாட்டு அரசியலில் எதிர்துருவங்களான எம்.ஜி.ஆர்-கலைஞர் கருணாநிதி இருவரிடமும் சம அளவிலான நட்புடன் இருந்ததுடன், தன் மகள் திருமணத்தில் இருவரையும் ஒரே மேடையில் பங்கேற்க வைத்து அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் குமரி அனந்தன். பின்னர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அரசியல் சூழல்களைப் புரிந்து கொள்ளாமல் சுழல்களில் அவர் சிக்கிக்கொண்ட 1996 நாடாளுமன்ற-சட்டமன்றத் தேர்தல், கடினமான அனுபவத்தை அவருக்குத் தந்தது. அரசியலில் கிடைத்த வெற்றி-தோல்விகளைக் கடந்து அவர் எப்போதும் தமிழ் மீது தணியாத காதல் கொண்டவராகவே இருந்தார். இலக்கியச் செல்வர் என்று அனைத்துக் கட்சியினரும் அவரை அன்புடன் குறிப்பிடும் அளவிற்கு அவருடைய தமிழார்வமும், சொற்பொழிவும் அமைந்திருந்தன.
பொதுவாக, மேடையில் பேசுபவர்கள் நிகழ்ச்சி அழைப்பிதழில் உள்ள அத்தனை பெயர்களையும் படிக்கும்போது, எதிரில் இருப்பவர்கள் கொஞ்சம் களைப்படைவார்கள். ஆனால், குமரி அனந்தன் அந்தப் பெயர்களைக்கூட தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்களின் இசை நயத்துடன் படித்து, பார்வையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்துவார். உவமைகளுடனான அவருடைய சொற்பொழிவுகள் மாற்றுக் கட்சியினரையும் மெய்மறந்து கேட்கச் செய்யும் வலிமை கொண்டவை. 1990களின் முற்பகுதியில் அக்னி என்ற அமைப்பு நடத்திய தற்காலை-இடைக்கால-சங்ககாலத் தமிழ் என்ற மூன்று நாள் கருத்தரங்கில், இடைக்காலத் தமிழ் என்ற தலைப்பில் பக்தி இலக்கியங்களின் சாரத்தை சுவைபடப் பொழிந்தவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன். அவர் பேசிய அடுத்த நாள், சங்கத் தமிழ் என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதி உரையாற்றினார். அரசியலில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் இருவரையும் தமிழ் இணைத்திருந்தது.
1989-91 ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் துணைத்தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாதங்களில் அனல் பறந்தாலும் அதில் தமிழ் எனும் குளிர்தென்றல் வீசிக்கொண்டே இருக்கும். காந்திய கொள்கைகளான மதுவிலக்கு, மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பல ஆயிரம் மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டவர் குமரி அனந்தன். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது முழுமையான மதுவிலக்கு என்ற தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அளிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் குமரி அனந்தன்.
தன்னைப் பற்றியான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் அரசியல் வழிகாட்டிகளானத் தலைவர்கள் வகுத்த பாதையில் தொடர்ந்து நடந்தவர் அவர். தமிழும் தேசியமும் அவரது இரு கண்களாக இருந்தன. மாற்றுக் கட்சியினரும் மதித்துப் போற்றும் பண்பாளராகத் திகழ்ந்தார். தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கிச் சிறப்பித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆடம்பரமயமாகிவிட்ட அரசியலில் குமரி அனந்தன் போன்றவர்கள் எப்போதுமே ஆச்சரியம்தான்.
psh5k5
oIQ rUYMJMCW YhDcawOx eeURLpC bWYtqkdg fbWO fHVA