
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள முருகன் கோவில் அறுபடை வீடுகளுள் ஒன்று. இதை கந்த மலை என்று பல ஆண்டுகளாக இந்துக்களும், சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்களும் சொல்லி வருகின்றனர். இதனால் ஸ்ரீகந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் இது ஸ்கந்தர் மலைதான் என்றும், கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சி நடக்கிறது என்றும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான போராட்டங்களும் வழக்குகளும் நடைபெற்று வரும் நிலையில், அறுபடைகளை பாதுகாப்போம் என்று மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் மாநாட்டை நடத்துகிறது இந்து முன்னணி.
இந்த மாநாட்டிற்கு எதிரான பேரணியில் பங்கேற்ற இயக்குநர் அமீர், ‘’இந்துக்களையும் இஸ்லாமியர்களையு பிரித்து வைத்து அரசியல் செய்தால்தான் அவர்கள் இங்கே வாழவே முடியும்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் மலையை ஸ்ரீகந்தர் மலை என்றும், அதை சிக்கந்தர் மலையாக மாற்றிவிட்டார்கள் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்’’ என்று ஆவேசப்படுகிறார்.
அவர் மேலும், ‘’நட்புறவோடு இருக்கக்கூடிய மதுரை மக்களிடையே திருப்பரங்குன்றம் பிரச்சனையை கையில் எடுத்தது மிகப்பெரிய தவறு. இதை அனுமதிக்கவே முடியாது. வட நாட்டில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் கொண்டு வர நினைத்தால் மக்கள் நிம்மதியாகவே வாழ முடியாது’’ என்கிறார்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அமீர், ‘’நான் இந்த மதுரையில் பெரும்பான்மை இந்துக்களோடு வாழ்ந்தவன். மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில்தான். முருகன் இரண்டாம் பட்சம்தான். முருகன் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது பழநிதான். அப்புறம் திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று என்றாலும் கூட வரிசைப்படுத்தி பார்த்தால் இது முதலிடத்தில் இருக்காது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. அப்படிப்பட்ட பெரிய மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 500 மீட்டர், 1000 மீட்டர் தூரத்திலேயே சர்ச், பள்ளி வாசல்கள் உள்ளன. இதிலிருந்தே மதுரை மக்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புரியும்.

ஆன்மீக மாநாடு என்ற பெயரில் அரசியல் செய்வதால்தான் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முதலில் தடை போடப்பட்டது. மாநாடு நடத்தும் இவர்களின் நோக்கம் என்னவென்று தெரிவதால்தான் நீதிமன்றம் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருக்கிறது.
வேல் யாத்திரை ஒன்றை தொடங்கி அதில் தோற்றுவிட்டார்கள். திடீரென்று முருகன் மேல் இவர்களுக்கு இவ்வளவு பக்தி வரக்காரணமென்ன? முருனை வணங்கும், அந்த முருகனுக்கான மாலை போட்டுச்செல்லும் பக்தர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களுக்கும் இந்த மாநாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்கிறார்.
’’மதுரையில் நடக்கும் இந்த முருகன் மாநாட்டிற்கு காரணம் பாஜகதான். இல்லை என்றால், மாநாட்டின் போஸ்டர்கள், கட் அவுட்களில் எல்லாம் மோடியும், அமித்ஷாவும் ஏன் இருக்கிறார்கள்? முருகன் மாநாட்டிற்கும் மோடி, அமித்ஷாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?’’ என்று கேட்கும் அமீர்,
’’இந்து முன்னணி இந்த மாநாட்டை நடத்துவதாக வெளியே தெரிந்தாலும் இது பாஜக பின்னணியில் இருந்து இயக்குகின்ற மாநாடு. அதனால்தான், ‘’இப்போது முருகனை கையில் எடுத்திருக்கிறோம். 2026இல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் என்று சொல்கிறார் நயினார் நாகேந்திரன். அதனால்தான் இதை ஆன்மீக மாநாடு என்று சொல்ல முடியாது. இது அரசியல் மாநாடுதான்’’என்று அடித்துச் சொல்கிறார்.
’’தமிழ்நாட்டை பிடிக்க வேண்டும் என்ற வேண்டுதல் பாஜகவிடம் இருந்தால் அவர்கள் நேரடியாக முருகனிடம் சென்று வேண்டுதலை வைக்கட்டும். அதற்காக முருக பக்தர்கள் என்ற பெயரில் மக்களை திரட்டி பிளவுபடுத்த வேண்டாம்’’ என்று கேட்டுக்கொள்ளும் அமீர்,

’’அதிகாரத்தை அடைவதற்காக ஆன்மீகத்தை கையில் எடுக்காதீர்கள். ராமரை தூக்கிக்கொண்டு இந்தியா முழுவதும் ரத யாத்திரை செய்தவர்கள் முருகனை தூக்கிக்கொண்டு இந்தியா முழுவதும் ரத யாத்திரை செல்வார்களா? செல்லமாட்டார்கள். ஏன்னென்றால் மாநிலத்திற்கு மாநிலம் பாஜக ஒரு கடவுளை கையில் எடுத்துக்கொள்கிறது. கேரளாவுக்கு போனா ஐயப்பன், ஒடிசாவுக்கு போனா பூரி ஜெகன்னாத், அயோத்தி போனா ராமர் என்று இப்படி மாநிலத்திற்கு மாநிலம் பாஜக ஒரு அரசியலை கையில் எடுக்கிறது.
தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்வதற்கு எப்படி சட்டம் அனுமதி அளிக்கிறதோ, அதே மாதிரிதான் அதை தடுப்பதற்கும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் எங்களுக்கும் உரிமை உண்டு’’என்கிறார்.
’’நான் இந்த மதுரை மண்ணில் பிறந்து வளர்ந்தவன். என் கண் முன்னாடி இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ’’என்று கேட்கும் அமீர், ’’மாநாட்டை சம்பவம் என்று சொல்வது ஏன் என கேட்கலாம். மாநாடுதான்; ஆனால் அந்த மாநாட்டின் நோக்கம் என்ன?
இந்து மாநாட்டில் ஏன் இஸ்லாமியர் அமீர் மூக்கை நுழைக்கிறார் என்று கேட்கிறார்கள். மதுரையை பொருத்தமட்டிலும் இந்து ஆன்மீகத்திற்கும் இஸ்லாமிய ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறது. மதுரையை சுற்றி இருக்கும் பல இந்து கோயில்களின் அனைத்து விசயங்களிலும் இஸ்லாமியர்களின் பங்கெடுப்பு உள்ளது. அதனால் மதுரையை வட நாடு போல் நினைத்து விடாதீர்கள். அதற்கு வாய்ப்பே கிடையாது.
இதே மதுரையில் சித்திரை திருவிழா நடக்கிறது. இந்துக்கள் கூடுகிறார்கள். அதற்கு இஸ்லாமியர்கள் உணவு, குடிநீர் தருகிறார்கள். அந்த சித்திரை திருவிழாவை ஏன் நாங்கள் தடுக்க நினைக்கவில்லை. தேர்தலுக்காக முருகனை பயன்படுத்துகிறார்கள் என்பதால்தான், காவி பரவக்கூடாது என்பதற்காகத்தான் இந்த முருகன் மாநாட்டை தடுக்க நினைக்கிறோம்’’என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

’’மத நல்லிணக்கத்திற்காக நான் அலகு குத்திக்கொண்டு காவெடி எடுக்கத் தயார். எச்.ராஜா தயாரா? ’’என்று சொல்லும் அமீர்,
’’மதக்கலவரம் இல்லாத இந்த மதுரை மண்ணில் மதக்கலவரத்தை தூண்டி விடுவார்களோ என்ற பதட்டம் என்னிடம் இருக்கிறது. இது நீதிமன்றத்திற்கும் தெரியும் என்பதால்தான் முருகன் மாநாட்டிற்கு இத்தனை நிபந்தனை விதிக்கிறது.
‘இந்துக்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கம் என்ன சொல்கிறது? திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையை இவர்களாகவே எழுப்பி, அறுபடை வீடை காப்பாற்றுவோம் என்று முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுமானால் ஆன்மீக மாநாடு நடத்தும். ஆனால் இஸ்லாமிய கட்சிகள் ஆன்மீக மாநாடு நடத்தாது. இஸ்லாமிய அமைப்பு கூட்டிய மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டார்கள். அதற்காக அவர்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்லவில்லை.
திமுகவை அகற்றுவதற்கு இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று சொல்கிறார்கள். திமுக என்ன இந்து விரோத அரசா? அப்படி இந்து விரோத அரசாக இருந்தால் எப்படி 6ஆவது முறையாக ஆட்சியில் இருக்க முடியும்? தீபாவளிக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்லாவிட்டால் இந்து விரோத கட்சியா? திமுகவுக்கு வாக்களிப்பது பெரும்பான்மை இந்துக்கள்தானே?
இந்து முன்னணியும், பாஜகவும்தான் இந்துக்களுக்கு எதிரானவை. இந்து முன்னணி என்று சொல்கிறார்கள். இவர்கள் எந்த இந்துக்களின் பேரிடர்களில் முன் நின்றார்கள். இந்துக்களுக்குள் சண்டையைத்தான் இழுத்து விடுகிறார்கள்’’ என்கிறார்.
’’அறுபடை வீடுகளை பாதுகாப்போம் என்று மாநாடு நடத்தினால் அறுபடை வீடுகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது அபத்தம். அதனால்தான் இந்த மாநாட்டிற்கு எதிரான பேரணியில் பங்கேற்றேன்’’ என்று சொல்லும் அமீர்,

’’முருகனுக்கு எதிரானவர்கள் நாங்களும் அல்ல; எங்களுக்கு எதிரானவர் முருகனும் அல்ல. ஆனால் முருகனை சுமந்து வருகிற அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள். அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்.
நாம் தமிழரும் முருகனை சுமந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் ஒருநாளும் முருகனை வைத்து அரசியல் செய்யவில்லை. நாம் தமிழர் முருகனை முன்நிறுத்துவதற்கும் பாஜக முருகனை முன் நிறுத்துவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
தமிழர் கடவுள் முருகனை வட மாநிலத்தவர்கள் கையில் எடுப்பதுதான் ஆபத்து. தமிழ்நாட்டு ஒரு அமைதியான பூமியாக இருக்கிறது. அதனால்தான் இதில் பிரிவினை ஏற்படுத்த துடிக்கிறார்கள்’’என்கிறார் கவலையுடன்.